Friday, July 3, 2009

மாத்திரையின் மூலம் ஆண்களுக்கு கருத்தடை சாதனம் கண்டுபிடிப்பு.

மாத்திரை வடிவில் ஆண்களுக்கான தற்காலிக கருத்தடை சாதனம் கண்டுபிடிப்பு- இளையான்குடி பேராசிரியர் ஆபிதீனுக்கு டாக்டர் பட்டம் : இளையான்குடி டாக்டர் சாகீர் உசேன் க‌ல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் ஆபிதீன் தனது ஆராய்சிப் படிப்பை முடித்து. மணோன்மனியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.Image
கடலியல் தாவரங்களைப் பயன்படுத்தி ஆண்களுக்கான கருத்தடை சாதனம் மாத்திரை வடிவில்; தயாரிப்பதற்கான முயற்சியில் மணோன்மனியம் சுந்தரனார் பல்கலைகழகத்திற்குட்பட்ட நாகர்கோவில், இராஜாக்கமங்களம் கடலியலியல் ஆராய்சி மையத்தில் பகுதிநேர மாணவராக பதிவுசெய்து கொண்டு ஆராய்சியை STUDIES ON THE IN VITRO HUMAN SPERM MOTILITY INHIBITING ACTIVITY OF MARINE HALOPHYTES AND IN VIVO TOXICOLOGICAL EVALUTION IN ALBINO MICE  - என்ற தலைப்பில் தொடங்கினார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக செய்து வந்த ஆராய்சிகட்டுரை சமர்ப்பிக்கப்பட்டு சமீபத்தில் இதற்கான வைவா நாகர்கோவில் கடலியல் ஆராய்சி மையத்தில்; நடைபெற்றது. சுமார் 350 பல்கலைகழக ஆராய்சி மாணவர்கள் முன்னிலையில், 3 மூன்று மணிநேரம் நடைபெற்ற இந்த வைவா தேர்வின். இறுதியில் மதுரை காமராஜர் பல்கலைகழக பேராசிரியர் டாக்டர் சாமுவேல் பால்ராஜ் பேராசிரியர் ஆபிதீனுக்கு டாக்டர் பட்டம் முறைப்படி அறிவித்தார்.
மேலும் இது குறித்து டாக்டர் பால்ராஜ் சாமுவேல் கூறும் போது, டாக்டர் ஆபிதீன் முடித்துள்ள இந்த ஆராய்சி இன்றைய காலகட்டத்தில் மிகவும் பயனள்ள ஓன்று. காரணம், இன்று உலக அளவில் மிகப்பெரிய அளவில் பிரச்சினையாக உருவெடுத்துள்ள மக்கள் தொகை பெருக்கத்தினை கட்டுப்படுத்த பயன்தரும் வகையில் இவருடைய ஆராய்சி வெற்றிபெற்றிருக்கிறது. ஆபிதீனுடைய ஆராய்சி குறித்து அவர் மேலும் கூறும் போது, தற்காலிக கருத்தடை சாதனங்களைப் பொறுத்தவரை பெண்கள் மாத்திரமே அதிகம் உபயோகித்து வருகிறார்கள். இதுவரை ஆண்களுக்கான தற்காலிக கருத்தடை சாதனம் என்பது காண்டம் ஒன்றுதான். இந்த நிலையில் பெண்கள் உபயோகப்படுத்தும் மாத்திரை வடிவிலான பொருள்களை போல், எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாத வகையில் ஆண்களுக்கும் கண்டுபிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறேன் என்று குறிப்பிடுகிறார்.
இந்த ஆராய்ச்சி பற்றி பேராசிரியர் ஆபிதீன் கூறுகையில், பொதுவாக பூமியில் காணப்படும் மருத்துவ குணமுடைய தாவரங்களை உபயோகித்து மருத்துவம் செய்யும்முறை மிகவும் பிரபலமாகி வருகிறது. அதே வேளையில் கடல்களில் காணப்படும் தாவரங்களைப் பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது, பொதுவாக பூமியில் காணப்படும் தாவரங்களில் இரண்டு மூன்று தாவரங்களை ஒன்று சேர்த்து ஓரு நோய்க்கு மருந்நதாக கொடுப்பார்கள். ஆனால் கடலில் காணப்படும் ஒரே தாவரம் கூட பல நோய்களுக்கு மருந்தாக பயன்படும் ஆற்றல் உள்ளது என்ற உண்மை பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை என்றார்.
தனது ஆராய்ச்சிபற்றி பேராசிரியர் விவரிக்கையில், ஆண்களின் விந்தனுக்கள் வெளியேற்றப்பட்டு அது கருத்தரிக்கும்முன், வெளியேற்றப்பட்ட விந்தனுக்களின் இயக்கங்களை தடைசெய்வதன் மூலம் அது கருத்தரிக்கப்படுவதை தடுக்க முடியும். அதாவது அந்த நேரங்களில் வெளியேற்றப்படும் விந்தனுக்களின் செயல்பாட்டினை தற்காலிகமாக பக்கவிளைவுகள் இல்லாமல் தடுக்க வேண்டியதுதான் ஆராய்சி என்கிறார்.  இதற்காக தமிழகத்தின் பல்வேறு கடற்கரை பிரதேசங்களிலிருந்து சுமார் என்பது வகையான பல்வேறுபட்ட கடல்வாழ் தாவரங்கள் சேகரிக்கப்பட்டு அறிவியல் முறைப்படி பதப்படுத்தி அவைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை தன்னார்வ தொண்டர்கள் மூலம் பெறப்பட்ட விந்தனுக்களில் சோதனை (invitro test) செய்யப்படடது. இந்த சோதனை இந்திய அரசு சார்பாக மும்பையில் நடத்தப்படும் Indian Institute of Reproduction என்ற ஆராய்சி மையத்தில் முறைப்படி செய்யப்பட்டது. இந்த சோதனையின் முடிவில், தேர்ந்தெடுக்கப்பட்ட என்பது தாவரங்களில் ஆறுவகையான கடல்தாவரங்கள் மட்டும் விந்தனுக்களின் செயல்பாட்டை பெருமளவு தடைசெய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு வகைதாவரங்களை எலிகளைக் கொண்டு உள் உடலினுள் (invivo) பரிசோதனை செய்யப்பட்டது. சோதனையின் முடிவில், ஆறு வகைதாவரங்களில் ஓரு வகைதாவரம் மட்டும் அற்புதமான வகையில் விந்தனுக்களின் இயக்கத்தை பெரிதும் தடைசெய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இறுதியாக இந்த வகை மருந்துகளை உபயோகிப்பதால் ஏற்படும் மனதியல் மற்றும் உடலியல் ரீதியான பக்கவிளைவுகள் குறித்து மதுரையில் உள்ள ஒரு பிரபல மருந்தியல் கல்லூரியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பக்கவிளைவுகள் ஏதும் இல்லை என உறுதிசெய்யப்பட்ட பின்னர் இந்த தாவரத்தை ஆண்களுக்கான தற்காலிக கருத்தடை சாதனமாக மாத்திரை வடிவில் தயாரிக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுப்பணியின் முடிவில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைக்கு பி.எச்.டி. என்னும் டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது. என்றார்.
மேலும் அடுத்த கட்டமாக, கண்டுபிடிக்கப்பட்ட இந்த தாவரத்தின் செயல்பாடு குறித்து விளக்கி அவை மாத்திரை வடிவிலான, ஆண்களுக்கான தற்காலிக கருத்தடைப் மாத்திரையாகத் தயாரிக்கப் மருந்தியல் கம்பெனிகளுக்குப் பரிந்துரை செய்யப்படும். அதற்கு முன்பாக இந்த தாவரத்தினை பேட்டர்ன் பண்ணுவதற்கான முயற்சி செய்யப்பட்டு வருவதாகவும் கூறுகிறார் ஆபிதீன். இந்த ஒட்டு மொத்த ஆய்வுப்பணியும் மணோன்மனிய பல்கலைக்கழக கடலியல் விஞ்ஞானி டாக்டர் ரவிக்குமார் அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடலியல் தாவரங்களிலிருந்து கரையான்களை கட்டுப்படுத்தும் ஆய்வு சம்மந்தமான கட்டுரையை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மலேசிய நாட்டில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் மாநாட்டில் ஆபிதீன் கலந்து கொண்டு சமர்பித்ததும் குறிப்பிடத்தக்கது.
- முதுவை ஹிதாயத்


தொல்.திருமாவளவனின் போர்ப்படைத்தளபதி எல்லாளனிடம் ஒரு நேர்காணல்.

விடுதலைச்சிறுத்தைகளின் மதுரை மாவட்ட செயலாளரும்,  தொல். திருமாவளவனின் போர்ப்படைத்தளபதியுமான திரு.மோ.எல்லாளன் அவர்களுடன் ஒரு நேர்காணல். 

 

புலிகள் மீதான தடைய நீக்க வேண்டும் என்று உங்களது தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் கூறியுள்ளார் அதனைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
ஈழத்தமிழர்கள் அனைவரது நெஞ்சிலும் நீங்கா இடம் பெற்றவர்கள் புலிகள் மட்டும் தான்.  அவர்கள் ஈழத்தமிழர்களுக்காக செய்தஅளப்பறிய சாதனைகள், தியாகங்கள் அனைவரும் அறிந்ததே.  புலிகள் மீது விதிக்கப்படும் தடை என்பது ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின்
மீது விதிக்கப்பட்ட தடையாகவே நான் கருதுகின்றேன்.  புலிகள் தான் ஈழத்தமிழர்கள். ஈழத்தமிழர்கள் தான் புலிகள். இலங்கை அரசாங்கமே
புலிகள் மீது தடைவிதிக்காமல் இருக்கும் போது, இந்தியா புலிகள் மீது தடைவிதித்து இருப்பது உகந்ததல்ல.  புலிகள் மீதான தடையை நீக்கினால் இந்திய - தமிழீழ உறவு மிகவும் பலமாக இருக்கும்.

 

தமிழ்நாட்டு அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாம் கோமாளிகள் என்று இலங்கை அரசின் படைத்தளபதி சரத் பொசேகா கூறியுள்ளார். இது பற்றி உங்கள் கருத்து.
சரத் பொன்சேகா கூறியது மிகவும் கண்டனத்திற்குரிய செயல்.  அவரது இந்தப்பேச்சுக்கு இலங்கை அரசே பொறுப்பேற்று தமிழகத்திடமும், இந்தியாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் தமிழகத்தில் இருப்பவர்களை எல்லாம் கோமாளி என்று சொல்கின்றார். அவரது
கூற்றுப்படியே தமிழர்கள் கோமாளித்தனமாக நடந்து இருந்தால் இந்நேரம் சிங்களமே இருக்காது.

 

ஈழத்தமிழர்களுக்காக அனுப்பப்படும் நிவாரணப்பொருட்கள் இலங்கை இராணுவத்தினரால் சூறையாடப்பட்டுள்ளன இது எதனைக்  காட்டுகின்றது.
ஈழத்தில் தமிழர்கள் பூர்வகுடிமக்கள் இதனை அனைவரும் அறிவர்.  ஈழத்தமிழர்களையும், தமிழகத்தமிழர்களையும் பிரித்தது கடல்கோள்தான் என்பது அறிவுப்பூர்வமான உண்மை.  எங்களது இரத்த சொந்தம் தான் ஈழத்தமிழர்கள், அவர்கள் உணவுக்காகவும், உடைக்காகவும் அல்லல்படுவதை நினைத்தாலே எங்களுக்கு மனம் பதை பதைக்கின்றது.  இந்த சூழலில் அவர்களுக்கு அனுப்பப்படும் நிவாரணப் பொருட்கள் சூறையாடப்படுவது என்பது ஒட்டுமொத்த தமிழகத்தையே சிங்களம் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

 

எந்த மாதிரியான ஒரு ஒப்பந்தம் அல்லது தீர்வு ஈழத்தமிழர்களுக்கு நிரந்த்தர தீர்வாக இருக்கும்?
இதுவரை போடப்பட்ட ஒப்பந்தங்களை சிங்கள அரசு என்ன செய்தது என்று உலகிற்கே தெரியும்.  சிங்கள அரசிடம் எந்தவிதமான ஒப்பந்தம் போட்டாலும் அதனை சிங்கள மனம் ஏற்றுக்கொள்ளாது.  உடுக்க உடையும், உண்ண உணவும் இல்லாமல் தவிக்கும் தமிழினத்திற்கு
உதவிப்பொருட்கள் போவதைக்கூட விரும்பாத ஒரு அரசிடம் நாம் எந்தமாதிரியான ஒப்பந்தத்தை எதிர்பார்க்க முடியும்.  தற்போது இராணுவக்கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழர்பகுதிகளில் தமிழர்கள் அடிமையிலும் கேவலமாகவே வாழ்கின்றனர். அவர்களுக்கு  பேச்சுரிமை இல்லை, கருத்துரிமை இல்லை.  உதாரணமாக ஒரு இராணுவக்கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழர் பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் கொழும்பு பயணம் செய்யவேண்டி இருந்தால் ஒரு மாதத்திற்கு முன்பு இராணுவத்திடம் அனுமதி பெற வேண்டும்.
அனுமதி கிடைத்தாலும் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம்.  இது என்ன வாழ்க்கை இது ஒரு நாட்டில் வசிப்பவர்கள் தங்களது நாட்டில் ஓரிடத்தில் இருந்து மற்றோரிடம் செல்ல இவ்வளவு அடக்குமுறை வைத்திருப்பவர்களிடம் எந்தவிதமான ஒப்பந்தத்தை எதிர்பார்க்கமுடியும்.
நிரந்தரத்தீர்வு தனித்தமிழீழம் மட்டுமே என்பது என்னுடைய ஆழமான கருத்தாகும்.

 

இலங்கை அரசு பாகிஸ்தானிடம் இராணுப்பயிற்சி பெறுவது இந்திய தேசிய பாதுகாப்பை பாதிக்குமா?
நிச்சியமாக இந்திய தேசிய பாதுகாப்பினைப்பாதிக்ககூடிய ஒரு செயல் இது.  சிங்கள உயர் இராணுவ அதிகாரிகள் இந்தியாவிலும் பயிற்சி பெறுகின்றார்கள். குறிப்பாக சரத் பொன்சேகா இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் இராணுவப்பயிற்சி பெற்றவர்.  இதன் மூலம்
இந்தியாவினுடைய இராணுவப்பயிற்சி பற்றிய விபரங்கள், இராணுப்போர்த்தந்திரங்கள் மற்றும் நமது தொழில்நுட்பங்கள் அனைத்தும்  நமது எதிரிநாடான பாகிஸ்தானுக்கு தெரிவது எந்த விதத்தில் நமது இந்திய தேசிய பாதுகாப்புக்கு உகந்ததாகும். இந்தியாவில் நடக்கும்
தீவிரவாதச்செயல்களுக்கு இது ஒரு முக்கிய காரணமாகவே அமையும்.

 

மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பத்தை இலங்கை அரசு கொண்டாடி மகிழ்கின்றது என்பது எவ்வாறு உள்ளது?
மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பாகிஸ்தான் தான் காரணம் என்று நமது உளவுப்பிரிவும், உள்துறை அமைச்சகமும்  உறுதிபடக்கூறியுள்ளது. இந்தச்செயலுக்கு இலங்கை மகிழ்வு கொள்வதை நினைக்கும் பொழுது இதில் இலங்கை அரசும் உடன்பட்டு இருக்கும்
என்று நினைக்க வைக்கின்றது.  இந்தியாவில் நடக்கும் ஒவ்வொரு தீவிரவாத செயலுக்கும் இலங்கை அரசையும் நமது உளவுப்பிரிவு கண்காணிக்க வேண்டும்.
நேர்காணல் :- எமது நிருபர் க. தமிழ் வேள்.
நன்றி: http://www.eelavarkural.com/


இனப் படுகொலையை மறைக்கும் ராஜ தந்திரம்.

vanni makkal
ஈழத் தமிழினத்தின் உரிமைப் போராட்டத்தை நசுக்க, எந்தக் கரிசனமும் இன்றி ஒரு மாபெரும் இனப் படுகொலையை நடத்தி முடித்த சிறிலங்க இன வெறி அரசை, தன்னாட்டு மக்களை பாதுகாக்கும் கடமையை (Responsibility to Protect – R2P) கைதுறந்த காரணத்திற்காக உலக நாடுகள் தண்டிக்க வேண்டும் என்று கோரிவரும் நேரத்தில், அது கடைபிடித்த அரச பயங்கரவாத வழிமுறைகளை நியாயப்படுத்தி, காப்பாற்றிடும் ராஜ தந்திர முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன
ஈழத் தமிழர்களின் இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணும் பாதையை தன்னிச்சையாக முறித்துவிட்டு, இராணுவ ரீதியாக தீர்வு காணும் முடிவுடன், தெற்காசிய நாடுகளின் முழுமையான ஒத்துழைப்புடன் அது நடத்தி முடித்த இனப் படுகொலை, இன்று உலகின் கண்களை தாமதமாகத் திறந்ததினால் உருவான சர்வதேசச் சட்டச் சிக்கலில் இருந்து தன்னை காத்துக் கொள்ளும் முயற்சியில் சிறிலங்க அரசு இறங்கியுள்ளது. அதன் சீரிய முயற்சிகளின் ஒரு அங்கம்தான் சமீபத்தில் ‘பாரம்பரியமிக்க’ ஆங்கில நாளிதழ் ஒன்றில் சிலி நாட்டின் தூதராக இலங்கையில் பணியாற்றிய ஜார்ஜ் ஹீன் என்பவரின் ‘ஆழமான’ கட்டுரையாகும்.
“தங்கள் நாட்டை (சிறிலங்கா) கடந்த 25 ஆண்டுகளாக நாசப்படுத்திவந்த பயங்கரவாதத்தை போரின் மூலம் முடிவிற்கு கொண்டு வந்த சிறிலங்க அரசை பாராட்டுவதற்குப் பதிலாக, அதன் மீது தனது நாட்டு மக்களை பாதுகாக்கும் பொறுப்பை கைவிட்டதாக குற்றம் சாற்றுவது முறையான செயல் அல்ல” என்று சிறிலங்க அரசை சர்வதேச சட்டங்களின் கீ்ழ் தண்டிக்க முயன்றுவரும் ஐரோப்பிய நாடுகளை குறை கூறியுள்ளார் ஜார்ஜ் ஹீன்.
இனப் படுகொலையை மறைக்க…
இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டுப் போரின் (சிறிலங்க அரசு குறிப்பிடும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்பதையும் பயன்படுத்துகிறார்) இறுதிகட்டத்தில் பல பத்தாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் சிறிலங்க‌ப் படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது அங்கு சென்று வந்த ஐ.நா.வின் பொதுச் செயலர் பான் கீ மூன், அவருடைய அலுவலகத் தலைமை அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோராலும், அநதப் படுகொலை நிகழ்த்தப்பட்ட இடத்தை செயற்கைக் கோள் எடுத்த படங்களின் வாயிலாகவும் உறுதி செய்துகொண்ட நிலையிலேயே, தன்னாட்டு மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை கைவிட்ட குற்றத்தை சிறிலங்க அரசின் மீது உலக நாடுகள் சுமத்தி வருகின்றன.
இதனை தவறென்று வாதாட முற்பட்டு, ராஜபக்ச ஆதரவு ஆங்கில நாளேட்டில் எழுதியுள்ள ஜார்ஜ் ஹீன் (Jorge Hein), தன்னாட்டு மக்களை பாதுகாக்கும் பொறுப்பை (Responsibility to Protect) சிறிலங்க அரசு தட்டிக் கழிக்கவில்லை என்று கூறி தனது வாதத்தை துவக்கியிருக்க வேண்டும் அல்லது போரின் இறுதிக் கட்டத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுவது தவறு என்றோ அல்லது உறுதிச் செய்யப்படாதது என்றோ கூறி துவக்கியிருக்க வேண்டும். ஆனால் அப்படியெல்லாம் அவர் துவக்கவில்லை. சந்திரிகா குமாரதுங்கா சிறிலங்க பிரதமராக இருந்தபோது அந்நாட்டு அயலுறவு அமைச்சராக இருந்த லக்ஷ்மண் கதிர்காமரின் திறமைகளையெல்லாம் பட்டியலிட்டுவிட்டு, அவர் படுகொலை செய்யப்பட்டதையும், அவ்வளவு துல்லியமாக அவரை படுகொலை செய்யும் திறன் இதுவரை காணாத பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகளால் மட்டுமே முடியும் என்பது பொதுவாக ஒப்புக்கொள்ளப்படும் விடயம் என்று கூறி ஆரம்பித்து பிரச்சனைக்கு வருகிறார்.
எந்தப் பிரச்சனைக்கு வருகிறார் என்றால், இறுதி கட்ட இனப் படுகொலை நடந்ததா இல்லையா என்பது பற்றியல்ல, மாறாக எப்படிப்பட்டது விடுதலைப் புலிகள் இயக்கம் என்பதை விவரிக்கத் துவங்குகிறார். சிறிலங்க அரசு திட்டமிட்டு, தெற்காசிய நாடுகளின் உதவியுடன் நடத்தி முடித்த இனப் படுகொலையை மறைக்க முற்படும் ஜார்ஜ் ஹீன், உண்மையில் இப்படிப்பட்ட ‘உள்நாட்டுப் போருக்கு’ காரணமான இனப் பிரச்சனையை விவரமாக விளக்கிவிட்டு, அதற்கு அரசியல் ரீதியான தீர்வு காண சிறிலங்க அரசு ‘எடுத்த’ முயற்சிகளையெல்லாம் பட்டியலிட்டுவிட்டு, பிறகு அதிபர் ராஜபக்ச மேற்கொண்ட இராணுவ ரீதியிலான தீர்வுத் திட்டத்தை ஆதரித்து எழுதியிருப்பாரேயானால், அங்கு பணியாற்றிய ராஜ தந்திரியின் கருத்தாக அதனை கருதியிருக்கலாம்.
அவ்வாறு செய்யாமல், ராஜபக்ச அரசு மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைக்கு உதவிய இந்தியா, சீனா, பாகிஸ்தான், இரஷ்யா ஆகிய நாடுகள் என்ன காரணத்தை கூறினவோ அதனையே இவரும் கூறி – பயங்கரவாதத்திற்கு எதிரான போர் – தமிழர்களுக்கு எதிரான போரை நியாயப்படுத்துகிறார்! ஏனெனில் அங்கு விடுதலைக்காக போராடியவர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரையிட்டால்தான், அவர்களுக்கு ஆதரவளித்த மக்களையும் ஒட்டுமொத்தமாக துடைத்தொழிப்பதற்கு நியாயம் கற்பிக்க முடியும். இந்த வித்தையை ராஜபக்ச அரசு – குறிப்பாக அந்நாட்டு அரசின் பாதுகாப்புச் செயலர் கோத்பய ராஜபக்ச கையாண்டுள்ளார். அதனால்தான், பாதுகாப்பு வலயத்திலிருந்த மருத்துவமனையை இராணுவ இலக்குதான் (legitimate military target) என்று கூறி அதன் மீது சிறிலங்க இராணுவம் குண்டு வீசியதை நியாயப்படுத்தினார்!
எனவே போரில் பாதிக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்லது அவர்களுக்கு துணை போனவர்கள் என்று கூறிவிட்டால், அதன்பிறகு ‘உள்நாட்டுப் போரில்’ கொல்லப்பட்டவர்களைப் பற்றி எந்தக் கேள்வியும் எழுப்ப முடியாது அல்லவா? அப்படித்தானே இராக்கிலும், ஆஃப்கானிஸ்தானிலும் அமெரிக்காவும் அதன் நேச நாட்டுப் படைகளும் செய்தன! இல்லாவிட்டால் ஈராக்கில் மட்டும் 11,50,000 பேர் கொல்லப்பட்டதற்கு என்ன நியாயம் கூற முடியும்? எனவே அந்த ‘சட்டபூர்வமான’ வழிமுறையை கொண்டு பல பத்தாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டதை மறைக்க முயன்றுள்ளார் ஜார்ஜ் ஹீன். நல்ல ராஜ தந்திரி.
கால் நூற்றாண்டிற்கு மேலாக அங்கு நிலவிவருவது அந்நாட்டின் பூர்வீக‌க் குடிகளின் சம உரிமைப் போராட்டத்தின் அடுத்தக் கட்ட வளர்ச்சியான விடுதலைப் போராட்டம் என்பதையும், அதற்கு அரசியல் ரீதியான தீர்வு காண்பதற்கு அடுத்தடுத்து வந்த சிறிலங்க அரசுகள் தவறிவிட்டன என்பதையும் மிகச் சாதுர்யமாக மறைத்துள்ளார் ஜார்ஜ் ஹீன்.
தீர்வுத் திட்டத்தை தூக்கி எறிந்த சிறிலங்கா
2004 முதல் 2007ஆம் ஆண்டு வரை சிலி நாட்டின் தூதராக ஜார்ஜ் ஹீன் கொழும்புவில் பணியாற்றியுள்ளார்.
இந்த காலகட்டத்தி்ல்தான் இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் பேச்சுவார்த்தைகள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும், சிறிலங்க அரசிற்கும் இடையே நார்வேயின் அனுசரணையுடன் நடந்துவந்து, அதன் உச்சக் கட்டமாக நிரந்தர அரசியல் தீர்வை எட்டுவதற்கு வகை செய்யும் நோக்கில் இடைக்கால சுய நிர்வாக அதிகார அமைப்பை (Interim Self Governing Authority _ ISGA) நிறுவுவதற்கான திட்டத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் சிறிலங்க அரசிற்கு அளிக்கிறார்கள்.
தாங்கள் அளித்த தீர்வுத் திட்டத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள் என்று புலிகள் வற்புறுத்தவில்லை. மாறாக, இதனை ஒரு அடிப்படையாக்கி இறுதியான அரசியல் தீர்வை உருவாக்க பேச்சுவார்த்தையின் மூலம் முயற்சிப்போம் என்று அறிக்கையும் விடுகிறார்கள்.
இலங்கைத் தமிழர்களின் இனப் பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண தயார் என்று கூறிவந்த சிறிலங்க அரசு, இத்தீர்வு திட்டத்தை ஆராய்ந்து பார்க்கிறோம் என்று கூட சொல்லாமல் கிடப்பில் போட்டது. அமைதிக்கான முன்னெடுப்புகளை ஓரளவிற்கு மேற்கொண்டு வந்த, அப்போது பிரதமராக இருந்த ரனில் விக்கிரசிங்கே அரசின் அதிகாரத்தை பறித்தார் அதிபராக இருந்த சந்திரிகா. இவர் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக அமைதித் தீர்வு காண்பேன் என்று கூறி (1995இல்) தமிழர்களின் பேராதரவுடன் ஆட்சிக்கு வந்தவர். இரண்டு முறை அதிபராக இருந்தார், அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதை விட, அதற்குத் தயாராக இருந்த விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று சித்தரிப்பதற்கான முயற்சிகளை சர்வதேச ரீதியில் மேற்கொண்டார். அதற்குத்தான் இவருக்கு ‘தமிழரான’ லக்ஷ்மண் கதிர்காமர் பெரிதும் உதவினார்.
அவருடைய ராஜ தந்திர திறனைத்தான் ஜார்ஜ் ஹீன் வெகுவாகப் புகழ்ந்து புளங்காகிதம் அடைகிறார். விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று சித்தரிக்க எத்தனையோ காரணங்களை அடுக்கும் ஜார்ஜ் ஹீன், ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லட்டும். உலகில் எந்த பயங்கரவாத இயக்கம் ஒரு விரிவான அரசியல் திட்டத்தை – சர்வதேச சட்ட விதிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட – திட்டத்தை முன்வைத்தது?
ஒரு மூன்றாம் நாட்டின் அனுசரணையுடன் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில், தங்களை இன ரீதியாக ஒடுக்கிவரும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய பயங்கரவாத இயக்கம் எது?
விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக ஒழித்துக்கட்டுவதே தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு தரும் என்று கூறி கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்களை கொன்று குவித்ததே சிறிலங்க இராணுவம், அதற்கு எதிராக போராடிய விடுதலைப் புலிகள் இயக்கம் பதிலடி கொடுத்து பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினரை கொன்றது, காயப்படுத்தியது. ஆனால், அவர்களால் கொல்லப்பட்ட சிப்பாய் அல்லாத சிங்களவர் யாராவது உண்டா? அப்படி ஒரு செய்தியை இப்படிபட்ட ராஜ தந்திர புலிகளால் காட்ட முடியுமா? ஒரு சிங்களப் பெண் கற்பழிக்கப்பட்டார் என்று கூற முடியுமா?
இரண்டரை ஆண்டுகளாக நடந்த இந்தப் போரில் சிறிலங்க இராணுவ இலக்குகளை குறிவைத்து 6 முறை விமான தாக்குதல் நடத்தினார்களே விடுதலைப் புலிகள், அதில் ஒன்றாவது சிங்கள மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்டதா?
ஆனால், பாதுகாப்பு வலயம் என்று அறிவித்து அங்கு அப்பாவி மக்களை வரவழைத்து, அவர்கள் அங்கு தஞ்சமடைந்த பிறகு, அங்கிருக்கும் மருத்துவமனை, சிறுவர்கள் கூடம் என்று குறிவைத்து தாக்குதல் நடத்தியதே சிறிலங்க இராணுவம்? அது அரச பயங்கரவாதமல்லாவா? சொந்த நாட்டு மக்களை பாதுகாத்திட வேண்டும் என்ற கடமையில் இருந்த வழுவிய குற்றமாகதா இது? இது சிறிலங்க அரசின் அரச பயங்கரவாத நடவடிக்கையா இல்லையா?
சிறுவர்களை தங்கள் படைகளில் சேர்த்த குற்றங்களைச் செய்த பயங்கரவாத இயக்கம் என்கிறார். தமிழ் சிறுவர்களையும், சிறுமிகளையும் சிறிலங்க இராணுவத்தினர் உச்சி மோந்து அன்பு காட்டினரோ? இப்பொழுது கூட, சிறிலங்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் இளம் வயதினர் ஒவ்வொரு நாளும் கடத்தி பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுகின்றனரே? சிறுவர்கள் கடத்திச் செல்லப்படுகின்றனரே? படிக்கச் சென்ற சிறுவர்கள், சிறுமிகள் மீது இப்படிப்பட்ட அரச பயங்கரவாதம்தானே 1974 முதல் சிறிலங்க அரச படைகளால் கட்டவிழ்த்து விடப்பட்டது? மறுக்க முடியுமா? புகைப்படங்களும், ‌வீடியோ காட்சிகளும் இந்தக் கதைகளைத் தானே இன்றுவரை பேசுகின்றன.
கொழும்பு நகரில் சிறிலங்க நாடாளுமன்றத்திற்கு முன்னால் சம உரிமை கேட்டு சாத்வீக வழியில் போராடிய தமிழர் தலைவர் செல்வநாயகம் உள்ளிட்டோர் மீது சிறிலங்க காவலர்களும், காடையர்களும் தாக்குதல் நடத்தவில்லையா? அமைதியாக கூடி தமிழ் மாநாடு நடத்திய மக்கள் மீது காவல் துறையினரே வன்முறை செய்து 9 பேரைக் கொல்லவில்லையா?
இதையெல்லாம் பார்த்தப் பிறகுதானே உருவானது ஆயுதப் போராட்டம்? சும்மாவா சுட்டார்கள் ஆல்பிரட் துரையப்பாவை? இந்த வரலாற்றையெல்லாம் கவனமாக மறைத்துவிட்டு (மூன்றாண்டுக் காலம் கொழும்புவில் பணியாற்றியவருக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும்), தனது நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக எழுந்த பிரிவினைப் போராட்டத்தை ஒடுக்க அந்நாட்டு அரசிற்கு சட்டப்பூர்வமான சுய காப்பு உரிமை உள்ளது என்று கூறுகிறார் ஜார்ஜ் ஹீன்! தனது எழுத்தோவியத்தை முடிக்கும் போது தமிழர்களின் சட்டப்பூர்வமான குறைகளை நிறைவேற்ற சர்வதேச நாடுகள் உதவ வேண்டும் என்றும் கூறுகிறார்! என்னே முர‌ண்பாடு! Legitimate Grievances of the minority Tamils என்பதை ஒப்புக் கொள்ளும் இந்த ராஜ தந்திரி, அது என்ன? எவ்வாறு உருவானது? அதற்கான தோற்றவாய் எது? உருவான காலம் எது? எப்படி பெரிதானது? அது ஆயுதப் போராட்டமாக உருவெடுக்கக் காரணம் என்ன? என்பதை நியாயமாக ஆராய்ந்திருப்பாரெனில் யார் பயங்கரவாதி என்பதும், அரச பயங்கரவாதம் எது என்பதும் தெளிவாகியிருக்கும் இவர் எழுத்தை படிப்பவர்க்கு.
தங்களை தனது முழு சக்தியையும் கொண்டு ஒடுக்கும் வலிமை வாய்ந்த எதிரியை வீழத்த ஆயுத வலிமையை ஏற்பதும், தங்கள் இன்னுயிரை ஈந்து தம்மக்களை அப்படிப்பட்ட கொடுமையிலிருந்தும் காப்பதுதான் தற்கொலைத் தாக்குதல். கொடுமையான எதிரியை ஒழித்துவிட்டு, அவனின் படையிடம் சிக்காமல் தங்களையே அழித்துக் கொள்வதும், தங்களையே கருவியாக்கி, தமது இனத்தை அழிக்கும் எதிரிகளை அழிப்பதும் நாகரீக மானுடத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட போராட்ட வழிமுறைகள்தான். இது தவறென்றால் நாம் வாஞ்சிநாதனையும், உத்தம் சிங்கையும் கொண்டாட முடியாது. பகத் சிங்கை நமது நாட்டின் பெருமையாக கருதி சிறப்பு தபால் தலையையும் வெளியிட முடியாது. ஒரு இனத்தின் மீட்சிக்காக தங்களையே தியாகம் செய்வோரை எப்படி அழைப்பது என்பது அந்த இனத்தின் உரிமை. அதே நேரத்தில் அரச பயங்கரவாதத்தை சகித்துக் கொண்டு, ஏதோ ஒரு அரசியல் தீர்வை ஏற்றுக் கொண்டு, அமைதி காத்து வாழ் என்று கூறுவதற்கு உலகிற்கு உரிமை கிடையாது.
ஈழத் தமிழினத்தின் போராட்டத்திற்கான அடிப்படையை விளங்கிக் கொள்ள வேண்டும், அதன் மீது தீர்வை பற்றி விவாதிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, ஆனால் தங்களுடைய போராட்டத்திற்கான தீர்வு எது என்பதை இறுதியாக தீர்மானிக்கும் பொறுப்பு அந்த மக்களுக்கு மட்டுமே உரியது.
இதனை உணர்ந்து கொண்டவர்கள் மனிதாபிமானிகள் – அவர்கள் ராஜ தந்திரிகளாக இருந்தாலும் – சிறிலங்க அரசு நடத்தி முடித்த போரில் பல பத்தாயிரக்கணக்கில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் உயிர்களுக்காக அந்நாட்டு அரசு தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறுவார்கள். த‌ங்களுடைய ராஜ ‌வி‌சுவாச‌த்தை‌க் கா‌ட்ட ‌விரு‌ம்புவோ‌ர் எழு‌தினா‌ல் மட்டுமே உண்மையையும், நியாயத்தையும் மறைத்து ராஜ தந்திர நியாயம் கற்பிக்க முடியும்.
- இணைய உலகம்.
நன்றி: http://www.nerudal.com


தமிழ்த் தேசியத்தை விழுங்க முயற்சிக்கும் சிங்கள தேசியம் – தொல்காப்பியன்.

 

NILAVARAMஇராணுவ ரீதியாகத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அடக்கிய சிங்கள அரசு, இப்போது வரலாற்று ரீதியாக அவர்களை அடிமைப்படுத்தி, தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேரே – வடக்கும் கிழக்கும் தமிழரின் மரபுவழித் தாயகம், தமிழர்கள் ஒரு தேசிய இனம், தமிழ் மக்களுக்கு தன்னாட்சி உரிமை உள்ளது ஆகிய விடயங்கள் தான்.
தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டைச் சிதைத்து, அவர்களின் தனித்துவமான தேசிய அடையாளங்களை அழிப்பதன் மூலம் தன்னாட்சி உரிமைக்கான எழுச்சியையும் கோரிக்கையையும் பலவீனப்படுத்துவது தான் சிங்களத்தின் நாசகாரத் திட்டம். தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் சிதைத்துள்ள நிலையில் – எதிர்காலத்தில் புலிகளின் எச்சங்களே நாட்டில் இருக்காத வகையில் – சிங்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அடுத்த கட்டமாக ‘ஈழம்’ என்ற வார்த்தையையே இல்லாமல் செய்வதற்கு சிங்கள அரசாங்கம் குறிவைத்தி;ருக்கிறது. ஈழம், தமிழ், முஸ்லிம் போன்ற வார்த்தைகளை கொண்ட கட்சிகளின் பெயர்களைத் தடைசெய்ய அரசாங்கம் முயற்சிப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
இது எதிர்காலத்தில் ‘ஈழம்’ என்ற பெயரிலோ, அல்லது தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் தனித்துவமான கட்சிகள் – அமைப்புகள் இயங்குவதை, தோன்றுவதை முழுமையாகத் தடைசெய்ய எடுக்கப்படும் நடவடிக்கையாகும்.
தேர்தல் திணைக்களத்தின் ஊடாக அரசியல் கட்சிகளின் பெயர்களை மாற்றியமைக்கக் கொடுக்கப் படுகின்ற நிர்ப்பந்தமானது – தமிழ்த் தேசியத்தை அழிப்பதற்கு சிங்களத்தின் மீது அரசாங்கம் கொண்டிருக்கின்ற கரிசனையையே பிரதிபலிக்கின்றது. இதைச் செய்து விட்டால் நாட்டில் ஒருமைப்பாடு வந்து விடும், பிரிவினை ஏற்படாது என்று கருதுகிறது இலங்கை அரசு.
இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் தற்போது தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் கட்சிகள் எதுவுமே இப்போதைய பெயர்களில் இயங்க முடியாது. இனம் ஒன்றைப் பிரதிநிதித்துவம் செய்யும் அல்லது பிரதேசம் ஒன்றின் பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகள் செயற்படக் கூடாதென்று அரசாங்கம் சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதன் மூலம் எந்தவகையிலும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தி விடமுடியாது.
கட்டாயமாக – நிர்ப்பந்தத்தின் பேரில் செய்யப்படும் இத்தகைய எந்த நடவடிக்கையுமே சிறுபான்மை மக்களிடத்தில் இன்னும் அதிகமான வெறுப்பையும் பிரிந்து போகும் எண்ணத்தையுமே ஏற்படுத்தும். சிங்களம் மட்டும் ஆட்சிமொழி என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது எத்தகைய நிலையை ஏற்படுத்தியது என்பதை இலங்கை அரசு இன்னமும் புரிந்து கொள்ளவில்லைப் போலும். ஆனால், சிங்கள அரசின் நோக்கம் பிரிவினையைத் தடுப்பதோ ஒருமைப்பாட்டைப் பேணுவதோ அல்ல.
அதன் ஒரே நோக்கம் சிங்களத் தேசியத்துக்குள் அனைத்து இனங்களையும், அனைத்து மொழி பேசும் மக்களையும் உள்வாங்கிக் கொள்வது தான். பயங்கரவாதம் என்ற போர்வையில் தமிழர்களின் காப்பரணான விடுதலைப் புலிகளை வெற்றிகொண்ட பின்னர் நடத்திய விழாவில் பேசிய மகிந்த ராஜபக்ஸ – இனிமேல் நாட்டில் சிறுபான்மை இனங்கள் என்று எதுவுமில்லை என்று கூறியிருந்ததை மறந்து விடக்கூடாது.
அதாவது அனைத்து இனங்களையும் சிங்களத்துக்குள் உள்வாங்கி;க் கொள்வது தான் அவரது திட்டம். இது சாத்தியமானால் – தமிழ்த் தேசியமே இல்லாமல் போய், அனைவரும் சிங்களத் தேசியத்துக்குள் சிக்கிக் கொள்ள நேரிடும். இப்படியான நிலையில் இருந்து தனித்துவமான வகையில் தமிழ்த் தேசிய இனத்தால் போராட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்படும்.
இலங்கைத் தேசியம் அல்லது சிங்களத் தேசியத்துக்குள் அனைத்து மக்களையும் உள்வாங்கிக் கொண்டு தமி;ழ்த் தேசியத்தையும் முஸ்லிம் தேசியத்தையும் இல்லாது அழித்து விடுவதே அவர்களின் நோக்கம்.
இது வெறுமனே  மகிந்தவின் கனவு மட்டுமல்ல. ஐ.தே.க.வின் எண்ணமும் கூட. போர் முடிந்த சில நாட்களின் பின்னர் ஐ.தே.க.வின் தரப்பில் இருந்து இதுபோன்றதொரு கருத்து முன்வைக்கப் பட்டிருந்ததை மறந்து விட முடியாது. ஈழம் என்பது அரசியல் ரீதியாகத் தோற்கடிக்கப் படவில்லை. இன்னமும் ஈழம் என்ற பெயரில் அரசியல் கட்சிகள் இயங்குகின்றன. அனைத்;துத் தமிழ்க் கட்சிகளினது பெயர்களிலும் ஈழம் என்பது இருக்கிறது. எனவே, ஈழம் என்பதை அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்க வேண்டும் என்று கூறியிருந்தது ஐ.தே.க.
இது, இலங்கையின் இரு பெரும் சிங்களக் கட்சிகளினதும் பேரினவாதச் சிந்தனைகள் ஒன்றுபட்டிருப்பதை வெளிப்படுத்தும் விடயமாகும். தமிழ்த் தேசியத்தைச் சிதைத்து சிங்களத் தேசியத்துக்குள் தமிழ் மக்களின் வாழ்வை அடிமைப்படுத்துவதே சிங்களத்தின் திட்டம்.
புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா பிரிந்து சென்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை உருவாக்கினார். ஆனால், பின்னர் கருணாவைத் தனித்து இயங்க சிங்களத் தேசியம் விடவில்லை. வளைத்துப் போட்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உள்வாங்கிக் கொண்டது. பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பெயரை மாற்றும்படி மகிந்தவும் அவரது சகோதரர்களும் கருணாவும் பெரும் நெருக்கடிகளைக் கொடுத்தனர்.
ஆனால், அது சாத்தியமற்றதாகிப் போக, அந்தக் கட்சியையே இல்லாதொழிக்கும் வகையில் ஒவ்வொருவராக சிறி லங்கா சுதந்திரக் கட்சிக்குள் கொண்டு வரும் இரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன. இந்த நடவடிக்கைகளின் இறுதிக் கட்டத்தில் பிள்ளையானும் சிறி லங்கா சுதந்திரக் கட்சிக்குள் உள்வாங்கப்படுவார். இது தான் சிங்களத் தேசியத்தின் சதி.
கிழக்கில் மோசடிகளின் மூலமும், கிழக்கைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொண்ட கட்சிகளின் முதுகில் சவாரி செய்தும் சிறி லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியைப் பிடித்தது. வெற்றிலையின் கீழ் பிராந்தியக் கட்சிகளைப் போட்டியிட வைத்து கிழக்கில் வெற்றி பெற்றது போன்று – வடக்கிலும் அழுத்தங்களைக் கொடுத்து தமிழ்க் கட்சிகளை அதேபோன்று போட்டியிட வைத்திருக்கிறார் மகிந்த ராஜபக்ஸ.
அரசாங்கத்தின் நிர்ப்பந்தங்களால், வடக்கில் ஈ.பி.டி.பி., சிறி ரெலோ, ஈரோஸ் போன்ற கட்சிகள் வெற்றிலைச் சின்னத்துக்குள் உள்வாங்கப் பட்டிருக்கின்றன. இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றிலையை வெற்றி பெறவைத்து தமிழ்த் தேசியம் சிதைக்கப்பட்டு விட்டது – சிங்களத் தேசியமே வடக்கிலும் கிழக்கிலும் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை சிங்கள மக்களுக்கும், வெளியுலகுக்கும் பிரகடனம் செய்வது தான் மகிந்தவின் திட்டம்.
வடக்கே பருத்தித்துறை தொடக்கம் தெற்கே தெய்வேந்திர முனை வரைக்கும் ஒரே கொடி -சிங்கக்கொடி தான் பறக்கிறது என்று கூறிப் பெருமைப்பட்ட சிங்களத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையே இது.
வடக்கில் யாழப்பாணத்தில் இருந்து தெற்கே தங்காலை வரைக்கும் சிறி லங்கா சுதந்திரக் கட்சி தான் ஆட்சி செய்கிறது என்ற சிங்களத் தேசியத்தை உசுப்பிவிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறது மகிந்தவின் அரசு. சிங்களத் தேசியத்தின் இந்த இரகசியச் சதிக்கு தமிழ் அரசியல் சக்திகள், ஊடகங்கள் பலவும் பலியாகிக் கொண்டிருப்பது தான் வேதனையான விடயம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகப் பலமமாக இருக்கும் வரைக்கும் அவர்களோடு இருந்து – அவர்களின் பின்னணியில் இயங்கிய இந்தச் சக்திகள் இப்போது சிங்களத் தேசியத்துக்கு வால் பிடிக்க முற்படுவது தான் வேடிக்கை.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவசரகாலச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்திருக்கிறார். காரணம் கேட்டால், இடம்பெயர்ந்த வன்னி மக்களை குடியமர்த்த அரசின் உதவி தேவையாம். அதற்காகவே எதிர்க்கவில்லை என்று சப்பை நியாயம் சொல்கிறார்.
அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தித் தான் இலங்கை அரசு மூன்று இலட்சம் மக்களையும் ஆடு, மாடுகளைப் பட்டியில் அடைப்பது போன்று – முகாம்களுக்குள் அடைத்து வைத்திருக்கிறது என்பது அவருக்குத் தெரியாதா என்ன?
இதே அவசரகாலச் சட்டம் தான் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வுக்குத் தடையாக இருக்கிறதென்று புரியாதா என்ன?
ஆனாலும் இப்படியொரு நியாயத்தைச் சொல்லித் தப்பிக்க முனைகிறார் என்றால் தமிழ்த் தேசியம் தூங்கிக் கொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா அவர்?
அதைவிட மோசமானது – தந்தை செல்வாவும், பிரபாகரனும் தமிழ்த் தேசியத்துக்காகப் போராடி தோற்றுப் போனவர்களாம் – இனியும் தமிழ்த் தேசியம் பேசிப் பயனில்லை என்று கொச்சைப் படுத்துகிறார்.
அரசுக்குக் கால் பிடிப்பதும் வால் பிடிப்பதும் தான் தமிழ் மக்களைப் பாதுகாக்கும் என்று புதிய வழிகாட்ட முனையும் இவர்களெல்லாம் எப்படித் தலையெடுத்தார்கள் என்று ஒருமுறை திரும்பிப் பார்க்கட்டும்.
அதைவிட தமிழ்த் தேசியத்துக்காகப் போராடி மடிந்தவர்கள் எல்லாம் மடையர்கள் போன்று குறிப்பிடும் அவர் ஒரு முறை சிங்களத் தேசியத்துக்கு கால் பிடித்து விட்டவர்களால் என்னத்தைக் கிழிக்க முடிந்ததென்று ஒரு கணம் நினைத்துப் பார்க்கட்டும்.
சிங்களத்துக்குக் கால் பிடிப்பவர்களால் – ஒரே ஒரு நிமிடம் மட்டும்,  அகதி முகாம்களுக்குள் அடைபட்டுக் கிடக்கும் மக்களை வெளியே கொண்டு வந்து விட முடியுமா?
அதையே செய்ய முடியாதவர்கள் – தமிழ்த் தேசியத்தைக் கொச்சைப் படுத்திக் கொண்டு –அரசுக்குப் பின்னால் நிற்கப் போகிறார்களாம். கூரையில் ஏறியே கோழி பிடிக்க முடியாதவர்கள் வானத்தில் ஏறி வைகுண்டம் போகப் போகிறார்களாம். இவர்களையெல்லாம் தமிழ்த் தேசியத்தின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்ததற்காக யாரை நோக முடியும்?
சிங்களத் தேசியத்துக்குள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்வாங்கி;க் கொண்டு தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கின்ற சதி இப்போது உச்சகட்டமாக நடந்து கொண்டிருக்கிறது.
வடக்கில் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கைகள் தெற்கில் வலுப்பெறுகின்றன. கலப்புக் கிராமங்களை உருவாக்க வேண்டும் என்று கேட்கிறார்கள் சிங்களத்தின் காவலர்கள்.
வடக்கில் மீள்குடியமர்வுக்கு முன்னதாக அங்கு சிங்கள மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்களை கண்டறியும் புதைபொருள் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிறார்கள். இவையெல்லாம் வடக்கும் கிழக்கும் தமிழ் மக்களின் மரபுவழித் தாயகம் அல்ல என்று காண்பிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளே.
முப்பதாண்டுப் போரின் பின்பாதிக் காலத்தில் தமிழ் மக்களின் பலம்மிக்க தலைமைச் சக்தியாக விளங்கும் விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால் தமிழ்த் தேசியத்தை வரலாற்று ரீதியாக அழிக்கின்ற முயற்சிகள் எதுவும் கைகூடவில்லை.
இந்த இடைவெளியை நிரப்பி சிங்களத் தேசியமே இலங்கைத்தீவு முழுவதும் ஆதிக்கம் செலுத்தியது என்று உறுதி செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. இந்தக் கட்டத்தில் தமிழ்த் தேசியம் சற்று உறங்கிப் போனாலும் அதை விழுங்கி ஏப்பம் விட்டுக் கொண்டு போய்விடும் சிங்களம்.
இதனைத் தடுப்பதற்கு தமிழ் மக்கள் அனைவரும் ஒரே குரலாக ஒலிப்பது அவசியம். எம்மிடையே உள்ள வேறுபாடுகள் பலவீனங்களைக் களைந்து ஒரே குரலாக ஒலிப்பது தான் தமிழ்த் தேசியத்தை காப்பாற்ற தமிழீழத் தேசியத்துக்காகப் போராடிய, களமாடிய மாவீர்களின் கனவுக்கு கொடுக்கும் மரியாதையாக அமையும்.
நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில்  எறிவதுண்டோ …..?
நன்றி: http://www.nerudal.com/


'தமிழா... உன் கதி இதுதானா?'- ஜூனியர் விகடன்.

 

eelam "உன்னதமானவர்கள் வீழ்ந்துவிட்டனர்.ஆளரவமற்ற இருட்புலத்தில்
அவர்கள் புதைக்கப்பட்டனர்.
யாரும் கண்ணீர் சிந்தவில்லை.
யாரோ அவர்களைக்
கல்லறைக்கு எடுத்துச் சென்றனர்.
அவர்தம்
புகழ்வாய்ந்த பெயர் கூறிட
அங்கே சிலுவையோ...
சமாதியோ... மண்டபமோ
ஏதுமில்லை.
புல் முளைத்திருக்கிறது அங்கே.
தாழ்ந்திருக்கும் புல்லிதழ் ஒன்று
அந்த இரகசியத்தைத் தாங்கியிருக்கிறது.
கரை மீறிச் சீறியடிக்கும்
அலைகள் மட்டுமே சாட்சியம்.
வல்லமை வாய்ந்த
அவ்வலைகள் கூட
தொலைதூர இல்லத்துக்கு
செய்தியைக் கொண்டுபோக முடியாது..."
என்ற வி.என்.ஃபிக்னரின் கவிதை ஒன்று, வன்னிப் பகுதியில் நிகழ்ந்து விட்ட சோகத்தைச் சொல்வதற்காகவே எழுதப்பட்டது போல் இருக்கிறது..!
விடுதலைப் புலிகளை ஒட்டு மொத்தமாக அழித்து விட்டதாக ராஜபக்சவின் இராணுவம் அறிவித்துவிட்டது. பிரபாகரனை கொன்றுவிட்டதாக இலங்கை அரசு எக்காளமிடுகிறது. பிரபாகரன் செத்துவிட்டதாக ஒரு சான்றிதழ் பெற நாராயணனும், சிவசங்கர மேனனும் புதுடில்லியிலிருந்து கொழும்புக்குப் பறந்தனர். ராஜபக்சவின் வெற்றிச் சிரிப்பில், இருவரும் முகமலர்ந்து நிற்பதை செய்தித்தாள்கள் படமாக்கின. ஒரே நாளில் பல்லாயிரம் தமிழர் படுகொலை செய்யப்பட்டது, நம் பிரதமரின் தூதுவர்களைத் துளியும் பாதிக்கவில்லை. தமிழினத்தின் உயிர் அவ்வளவு அற்பமாகப் போய்விட்டது!
சிங்களர்கள் அனுராதபுரத்திலும், கொழும்பிலும் ஆடிப் பாடி மகிழ்ந்தனர். இதயத்தை அழுத்தும் சோகத்தைக் கூட வெளிப்படுத்த முடியாமல் தமிழ்க் குடும்பங்கள் ஒடுங்கின. இனி எல்லாம் நலமாக நடந்தேறும் என்று இந்திய அரசும், உலக நாடுகளும் 'நாடி ஜோசியம்' சொல்வதை நாம் நம்ப முயல்வோம்!
ஹிட்லரின் இன அழிப்புப் படையால் ஆஸ்விட்ச் வதை முகாமிலும், புச்சன்வால்ட் மரண முகாமிலும் சொற்களில் இறக்கிவைக்க முடியாத சோகங்களை அனுபவித்த, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற எலீ வீஸல் தன், 'இரவு' என்ற படைப்பில் வெளிப்படுத்திய உணர்வுகள் இங்கே நினைவுக்கு வருகின்றன.
'என் வாழ்க்கையையே சபிக்கப்பட்ட ஒரு நீண்ட இரவாக மாற்றிய அந்த நாளை நான் என்றுமே மறக்கமாட்டேன். அந்தப் புகையை, மௌனமான நீலவானத்தின் கீழ் புகை வளையங்களாக மாறிய அக்குழந்தைகளின் சிறிய முகங்களை என்னால் மறக்க முடியாது.
என் நம்பிக்கையை முற்றிலும் விழுங்கிய அத்தீச்சுவாலைகளை, வாழும் ஆசையை முற்றாகப் பறித்துவிட்ட, ஆதியும் அந்தமும் அற்ற அந்த இருண்ட அமைதியை எப்படி மறப்பேன்? எனது கடவுள் நம்பிக்கையையும் ஆன்மாவையும் கொன்று, எனது கனவுகளை சாம்பலாக்கிய அந்தக் கணங்களை நான் என்றும் மறக்கமாட்டேன். கடவுளைப் போல் நான் வாழ விதிக்கப்பட்டாலும், அந்த நாளை என்றென்றும் மறக்கமாட்டேன்!' என்று அவர் வெளிப்படுத்திய அதே உணர்வுகளுடன்தான் ஒவ்வொரு ஈழத்தமிழரும் இறுதி வரை இருப்பர் என்பது நிஜம். 'பிரபாகரன் தலைமையில் இயங்கிய விடுதலைப் புலிகளால்தான் ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் நிறைவேறாமல் போனது. அது மட்டும் நிறைவேறியிருந்தால், இன்று ஈழத் தமிழர்களுக்கு எல்லா உரிமைகளும் வந்துசேர்ந்திருக்கும்!' என்று சொல்லிவந்தவர்களுக்கு இப்போது நல்ல வாய்ப்பு கனிந்திருக்கிறது. பிரபாகரனை கொன்றுவிட்டதாகவும் விடுதலைப் புலிகளை வென்றுவிட்டதாகவும் பிரகடனம் செய்திருக்கும் இலங்கை அரசு, சிங்களருக்கு சமமாக அனைத்து உரிமைகளையும் எஞ்சியிருக்கும் ஈழத்தமிழருக்கு வழங்க, இப்போது இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?
இலங்கை இறையாண்மைக்கு உட்பட்டு இப்போது நடைமுறையில் இருக்கும் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் தமிழருக்கு சம உரிமை சாத்தியமா? இலங்கை முழுவதும் சிங்களத்துடன் தமிழும் ஆட்சி மொழியாக இதயசுத்தியுடன் அங்கீகரிக்கப்பட்டு, தமிழ் வழி கற்றவர்கள் அரசு நிர்வாகத்தின் சகல துறைகளிலும் அமர்ந்து பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படுமா? முழுமையான கூட்டாட்சி மலராமற்போனாலும், தமிழக அரசுக்குரிய ஆட்சியுரிமைகளாவது வடக்கிலும் கிழக்கிலும் அமைக்கப்படும் அரசுகளுக்குக் கிடைக்கக்கூடுமா? கிழக்குப் பகுதியில் திருகோணமலைப் பக்கம் திட்டமிட்டு சிங்களரைக் குடியேற்றி தமிழர் நிலங்களை அபகரித்தது போன்று, வடக்கில் வன்னிப் பகுதியில் சிங்களக் குடியேற்றம் நடக்காமல், தமிழரின் வரலாற்று வாழ்வாதாரப் பகுதிகள் பாதுகாக்கப்படுமா? இராணுவத்திலும் காவல்துறையிலும் தமிழர் கணிசமாக இடம்பெற சிங்களப் பேரினவாதப் பௌத்த வெறியர்கள் அனுமதிப்பார்களா? இந்த வினாக்களுக்கெல்லாம் இவர்கள் முதலில் விடை காணட்டும்.
"பிரபாகரன்தான் வன்முறையை வளர்த்தெடுத்தார். விடுதலைப் புலிகளால்தான் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. ஈழம் அமைதி இழந்ததற்கு இவர்களுடைய இரத்த வெறியே காரணம்!" என்று இங்குள்ள காங்கிரஸ் நாட்டாமைகள் கிளிப்பிள்ளைபோல் இன்று வரை கூறி வருகின்றனர். நூறு எலிகளை விழுங்கிய பூனை தீர்த்த யாத்திரை போன கதைதான் சிங்கள வெறியர்களின் செயல் என்பதை இவர்களுக்கு யார்தான் புரியவைப்பது?
சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று 1956 இல் அறிவிக்கப்பட்டதும், நாடாளுமன்றத்துக்கு முன்னால் காலிமுகத் திடலில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட தமிழினத் தலைவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி, கொழும்பில் தமிழர் சொத்துகளைச் சூறையாடியது யார்? பண்டா - செல்வா ஒப்பந்தத்தை நிறைவேற்றும்படி 1958 இல் அறப்போரில் ஈடுபட்டபோது, தமிழர் பலரைப் படுகொலை செய்து, தமிழ்ப் பெண்களிடம் பாலியல் பலாத்காரம் நடத்தி, அவர்களுடைய உடைமைகளைத் தீக்கிரையாக்கியது யார்? தென்னிலங்கையிலிருந்து பல்லாயிரம் தமிழர் தமிழகத்துக்கும், ஈழ நிலத்துக்கும் புகலிடம் தேடி ஓடச்செய்தது யார்? யாழ்ப்பாணத்தில் 1974 இல் தமிழாராய்ச்சி மாநாடு நடந்தபோது, வெடிகுண்டு வீசி மோசமான தாக்குதலை முன்நின்று நடத்தியது யார்? மலையகத் தமிழர் மீதும், தெற்கில் வாழ்ந்த அப்பாவித்தமிழர் மீதும் 1977 இல் வெறித் தாக்குதல் நடத்தி, இனக்கலவரத்தை வளர்த்தது யார்? பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவந்து 1970 ஜூலையில் தமிழ் இளைஞர்கள் மீது நரவேட்டை நடத்தியது யார்? 'தமிழரின் அறிவுக்கோயில்' என்று கொண்டாடப்பட்ட யாழ். நகர் நூலகத்தின் 95 ஆயிரம் நூல்களை எரித்துச் சாம்பலாக்கியது யார்? 1983 ஜூலை 25 அன்று வெலிக்கடை சிறையில் 37 தமிழ் இளைஞரும் 27 ஆம் நாள் 18 தமிழரும் குரூரமாகக் கொல்லப்பட்டது யாரால்?
சிங்கள வெறியர்களின் படுபாதகச் செயல்களை ஒரு பட்டியலில் முடித்துவிட முடியாது. புத்த பூமியை இரத்த பூமியாக்கியவர்கள் சிங்களர்கள். அவர்களுடைய வன்கொடுமைக்கு எதிராக வந்து நின்றவர்கள் விடுதலைப் புலிகள். இதுதான் வரலாறு.
எள் முனை உரிமையும் பெறாமலேயே ஏராள மான இழப்புகளைச் சந்தித்துவிட்டது ஈழத் தமிழினம். தமிழீழம் காணும் கனவில் பல்லாயிரம் வீர இளைஞர்கள் களத்தில் பலியாகிவிட்டனர். வான்படை, கடற்படை, தரைப்படையென்று முப்படைகளை உருவாக்கி... ஒரு வலிமை மிக்க, கட்டுப்பாடான இராணுவத்தைக் கட்டமைத்த பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா என்பது கேள்விக்குறியாகிவிட்டது. வீடிழந்து, உறவிழந்து, மன அமைதியை முற்றாக இழந்து, மூன்று லட்சம் தமிழர்கள் வதை முகாம்களில் இரக்கமற்ற இராணுவத்தின் முன் மார்பெலும்பு தெரியும் மழலைகளுடன் கையேந்தி நிற்கின்றனர். போதும் இந்தப் போர்!
சிங்களருக்கு சமமான உரிமைகளுடன் தமிழரை வாழ வைக்க முடியும் என்று சர்வதேச நாடுகள் நம்புகின்றன. நிறைவேறாத முயற்சி அது என்று அந்த நாடுகளின் அதிபர்களுக்கு விரைவில் புரிந்துவிடும். 'புத்த மதத்துக்கு முக்கியத்துவம் தராமல் தமிழரோடு ஒப்பந்தம் போடுகிறாயா?' என்று பண்டாரநாயகாவை சுட்டுக்கொன்ற புத்த சந்நியாசிகளின் பூமியில், தமிழருக்குக் குறைந்தபட்ச உரிமைகள் கொடுக்க ராஜபக்சவே முன்வந்தாலும் ஒன்று கொல்லப்படுவார்... அல்லது அதிகார நாற்காலியிலிருந்து அகற்றப்படுவார். பிரபாகரன் இல்லாத நிலையில், கொழும்பில் இருக்கும் ஆறு லட்சம் தமிழர் வாழ்வில் எந்த நேரத்திலும் அமைதி பறிக்கப்படும். காலம் பின்னாளில் நடத்தவிருக்கும் பாடம், நம் பிரதமருக்கும் சர்வதேசத் தலைவர்களுக்கும் உரிய ஞானம் தரும்.
இலங்கை இறையாண்மைக்கு உட்பட்டு, ஈழத் தமிழருக்கு இந்தியா அரசியல் அதிகாரங்களை இனி வாங்கித் தரும் என்று நாம் நம்புவோமாக! அதற்குமுன்பு வதை முகாம்களில் ஆடு-மாடுகளைப் போல் அடைக்கப்பட்டிருக்கும் மக்களுக்குப் போதிய உணவும் குடிநீரும் மருந்தும் கிடைக்க வழி செய்ய வேண்டும். இருப்பிடங்களை இழந்து நிற்கும் பத்து லட்சம் பேரும் மிக விரைவில் தங்கள் சொந்தக் குடியிருப்புகளுக்குத் திரும்ப வழி காணவேண்டும். நிவாரண உதவிகளை நேரடியாக சர்வதேச நாடுகளின் மனித உரிமை அமைப்புகள் வழங்க அனுமதிக்க வேண்டும். ராஜபக்ச வாக்களித்தபடி, ஆறு மாதங்களில் ஈழத் தமிழரின் இதய ரணங்கள் ஆறும் வகையில் அரசியல் தீர்வை அளிக்க வேண்டும்.
பிரபாகரன் மீது பழியைப் போட்டு நம் சொந்தங்களை சாவுப் பள்ளத்தில் தள்ளியதை வேடிக்கை பார்த்த இந்திய அரசு, இனியாவது செயலில் இறங்க வேண்டும். ஆனால், மன்மோகன் அரசோ ராஜபக்ச சகோதரர்களின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக உலக நாடுகள் நடவடிக்கை எடுப்பதைத் தடுப்பதில் தீவிரமாக இருக்கிறது. தமிழினம் எங்கே போய், யாரிடம் தன் விதியை நொந்து கொள்வது?!
இரண்டாம் உலகப் போரின் இறுதியில் அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன், பிரான்ஸ் ஆகிய நான்கு நாடுகளின் முயற்சியில் ஹிட்லரோடு இணைந்து மனித உரிமைகளைக் குழிதோண்டிப் புதைத்தவர்களுக்கு எதிராக 'நூரம்பர்க் விசாரணை' நடத்தப்பட்டு, தூக்கு தண்டனையும், ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.
போர்க் குற்றங்களுக்காகவும் மனிதகுல உரிமைகளுக்கு மாறான அத்துமீறல்களுக்காகவும் யாரையும் விசாரணைக் கூண்டில் நிறுத்தி, தண்டிப்பதற்காக சர்வதேச நாடுகள் முன்வந்தன. 'சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம்' உருவானது. 'உலகின் நீதிக்கும் அமைதிக்கும் அடித்தளம், மனித குலத்தின் கண்ணியம் காக்கப்படுதலே' என்று தெளிவுபடுத்துகிறது. 'சித்ரவதை, வன்கொடுமை, இழிவாக நடத்தப்படுதல் ஆகியவை மனித உரிமை மீறல்' என்கிறது அந்தப் பிரகடனத்தின் ஐந்தாவது பிரிவு.
'ஒரே நாளில் பல்லாயிரம் தமிழரைப் படுகொலை செய்த ராஜபக்ச அரசைக் கண்டித்து ஐ.நா. சபையின் மனித உரிமை அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பிரிட்டனும் ஐரோப்பிய நாடுகளும் வேண்டின. டென்மார்க் முயன்று 17 நாடுகளின் ஆதரவைத் திரட்டி மனித உரிமை சபையைக் கூட்டச் செய்தது. ஆனால், இலங்கை அரசு நிராயுதபாணிகளைக் கொன்று குவித்ததை நியாயப்படுத்தி, கம்யூனிச வரலாற்றில் களங்கத்தை ஏற்படுத்திய ரஷ்யாவும் சீனாவும் கியூபாவும், இந்தியத் தமிழரின் எதிர்ப்பு வருமே என்று சிறிதும் கவலைப்படாமல் மன்மோகன் அரசும், ராஜபக்சவைக் காப்பாற்றக் களம் அமைத்தன!
வியன்னாவில் ஒரு சீக்கிய மதகுரு படுகொலை செய்யப் பட்டதும், பஞ்சாப் பற்றி எரிந்தது. மன்மோகன் சிங் பதறுகிறார். வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வியன்னாவுடன் பேசுகிறார். ஆனால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழரின் பிணங்கள் விழுந்து மண் முழுவதும் மயானமானது. இந்திய அரசின் இதயம் மட்டும் இரங்கவில்லை. மன்மோகனின் மனம் பதறவில்லை; சோனியாவிடமிருந்து ஒரு சொல் வரவில்லை!
'சகோதரன் ஒருவனை விலங்கு பிணைத்திருப்பது உங்களை வருத்தாவிட்டால், நீங்கள் உண்மையில் இழிந்த அடிமைகளாகத்தான் இருக்க வேண்டும். வல்லமையற்றவர்க்கும் வாயில்லாதவர்க்கும் பரிந்து பேச அஞ்சுவோர் அனைவரும் அடிமைகளே!' என்றார் ஜேம்ஸ் ரஸ்ஸல். இங்குள்ள தமிழர்கள் இனவுணர்வற்ற அடிமைகள். ஐந்நூறு ரூபாய்க்குத் தங்கள் வாக்கை விற்பவர்கள். வாய்வீரம் பேசுவதில் மட்டும் வல்லவர்கள். பதவி தரும் சுகத்துக்காக ஏங்குபவர்கள். சொந்த நலனுக்காக இனநலனை இழப்பவர்கள்.
ஈழத்தில் வாடும் தமிழரும், புலம்பெயர்ந்து வாழும் தமிழரும் தாயகத் தமிழரை இனி நம்ப வேண்டாம். ஆயுதத்தை மறந்து விடுங்கள். அகிலம் முழுவதும் அறப்போரை நடத்துங்கள். 'அகிம்சையே வலிமை மிக்க ஆயுதம்' என்று போற்றிய புரட்சியாளர்கள் மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலாவை நெஞ்சில் நிறுத்துங்கள். பிரபாகரனே வெளிப்பட்டாலும் அகிம்சை வழியில் புரட்சியைத் தொடர்வதே உகந்தது. ஆயுதப் போரில் இனியும் எம் தமிழினம் அழியக்கூடாது.
முல்லை பெரியாறு, காவிரி, பாலாறு, ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் என்று எந்த உரிமை மறுக்கப்பட்டாலும் உறக்கத்திலிருந்து எழாத தமிழரையும், பல்லாயிரம் ஈழத் தமிழர் பலியான நாளில் குடும்ப உறவுகளை மத்திய அமைச்சர்களாக்க புதுடில்லி புறப்பட்ட தமிழினத் தலை வரையும், நம் இந்திய அரசு சரியாகவே இனம் கண்டு வைத்திருக்கிறது. அதனால்தான் அது ராஜபக்சவுக்கு அரியணை தாங்கி ஆலவட்டம் வீசுகிறது. தமிழினத்தின் புறநானூற்று வீரத்தில் புழுதி படிந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன.
'பாண்டியனின் வழி நீயா? இமயக்கோட்டில் பறந்திருந்தது உன் கொடியா? இலங்கை நாட்டை ஆண்டவர்கள் உன்னவரா? கலிங்கர் மண்ணை அதிரடித்தது உன்குலமா? கடல்கள் மூன்றைத் தாண்டியவர் பரம்பரையா? புட் பகத்தில், சாவகத்தில் கொடி போட்டான் பிள்ளையா நீ? மாண்ட வரலாற்றினுக்கும் உன்றனுக்கும் மயிரளவும் தொடர்பில்லை, எதற்கு வார்த்தை?' என்று சரியாகத்தான் சொன்னார் கண்ணதாசன்!
- தமிழருவி மணியன்.


ஈழத் தமிழர்கள் போராட்டத்தினை கொச்சைப்படுத்துகிறார் தமிழ்நாடு முதல்வர்: பழ.நெடுமாறன்.

Nedumaranதமிழீழப் பகுதி முழுவதிலும் பாதிக்கப்படாத தமிழர் குடும்பமே இல்லை. இவ்வளவு தியாகங்களை ஈழத் தமிழர்கள் செய்த பிறகு அந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்தவும் பின்னோக்கித் தள்ளவும் கருணாநிதி முயற்சி செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
“ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்க வேண்டுமேயானால் சிங்கள அரசின் மூலமாகதான் அதனைச் செய்ய முடியும். எனவே நம்முடையப் பேச்சால், நம்முடைய நடவடிக்கையால் சிங்களவர்களுடைய கோபத்தை அதிகரிக்கும் வகையில் எதுவும் செய்துவிடக் கூடாது.” என முதல்வர் கருணாநிதி தமிழகச் சட்டமன்றத்தில் கூறியிருக்கிறார்.
ஏறத்தாழ ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்களை ஈவு இரக்கம் இல்லாமல் படுகொலை செய்த ராஜபக்சவுக்கும் அவருடைய கூட்டத்திற்கும் ஆத்திரமூட்டும் எத்தகைய நடவடிக்கையிலும் ஈடுபடாமல் நடந்து கொள்ள வேண்டும் என தமிழர்களுக்கு கருணாநிதி அறிவுரை வழங்கியிருக்கிறார். அதாவது உதைக்கிற காலுக்கு முத்தமிட வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார்.
கன்னடர்களுக்கு கோபமூட்டாமல் காவிரிப் பிரச்னையிலும், மலையாளிகளுக்கு கோபமூட்டாமல் முல்லைப் பெரியாறு பிரச்னையிலும் நீக்குப் போக்குடன் கருணாநிதி நடந்து கொண்டதினால்தான் அப்பிரச்சினைகளில் தமிழகம் மிகப்பெரிய இழப்புகளுக்கு ஆளாக நேரிட்டது.
ஈழத் தமிழர் பிரச்சினையிலும் காங்கிரஸ் கட்சிக்கு கோபமூட்டி அதன் விளைவாக தேர்தல் உறவு பாதிக்கப்பட்டு விடக்கூடாதே என்பதற்காக இவர் கையாண்ட அணுகுமுறையின் விளைவாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
அது மட்டுமல்ல, “தமிழீழத் தனிநாடு இனி சாத்தியமானது அல்ல. சம உரிமையும் சம அதிகாரமும் கொடுக்குமாறு வேண்டி சிங்களவரிடம் மண்டியிட வேண்டும்” என்றும் ஆலோசனை வழங்கியிருக்கிறார்.
“கொள்கையைக் கைவிடுவதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும். திராவிட நாடு கொள்கையை தி.மு..க. கைவிட்டதற்கு காரணம் கட்சியை ஒழிப்பதற்கு சட்டம் வந்தபோது திராவிட நாடா அல்லது கட்சியா என்ற கேள்வி எழுந்தது. எனவே முதலில் கட்சிதான் வேண்டும் என்று முடிவு எடுத்ததாக”வும் முற்றிலும் உண்மைக்கு மாறான தகவலை கூறியிருக்கிறார்.
பிரிவினை கேட்கும் கட்சிகள் தடை செய்யப்படும் என்ற சட்டம் கொண்டு வரப்படவில்லை. பிரிவினை கேட்கும் கட்சிகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றுதான் சட்டம் கொண்டு வரப்பட்டது. தேர்தலில் போட்டியிட்டு பதவி சுகம் அனுபவிப்பதற்கு இச்சட்டம் தடையாக இருக்கும் என்று கருதியதால்தான் திராவிட நாடு கோரிக்கை குழிதோண்டி புதைக்கப்பட்டது. வரலாற்றுப் பூர்வமான இந்த உண்மையைத் திரித்து பேசுகிறார் கருணாநிதி.
30 ஆண்டு காலம் அறவழியில் சம உரிமைக் கேட்டு ஈழத் தமிழர்கள் போராடினார்கள். எதுவுமே கிடைக்காத காலகட்டத்தில் ஆயுதம் தாங்கிய போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள். 15 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் சொந்த மண்ணில் வாழ வழியில்லாமல் அயல்நாடுகளில் அகதிகளாக அடைக்கலம் புகுந்தார்கள்.
தமிழீழப் பகுதி முழுவதிலும் பாதிக்கப்படாத தமிழர் குடும்பமே இல்லை. இவ்வளவு தியாகங்களை ஈழத் தமிழர்கள் செய்த பிறகு அந்தப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தவும் பின்னோக்கித் தள்ளவும் கருணாநிதி முயற்சி செய்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
உலகத்தின் பல நாடுகள் ராஜபக்ச அரசின் மனித உரிமை மீறல்களை மிகக் கடுமையாகக் கண்டனம் செய்யும் கட்டத்தில் அவருக்கு வெண்சாமரம் வீசும் வேளையில் தமிழக முதலமைச்சர் ஈடுபட்டிருப்பது வெட்கக் கேடானதாகும். இதன் மூலம் உலக நாடுகள் நடுவில் ஈழத் தமிழர் போராட்டம் குறித்து ஒரு தவறானக் கண்ணோட்டத்தை ஏற்படுத்த அவர் செய்யும் முயற்சி வெற்றி பெறப் போவதில்ல. ஈழத் தமிழரின் மன உறுதி ஒரு போதும் தளரப் போவதில்லை. அவர்களுக்கு ஆதரவாக உலகத் தமிழர்களின் போரட்டங்களும் ஓயப் போவதில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Thursday, July 2, 2009

பணச்சிக்கல் வராமல் இருக்க… (வாழ்வில், தொழிலில்)

சூரியன்
Author: சூரியன்
கடன் வாங்கலாமா?
1.    மிக மிக அவசியத் தேவைகளுக்கு வாங்கலாம்.
2.    தொழில் விரிவிற்குச் சரியாகத் திட்ட மிட்டு, கணக்கிட்டுக் கடன் வாங்குதல் வேண்டும்.
இதை நான் சொல்வதற்குக் காரணம், பலர் மிகக் குறைவான வட்டிக்குப் பணம் கிடைக்கிறது என்பதன் காரணமாகவும், சில மிக அவசியமில்லாத தேவைகளுக் காகவும், வாங்கி விடுகின்றனர்.
இவ்வாறு வாங்கிய கடனை திருப்பிச் செலுத்திக் கொண்டிருப்பதால் அவர் களது,
1.    சேமிப்பு பாதிக்கப்படுகிறது.
2.    எதிர்பாராத செலவுகள் அவர்களுக்கு வரும்போது தடுமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பாய் அமையும்.
3.    அவசியம் இல்லாததற்கு கடன் வாங்கும் பொழுது மனதில் சுமைதான்.
கடன் வாங்கும்பொழுதே இதைத் திருப்பிக் கட்டுவது எதன் மூலம் (Source of Income) என்பது பற்றியும் எப்பொழுது திருப்பிக் கட்டப் போகிறோம் என்பது பற்றியும், எவ்வளவு வட்டி என்பது பற்றியும் மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.
அதேபோல் வருமானம் வந்த உடன் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனென்றால் சிலபேர் வருமானம் வந்த மகிழ்ச்சியால் வேறெதற்கோ செலவு செய்து விட்டு, அடுத்த வருமானத்தில் கொடுத்து விடலாம் என்று கடனைத் தள்ளிப் போட்டு விடுகின்றனர்.
கடனைக் குறிப்பிட்ட காலத்தில் திருப்பிச் செலுத்துவதால் கடன் வாங்கிய இடத்தில் நாணயம் காப்பாற்றப்படும் நமக்குள்ளே நம்மைப் பற்றிய ஒரு சுயமதிப்பு அதிகரிக்கும். கம்பீரம் பெருகும். நாணயத்தைக் காப்பாற்றி விட்டால் அவசரத் தேவைகளுக்கு எப்பொழுதும் பணம் கிடைக்கும்.
தொழில் தேவை தவிர வேறு எதற்குமே வாழ்க்கையில் கடன் வாங்காத அளவிற்கு வாழ்க்கையை திட்டமிட்டு அமைத்தால் வாழ்க்கை சந்தோசமாக அமையும்.
‘கடனை நண்பர்களிடமும் உறவினர் களிடமும் வாங்க வேண்டாம்;
கடனை வங்கியிடம் வாங்குங்கள்.
ஏனென்றால் உறவுகள் கோபப்படாமல் இருப்பது மிக முக்கியம்.
- ஓர் அறிஞர்
செலவுகள்
ஆடம்பரச் செலவுகளையும், தவிர்க்கக் கூடிய செலவுகளையும் தவிர்க்க வேண்டும். அது சேமிப்பாக மாறினால் வாழ்வுக்கு பாதுகாப்புக் கிடைக்கும்.
போலிக் கௌரவத்திற்காக செய்யப்படுகிற செலவுகளை நீக்க வேண்டும். அதனால் பெறுகிறமதிப்பைவிடப் பணம் நிறைய சேர்த்து வைத்தால் அதற்குக் கிடைக்கிற மதிப்பே வேறு.
ஆடம்பரச் செலவுகள் செய்து கிடைக்கிற அங்கீகாரத்தைவிட அந்தப் பணத்தைச் சேமித்து ஆபத்துக்கு உதவினால் வருகிறசந்தோசம் பெரிது.
KIM WOO - CHOONG : Founder & Chairman, DAEWOO GROUP சொல்கிறார்.
‘பணத்தை முதலீடு செய்யுங்கள். வீண் சுகங்களுக்காக அதைப் பயன்படுத்த வேண்டாம்.
ஓர் அறிஞர் சொன்னார், சிறு சிறு செலவு களைப் பற்றியும் கவனமாக இருங்கள். ஏனென்றால் கப்பலில் உண்டாகும் சிறு துளை யானது அக்கப்பலையே மூழ்கடித்து விடும்.
எனக்கு தெரிந்த ஒரு வங்கி அதிகாரி சொன்னார். சிலர் திருமணத்திற்காகக் கடன் வாங்கி செலவிடுகிறார்கள். பிறகு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். திருமணங்களில் செய்யப்படுகிற, பல செலவுகளைக் குறைத்து அந்த பணத்தை மணமக்களுக்குக் கொடுத்தால் அவர்களுடைய வாழ்க்கையைச் சந்தோசமாக ஆரம்பிப்பார்கள்.
வள்ளுவர் சொல்கிறார்,
‘அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்’.
பொருள் : தன் வருவாய் அளவறிந்து வாழாதவனின் வாழ்க்கை இருப்பது போலத் தோன்றி இல்லாமலே கெடும்.
இப்பொழுது நிறுவனங்களில் Cost control, Cost Production என்று எந்தெந்த வகைகளில் எல்லாம் வீண் செலவுகளைக் குறைத்தால் வருமானத்தை அதிகப்படுத்தலாம் என்ற ஆராய்ச்சிகள் பெருகி வருகின்றன.
சரியாகப் பட்ஜெட் போட்டுக் குடும்பத் திலும், தொழிலும் திட்டமிட்டு செலவு செய்தால் வாழ்க்கையை பிரச்சனை இல்லாமல் நடத்தலாம்.
சில தொழில் செய்வோர், தொழிலில் வருகிற இலாபத்தை மிகப்பெரும் வீடுகள் கட்டியும், பல கார்கள் வாங்கியும், விருந்தினர் மாளிகை கட்டியும் செலவிட்டு விடுகின்றனர்.  எதிர்பாராத விதத்தில் வரவேண்டிய பணம் வராத பொழுது, Working Capital - பொருள் உற்பத்தி செய்ய தேவைப்படுகிறபணம் இல்லாமல் தவித்துக் கடன் வாங்குவர். Market குறைந்து விட்டாலோ, எதிர்பாராத ஏதேனும் சிக்கல் ஏற்பட்டாலோ தொழில் முடக்கம் ஏற்பட்டுவிடும்.
ஆகவே, தொழிலுக்குத் தேவைப்படுகிற பணத்தை மற்றசெலவுகளுக்கு ஒரு நல்ல நிலைக்கு வரும்வரை மாற்றாமல் இருப்பது நல்லது.
எனக்குத் தெரிந்த பல கோடிகளை பன்ழ்ய் ர்ஸ்ங்ழ் செய்யக்கூடிய பல தொழிலதிபர்கள் இன்னும் வாடகை வீட்டில்தான் வசித்து வருகின்றனர். மிகப்பெரும் கோடீஸ்வரர் TATA கூட பல ஆண்டுகள் வாடகை வீட்டில்தான் வசித்து வந்தார்.
தொழிலையும், தொழில் வளர்ச்சியையும் முக்கியமாகக் கருதுபவர்கள் பெரும் செல்வந்த ராக மாறுவார்கள்.
முதலீடு செய்தல் (Investment)
இந்தியாவில் பல பொதுமக்கள் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு நிறுவனங்களைப் பற்றி சரியாக ஆராயாமல் அவற்றில் முதலீடு செய்து அவற்றில் கோடிக்கணக்கான பணத்தை இழந்தது எல்லோர்க்கும் தெரியும். இப்பொழுது ஒரு எச்சரிக்கை உணர்வு ஏற்பட்டிருக்கிறது.
முதலீட்டு ஆலோசகர்களை (Investment Consultant) கண்டுபிடித்து அணுகி ஆலோசனை கள் கேட்டு முடிவெடுத்து முதலீடு செய்தால் பணத்திற்குப் பாதுகாப்பு கிடைக்கும்.
‘Investigate before investing’
அதாவது,
‘முதலீடு செய்யும் முன்பு தகவல் சேகரித்து அலசி ஆராயுங்கள்’ நீங்கள் பணம் போடும் நிறுவனம் பணத்தை வாங்கி வைத்து எதில் முதலீடு செய்கிறார்கள்? என்கிற விவரங்களைக் கேளுங்கள். அவர்கள் அதை தவறான வழியில் அல்லது வளர்ச்சியடையாத துறைகளில் முதலீடு செய்தால் பணம் திரும்பி வராது.
நீங்கள் முதலீடு செய்யும் நிறுவனத்தில் உள்ள நிர்வாகிகள் மற்றும் கம்பெனியின் வரலாறு, அதன் நம்பகத்தன்மை அதன் அரசு அங்கீகாரம் போன்ற பல விபரங்களை தெளிவாக்கி பின் முதலீடு செய்யுங்கள்.
பொதுவாக எந்த முடிவு எடுப்பதற்கு முன்பும் எல்லாப் பகுதிகளும் வெளிச்சமாய்த் தெரிய வேண்டும். ஏதேனும், இருட்டுப் பகுதி இருந்தால் தோல்விகள் வர வாய்ப்புண்டு.
‘Whenever there is darkness
There is a possibility for failure’
சேமிப்பு (Savings)
உலக அளவில் பொதுவாகச் சொல்லப் படுகிற ஒரு கருத்து சம்பாதித்த வருமானத்தில் குறைந்தது 10% சேமிக்க வேண்டும்.
சேமிப்பு என்று போட்டுவிட்டால், அதை எந்தச் சிக்கலான நேரத்திலும் செலவழிக்க எண்ணக்கூடாது.
சேமிப்பு விதி (The Law of Savings) என்ன சொல்கிறதென்றால், ஒரு மனிதன் பொருளாதார சுதந்திரம் அடைய வேண்டுமென்றால் வாழ்க்கை முழுவதும் தங்களுடைய வருமானத்தில் குறைந்தது 10% சேமிப்பு செய்து கொண்டே இருக்க வேண்டும்.
Parkinson’s Law என்ன சொல்கிற தென்றால், வருமானத்தின் அளவிற்குச் செலவுகள் பெருகிக் கொண்டே இருக்கும்.
சிலர் செய்வது என்னவென்றால் பணச் சிக்கல் என்று வந்துவிட்டாலே முதலில் கை வைப்பது சேமிப்பைத் தான்.
ஒருவருக்கு வருமானத்தைப் பெருக்கும் சக்தியும், காலமும் இருக்கும்பொழுதே சேமிப்பை எடுக்காமல் வாழ முடியவில்லை என்றால், வருமானம் இல்லாமல் போகும் வயதான காலத்தில் என்ன செய்ய முடியும்.