Wednesday, June 3, 2009

தொடரும் இந்தியாவின் துரோகம் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா.வில் தோற்கடிப்பு.

இலங்கை படையினர் கடந்த 5 மாத காலத்திற்குள் நடத்தி முடித்த தமிழ் இனப் படுகொலையில் அரங்கேற்றப் பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் முன் வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா உள்ளிட்ட 22 நாடுகள் எதிராக வாக்களித்து இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை நியாயப் படுத்தியுள்ளன.

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற சிறப்பு மாநாட்டில் இலங்க அரசால் நடத்தப்பட்ட தமிழ் இனப்படு கொலையில் அரங்கேறிய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தை ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் சுவிற்சர்லாந்து அரசாங்கம் முன்வைத்திருந்தது.

தொடக்கம் முதலே இந்த தீர்மானத்திற்கு எதிராக இந்தியா தலைமையிலான ஆசிய நாடுகள் செயற்பட்டு வந்தன.

இதனால், இந்த தீர்மானம் குறித்து பல்வேறு கருத்து முரண்பாடுகள் எழுந்ததால் தீர்மானத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்திய பின்னர் அது நேற்று புதன்கிழமை மாலையில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.

இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக மேற்குலக நாடுகள் வாக்களித்தன. குறிப்பாக சுவிற்சர்லாந்து, ஜேர்மனி, பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி, கனடா, சிலி, மெக்சிக்கோ உள்ளிட்ட நாடுகள் வாக்களித்தன.

இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, இந்தோனேசியா, கியூபா, ரசியா மற்றும் ஆபிரிக்க நாடுகளும் இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. எட்டு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்வதை தவிர்த்தன.

வாக்கெடுப்பின் முடிவில் தீர்மானத்திற்கு ஆதரவாக 17 நாடுகளும் எதிராக 22 நாடுகளும் வாக்களித் திருந்ததால் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான இந்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது அது தோல்வியடைந்துள்ளது.

இதேவேளையில் இதே கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கமும் தனது ஆதரவு நாடுகளின் ஆசியுடன் அனைத்துலக நாடுகளிடம் நிதியுதவி கோரும் தீர்மானம் ஒன்றையும் முன் வைத்தது.

இந்த தீர்மானம் மீதான விவாதமும் நேற்று இடம்பெற்றது.

இலங்கை அரசாங்கத்திற்கு நிதியுதவி வழங்கும் இந்த தீர்மானத் திற்கும் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளும் ஆபிரிக்க நாடுகளும் ஆதரவாக வாக்களித்தன. ஐரோப்பிய நாடுகள் நிதியுதவி வழங்குவதற்கு எதிராக வாக்களித்தன.

எனினும் வாக்கெடுப்பின் நிறைவில் இலங்கையின் நிதியுதவி கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக 29 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்திருந்தன. எட்டு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

இதனால் இலங்கை முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நிதியுதவி வழங்குவது என முடிவாகியுள்ளது.

இதனிடையே, இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள 41 முகாம்களில் மூன்று லட்சம் மக்கள் வசிப்பதால் மிகப் பெரிய இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் பிரதிநிதி கவலை வெளியிட்டுள்ளார்.

நன்றி: http://www.thenseide.com/


0 comments:

Post a Comment