Showing posts with label தினமணி. Show all posts
Showing posts with label தினமணி. Show all posts

Saturday, July 11, 2009

இந்து ராம் யார் காதில் பூ சுற்ற நினைக்கிறார்?

image

சொந்த மண்ணில் அகதிகளாக உறவுகள் இருந்தும் அநாதைகளாக உரிமைகள் இருந்தும் அடிமைகளாக கம்பி வேலிகளாலும் கழுகுப் பார்வை பார்க்கும் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களாலும் ஆட்டுமந்தையைப்போல இலங்கையிலுள்ள முகாம்களில் அடைபட்டு அல்லல்படும் ஏறத்தாழ மூன்று லட்சம் பேர்களின் பரிதாப நிலைக்காக நாம் ரத்தக் கண்ணீர் வடிப்பது அவர்கள் தமிழர்கள் என்பதற்காக மட்டுமல்ல அவர்களும் மனிதர்கள் என்பதால்தான்.

எந்தவொரு நாட்டிலும் எந்தவொரு இனத்திற்கும் இப்படியொரு நிலைமை ஏற்பட்டால் அவர்களுக்காகக் குரலெழுப்பவும் அவர்களது உணர்வுகளைப் பிரதிபலிக்கவும் நமக்குக் கற்றுத் தந்தவர்கள் அன்னிய நாட்டுப் போராளிகளோ மேதாவிகளோ அல்ல. நமது தேசப்பிதா மகாத்மா காந்தி!

அங்கே அடுத்த வேளைச் சாப்பாடு கிடக்கட்டும் வறண்டுபோன தொண்டையின் தாகம் தீர்க்கத் தண்ணீர்கூடக் கிடைக்காமல் இயற்கையின் அழைப்பை எதிர்கொள்ள இடமில்லாமல் ரணத்தின் வேதனையிலிருந்து நிவாரணம் பெற வைத்திய வசதி பெற முடியாமல் தவிக்கும் மூன்று லட்சம் பேர்களும் ஆறு அகதிகள் முகாமில் அடைந்து கிடக்கிறார்கள். அவர்களது நிலைக்குப் பரிதாபப்படாமல் இந்தியாவிலுள்ள அகதிகள் முகாம்களைவிட நேர்த்தியாகவும் வசதியாகவும் இலங்கை அரசு அந்த முகாம்களை நிர்வகிக்கிறது என்று நற்சான்றிதழ் வழங்கத் தமிழக ஊடகங்களே தயாராகிறதே அதுதான் விசித்திரமாக இருக்கிறது.

மூன்று லட்சம் பேர். ஆறு முகாம்களில் – சுமார் 85000 குடும்பங்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்து கையறு நிலையில். இவர்களை செல்வச் செழிப்பான அமெரிக்கா போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளால்கூட வசதியாகப் பராமரிக்க முடியாதே அப்படி இருக்கும்போது இந்த அகதிகளுக்கு உண்ண உணவும் நோய்க்கு மருந்தும் கொடுக்க வழியில்லாமல் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளிடம் கையேந்தும் இலங்கை அரசு மகிழ்ச்சியாகவும் நேர்த்தியாகவும் முகாம்களில் சகல வசதிகளுடன் பராமரிக்கிறது என்று நற்சான்றிதழ் கொடுப்பவர்கள் யார் காதில் பூ சுற்ற நினைக்கிறார்கள்? யாருக்குத் தூதுவர்களாகச் செயல்படுகிறார்கள்?

பிரபல பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்று அவர்கள் மூலம் தனது கபட நாடகங்களுக்கு உலக அரங்கில் அங்கீகாரம் தேடும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டிருக்கிறது என்பதும் அதற்கு நம்மவர்கள் சிலரேகூடத் துணை போகிறார்கள் என்பதும் ஒருபுறம் இருக்கட்டும். அங்கே தமிழ் ஈழ அகதிகள் முகாம்களின் உண்மை நிலைதான் என்ன?

வட இலங்கையில் வவுனியா பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டு ஆறு முகாம்களில் கம்பி வேலிகளுக்குள்ளே இந்த அகதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். சுற்றிலும் ஆயுதம் ஏந்திய ராணுவத்தினர் இவர்கள் வெளியில் சென்றுவிடாமல் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். சுமார் 10000-க்கும் அதிகமான தாற்காலிகக் கூடாரங்கள் அமைக்கப்பட்டு இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் அதில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள

முறையான கழிப்பறை வசதிகள் கிடையாது. குடிக்கவும் குளிக்கவும் தண்ணீர் வசதி கிடையாது. வயிறு நிறைய உண்ண உணவு கிடையாது. மருத்துவ வசதியும் முழுமையாகக் கிடையாது. 13000 அகதிகள் இருக்கும் முகாமில் எட்டு மருத்துவர்களும் நான்கு செவிலியர்களும் போராட்ட பூமியிலிருந்து காயங்களுடன் கதறித் துடிக்கும் அகதிகளுக்கு என்னதான் மருத்துவ உதவி அளித்துவிட முடியும்?

உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாம் என்று ஐக்கிய நாடுகள் சபையால் வர்ணிக்கப்படும் செடிக்குளம் முகாமின் நிலைமை அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறுவது நாமல்ல சரத்நந்த சில்வா என்கிற இலங்கை உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி. அவர் மட்டுமல்ல ஐக்கிய நாடுகள் சபை செயலர் பான்கி-மூன் இதையே வருத்தப்பட்டுத் தெரிவித்திருக்கிறார்.

இலங்கை ராணுவத்தைவிடக் கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் இந்திய ராணுவம் திறமை வாய்ந்தது. இந்திய ராணுவத்தின் உதவியுடன் அடுத்த ஒரே மாதத்தில் கண்ணி வெடிகளை அகற்றவும் அகதிகள் முகாம்களைப் பராமரிக்கவும் இலங்கை அரசு முன்வர வேண்டும். அதற்கு இந்திய அரசு வற்புறுத்தவும் வேண்டும்.

முகாம்களில் அடைந்து கிடப்பவர்கள் அவரவர் இருப்பிடங்களுக்குத் திரும்பாதவரை நாளும் பொழுதும் செத்து மடியும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம்தான் இருக்கும். ராணுவம் முற்றிலுமாக அகன்று பொது நிர்வாகம் செயல்பட்டால்தான் சகஜ வாழ்க்கை தமிழர்கள் வாழும் பகுதிகளில் திரும்பப் போகிறது. அதற்குப் பிறகுதான் ஈழத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு என்ன என்பதையும் அரசியல் தீர்வு எப்படி அமைய வேண்டும் என்பதையும் யோசிக்க முடியும். இதுதான் யதார்த்த உண்மை.

நீங்கள் நிதி உதவியும் பொருள் உதவியும் தாருங்கள். நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்கிற இலங்கை அரசின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு அவதிப்படும் அகதிகளுக்கு உதவ இந்திய அரசு முன்வந்தால் மட்டுமே அவர்கள் வாழ்வில் நம்பிக்கை மலரப் போகிறது. இனியும் நாம் வாளாவிருந்தால் நியாயமல்ல!

நம்மை வழி நடத்துவது “காந்தி’தானே? மகாத்மா காந்திதானே?

- நன்றி தினமணி-


Friday, June 26, 2009

அரசாங்கம் எதற்கு, தனியாரிடம் ஆட்சியை ஒப்படைத்து விடலாமே?’

 editlogo-copy

ஒரு நல்ல பத்திரிகை அல்லது பத்திரிகையாளனின் அடையாளம் என்ன தெரியுமா… நாட்டு நடப்பைச் சொல்வதோடு நில்லாமல், நாடு எந்த திசையில் செல்ல வேண்டும் என வழிகாட்டுவதும்தான்.

தமிழ் நாளிதழ்களில் -பல வித விமர்சனங்கள் இருந்தாலும்-இன்றைக்கு தினமணியைத் தவிர வேறு எந்த பத்திரிகைக்கும் அந்த தகுதி இல்லை என்பதே உண்மை. தமிழ் ஈழம், அரசியல் நடப்பு, மத்திய அரசின் தமிழர் விரோதப் போக்கு என பல விஷயங்களில் தினமணியின் பார்வை நேர் கொண்டதாகவே, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் கொண்டதாகவே அமைந்துள்ளது.

சாலைப் பாதுகாப்பு வரி என்ற பெயரில் தமிழக அரசு மக்கள் தலையில் புதிய வரியொன்றைச் சுமத்தியுள்ளது. இதுகுறித்து தினமணி இன்று வெளியிட்டுள்ள தலையங்கம் மக்கள் மனங்களை அப்படியே பிரதிபலிக்கிறது. ‘எதற்கெடுத்தாலும் பணம் பிடுங்குவது என முடிவெடுத்துவிட்டால், அப்புறம் ஆட்சி எதற்கு… தனியாரிடம் அதை ஒப்படைத்துவிடலாமே..’ என மாநில அரசின் தலையில் ஓங்கி ஒரு குட்டு வைத்துள்ளது.

அந்த தலையங்கம்:

இருக்கிற வரிகளெல்லாம் போதாதென்று இனி இருசக்கர வாகனங்கள் உள்பட புதிய வாகனங்களைப் பதிவு செய்வதாக இருந்தால் “சாலைப் பாதுகாப்பு வரி’ என்கிற புதிய வரியையும் பொதுமக்கள் தலையில் சுமத்த மாநில அரசு முடிவெடுத்திருக்கிறது.

சாலைப் பாதுகாப்பு, சாலை விபத்தில் காயமடைவோர் மற்றும் உயிரிழப்போர் குடும்பத்திற்கு உதவும் வகையில் இந்தப் புதிய வரி விதிப்பு செய்யப்படுவதாக அறிவித்திருக்கிறார் தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர். சாலைப் பாதுகாப்பு என்பது காவல்துறையினரின் வேலை. சாலையைச் செப்பனிடுவது மற்றும் பராமரிப்பது என்பது நெடுஞ்சாலைத் துறையின் வேலை. இந்த வேலைக்காகத்தான் வாகன வரியும் ஓட்டுநர் உரிமத்துக்கான கட்டணமும் ஏற்கெனவே வசூலிக்கப்படுகிறது. போதாக்குறைக்கு ஏனைய பல வரிவிதிப்புகளும் உள்ளன.

காயமடைவோர் மற்றும் உயிரிழப்போர் நலனைப் பேணுவதற்காகத்தான் கட்டாய வாகனக் காப்பீடு செய்யப்படுகிறது. காயமடைவோர் மற்றும் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிப்பது காப்பீடு நிறுவனங்கள்தானே தவிர, மாநில அரசு அல்ல.

அப்படி இருக்க, எதற்காக இப்படியொரு புதிய வரி என்பது புதிராக இருக்கிறது. ஒருபுறம் மதுபான விற்பனை அமோகமாக நடப்பதால், அரசு கஜானா நிரம்பி வழிகிறது என்று மாநில அரசு மார்தட்டிக் கொள்கிறது.

இன்னொருபுறம், இலவசத் திட்டங்களை வாரி வழங்கி அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்த அரசு முயல்கிறது. ஆனால், மற்றொருபுறமோ, இதுபோல தேவையில்லாத அர்த்தமில்லாத வரிகளை மக்கள் மீது சுமத்தி அவர்களின் ஏகோபித்த வயிற்றெரிச்சலையும் வாங்கிக் கட்டிக்கொள்கிறது.

தேர்தலுக்கு முன்னால் பஸ் கட்டணத்தைத் திடீரென்று குறைத்தார்கள். தேர்தல் கமிஷனின் கண்டிப்பினால் குறைத்த கட்டணத்தை மறுபடி உயர்த்தினார்கள். இப்போதுதான் தேர்தல் எல்லாம் முடிந்து, அமோக வெற்றியும் பெற்றாகிவிட்டதே! மக்களுக்கு நன்றி செலுத்தும் முகமாக பஸ் கட்டணத்தை முன்பு திட்டமிட்டதுபோல குறைப்பார்களென்று எதிர்பார்த்தால், சம்பந்தாசம்பந்தமே இல்லாமல் இப்படி புதியதொரு வரியை விதிக்கிறது தமிழக அரசு!

சாலைகள் அமைப்பது, கல்வி, சுகாதாரம், குடிநீர் வசதி போன்றவைகளை மக்களுக்கு அளிப்பது, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது போன்றவை ஓர் அரசின் அடிப்படைக் கடமையல்லவா? இதற்காகத்தானே வருமான வரி, விற்பனை வரி, சுங்க வரி, வீட்டு வரி, வாகன வரி என்று மக்களிடமிருந்து வரிகள் பல வசூலித்தும் வருகின்றனர்?

அதற்குப்பிறகும் சாலைகளில் பயணிக்கக் கட்டணம் வசூலிப்பது ஏன்?

சுற்றுலா வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கிறோம் என்கிறது அரசு. மகாபலிபுரத்துக்கு யாராவது பயணிக்க வேண்டுமானால் அதற்கு சுங்கம் (டோல்) கட்டியாக வேண்டும். கேட்டால் கட்டணச் சாலையில் இலவசமாக எப்படி நீங்கள் பயணிக்க நினைக்கலாம் என்று கேட்கிறார்கள்? சாலைகளை அமைத்துப் பராமரிக்கும் அரசின் கடமைக்குக் கட்டாயக் கட்டண வசூல் என்பதே வேடிக்கையாக இல்லை?

வர்த்தக ரீதியிலான வாடகைக் கார்கள், சரக்குப் போக்குவரத்துக்கான வேன்கள், லாரிகள் மற்றும் பஸ்களிடமிருந்து கட்டணம் வசூலித்தால்கூட ஏற்றுக்கொள்ளலாம். தனியார் வாகனங்களிடமிருந்து 20-ம் 30-ம் 40-ம் சாலைக்கட்டணம் என்ற பெயரில் போகும்போதும் வரும்போதும் வசூலிக்கப்படுவது பகல் கொள்ளையல்லவா? இதற்கு அரசாங்கம் எதற்கு, தனியாரிடம் ஆட்சியை ஒப்படைத்து விடலாமே?

“மானியங்கள் ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட வேண்டும். எதுவும் இலவசமாக வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பது சரியல்ல. அது கல்வியானாலும், மருத்துவ வசதியானாலும், சாலைகளானாலும் அதற்கான கட்டணத்தை பொதுமக்கள் தரத்தான் வேண்டும்’

- இது, கடந்த 20 ஆண்டுகளாக உலக வங்கியின் பொருளாதார மேதைகள் நமது ஆட்சியாளர்களுக்குச் சொல்லித் தந்திருக்கும் உபதேசம். அதன் விளைவுதான் பணம் படைத்தால் மட்டுமே இந்தியாவில் வாழ முடியும் என்கிற நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது.

சாலைப் பாதுகாப்பு வரி என்பது ஓர் அப்பட்டமான மோசடி. சாலை விபத்தில் காயமடைவோர் மற்றும் உயிரிழப்போரின் குடும்பத்தாருக்கு முறையாகவும் விரைவாகவும் வாகனக் காப்பீட்டுக் கழகங்கள் நிவாரணம் அளிக்கிறதா என்பதை அரசு உறுதி செய்தாலே போதும்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வாகனங்களால் ஏற்படும் சாலை விபத்துகளால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு முறையாகவும் நியாயமாகவும் அரசு நிவாரணம் கொடுத்தாலே போதும். அதையெல்லாம் விட்டுவிட்டு இதுபோல மோசடியான வரிகளை பொதுமக்கள் தலையில் சுமத்தி அவர்கள் காதில் பூ சுற்ற வேண்டிய அவசியமில்லை!

நன்றி: http://www.envazhi.com/