Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Friday, September 4, 2009

ஈழம் எழும் விழுப்புரம் கா. தமிழ்வேங்கை.

உங்கள் சட்டத்தினால்
எங்கள் கைகளுக்கு விலங்கிடலாம்:
எந்தச் சட்டத்தினால்
எங்கள் உணர்வுகளுக்கு
விலங்கிடப் போகிறீர்கள்?
அஞ்ச மாட்டோம்
அச்சுறுத்தாத நாங்கள்
எந்த அச்சுறுத்தலுக்கும்:
தடை விதிப்பது
உங்கள் கடமையானால்
உடைப்பது எங்கள் உரிமையாகும்...
என்ன செய்வது!
காவல் துறையோ,
உங்கள் கையில் அடக்கம்
நீங்களோ
"கை"க்குள் முடக்கம்
தமிழினத்தின்
வேராக இருப்பீர்கள்
என நம்பினோம்
நடைமுறையில்
நீங்கள் "வேறாக" இருக்கிறீர்கள்
சட்டத்தைச் சொல்லி
மிரட்டும் நீங்கள்
நீதிமன்றத் தீர்ப்பினை
மதிப்பதில்லையே!
கொள்கையின் குறுக்கே
எத்தனை தடுப்புச் சுவர்களானாலும்
தகர்ப்பது ஒன்றே
எங்கள் தலையாய பணி
அய்யா முதல்வரே!
அஞ்சமாட்டோம்...
தடியடிக்கும்
சிறைக் கொட்டடிக்கும்
புலிகளை
புலிக்கொடியை
பிரபாகரனை
எந்நாளும் ஆதரிப்போம்
எழும் ஈழம்...


Thursday, September 3, 2009

தம்பி வருவார் தமிழினம் மீள... – அருணாசுந்தரராசன்.

தாய்மாரை

தவிக்க விட்டு

தங்கைகளின்

கண்ணீர் கேட்டு

இருப்பாரா தலைவர்

இல்லை இல்லை

திரும்பி வருவார்...

தாயக மீட்சி

தலைமேல் காத்து

தியாகம் செய்திட

தம்பிகள் உண்டு

இருப்பாரா தலைவர்

இல்லை இல்லை

திரும்பி வருவார்...

தம்பியின் இருப்பு

தமிழரின் விருப்பு

தமிழீழ நெருப்பு

தாங்கிடும் பொறுப்பு

இருப்பாரா தலைவர்

இல்லை இல்லை

திரும்பி வருவார்...

எங்கள் வானும்

எங்கள் நிலமும்

ஏதிலியர் மயமானது

எங்கும் விரிந்த

எங்கள் தமிழர்

ஏங்கும் நிலையானது

இருப்பாரா தலைவர்

இல்லை இல்லை

திரும்பி வருவார்..

சிங்கள செருக்கு

சிதறிப் போகும்

செந்தமிழ் ஈழம்

சீக்கிரம் விடியும்

தம்பி வருவார்

தமிழினம் மீள

தலைமையும் ஏற்பார்

தமிழீழம் விடிய...


Tuesday, September 1, 2009

என் கனவு தேசம்!

image

கல்லறைகளையும்

சாம்பல் மேடுகளையும்

கொண்டே சாத்தியமாக்ப்படும்

என் கனவு தேசமே!

எத்தனை வலியகள் சுமந்தாய்

எத்தனை புயல்கள் கடந்தாய்

எத்தனை ஏமாற்றம் கண்டாய்

எதற்க்கும் சளைக்காத –என்

கனவு தேசமே!

நேற்றைய வேதனையை

வேதமாக்கிய உன்

வேள்விப்புருசர்கள்

நாளை உனை மீட்பர்

நொய்ந்து தினம் சாகும்

கோலத்தமிழினம்

உயந்து கொல்லும் பகை

என் கனவே தேசமே

காணமல் போய் விடாதே!

கருங்காலிகள் பலரின்

குள்ள நரித்தனத்தால்

காட்டிக் கொடுக்கப்பட்ட

என் கனவு தேசமே

கவலை கொள்ளாதே

பிரிவினில் வாடும் காதலர் என

அழுது நீ தவிப்பது புரிகிறது

உன் மகன் என் தலைவர்

அவர் காலடி உன் அடியில்

இருக்கும் வரை

அழுகை வேண்டாம்

என் கனவு தேசமே!

என் கனவு தேசமே

கல்லறையின் விதைப்பு உனக்காய்

காவலரணில் என் தோழனின்

விழிப்பும் உனக்காய் தான்

காத்திரு விழி பூத்திருக்கும்

உன் குழந்தைகள் உனை மீட்பர்.


Tuesday, July 28, 2009

தமிழ்நாட்டுத் தமிழனுக்கு... – நிர்மலா.

அன்று

வணிகக் கப்பல்கள்

வரிசையாய் அணிவகுத்த நின்ற

நம் தென்கடலில்,

இன்று-ltte-tamilan-eelam

நச்சு உலைகள்

நங்கூரமிட நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றன

நீ,

தாராளமாய்த் தாரைவார்த்துக் கொடுத்தத்

தமிழ் மண்ணில்

உன்னையே வேவுபார்க்க

உளவுக்கோபுரம் உயர்ந்து கொண்டிருக்கிறது

இங்கிருந்து

அமைதிப்படை புறப்பட்ட அன்றே

நம் கடல் பகுதியின்

அமைதி குலைக்கப்பட

அங்கீகாரம் வழங்கப்பட்டது.

உனக்கு ஏனோ

புரியாமல் போயிற்று

ஆன்றோர் அறிவுரை

உனக்கு

உறைக்காமல் போனது,

அன்று மட்டுமல்ல-

இன்று வரையிலும் தான்!

தமிழா!

ஈழ இளங்குருத்துக்களின்

குருதிக் கறை படிந்த

"கை"க்கும்

மானங்கெட்டு,

பிச்சைப் பாத்திரத்தினுள் கவிழ்ந்து

உதிக்க மறந்த "சூரியனு"க்கும்

நீ போட்டாயே ஓட்டு,

அவை திரும்பிவரும்...

பகைப்புலங்களின் ஆயுத வீச்சுகளாய்!

செய்தித்தாள்களில் மட்டுமே

நீ -

வாசித்தறிந்த வடபுலத்து யுத்தங்கள்

இன்று நம்

வாசற்கதவைத் தட்டிக் கொண்டிருக்கின்றன.

விண்மீன்களைக் கண்டால் கூட

வீறிட்டு அலறும்

ஈழக் குழந்தைகளின்

அவல அனுபவங்கள்,

நமது தலைமுறைகளுக்கும்

தயாராகிக் கொண்டிருக்கின்றன

நீயோ-

ஒலிம்பிக் விழாவில் சிதறும்

சீனப் பட்டாசுகளைப் பார்த்து

வாய்ப்பிளந்து கொண்டிருக்கிறாய்

ஈழத்திரு மண்ணில் -

பிணம் புதைக்கத் தோண்டப்பட்ட

குழிகளில் கூட

குருதி கொப்பளித்துக்கொண்டிருந்த

அக்கொடூரப் பொழுதுகளில்

நீ

"கவர்"களின் கனத்தக்

கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தாயே...

நினைவில் கொள்!

ஈராயிரம் ஆண்டுகளின் சாரம் ஊறி,

ஆறு பத்தாண்டுகளில் வைரம் ஏறி

உயிர் ஊற்றி வளர்த்திட்ட

ஈழமரம் -

வெட்டப் படுவதற்குக்

கோடாலி வார்க்கப்பட்டது

உனது உலைகளில்!

வெட்டப்பட்ட மரம்

நிச்சயமாய் துளிர்க்கும்;

ஆயிரமாயிரம் -

துவக்குகளாய் உயிர்க்கும்!

இங்கு நீயோ,

உன் வேர்களை வெட்டிக்கொண்டிருக்கிறாய்

எச்சரிக்கை!

நன்றி: http://www.thenseide.com


Friday, July 3, 2009

'தமிழா... உன் கதி இதுதானா?'- ஜூனியர் விகடன்.

 

eelam "உன்னதமானவர்கள் வீழ்ந்துவிட்டனர்.ஆளரவமற்ற இருட்புலத்தில்
அவர்கள் புதைக்கப்பட்டனர்.
யாரும் கண்ணீர் சிந்தவில்லை.
யாரோ அவர்களைக்
கல்லறைக்கு எடுத்துச் சென்றனர்.
அவர்தம்
புகழ்வாய்ந்த பெயர் கூறிட
அங்கே சிலுவையோ...
சமாதியோ... மண்டபமோ
ஏதுமில்லை.
புல் முளைத்திருக்கிறது அங்கே.
தாழ்ந்திருக்கும் புல்லிதழ் ஒன்று
அந்த இரகசியத்தைத் தாங்கியிருக்கிறது.
கரை மீறிச் சீறியடிக்கும்
அலைகள் மட்டுமே சாட்சியம்.
வல்லமை வாய்ந்த
அவ்வலைகள் கூட
தொலைதூர இல்லத்துக்கு
செய்தியைக் கொண்டுபோக முடியாது..."
என்ற வி.என்.ஃபிக்னரின் கவிதை ஒன்று, வன்னிப் பகுதியில் நிகழ்ந்து விட்ட சோகத்தைச் சொல்வதற்காகவே எழுதப்பட்டது போல் இருக்கிறது..!
விடுதலைப் புலிகளை ஒட்டு மொத்தமாக அழித்து விட்டதாக ராஜபக்சவின் இராணுவம் அறிவித்துவிட்டது. பிரபாகரனை கொன்றுவிட்டதாக இலங்கை அரசு எக்காளமிடுகிறது. பிரபாகரன் செத்துவிட்டதாக ஒரு சான்றிதழ் பெற நாராயணனும், சிவசங்கர மேனனும் புதுடில்லியிலிருந்து கொழும்புக்குப் பறந்தனர். ராஜபக்சவின் வெற்றிச் சிரிப்பில், இருவரும் முகமலர்ந்து நிற்பதை செய்தித்தாள்கள் படமாக்கின. ஒரே நாளில் பல்லாயிரம் தமிழர் படுகொலை செய்யப்பட்டது, நம் பிரதமரின் தூதுவர்களைத் துளியும் பாதிக்கவில்லை. தமிழினத்தின் உயிர் அவ்வளவு அற்பமாகப் போய்விட்டது!
சிங்களர்கள் அனுராதபுரத்திலும், கொழும்பிலும் ஆடிப் பாடி மகிழ்ந்தனர். இதயத்தை அழுத்தும் சோகத்தைக் கூட வெளிப்படுத்த முடியாமல் தமிழ்க் குடும்பங்கள் ஒடுங்கின. இனி எல்லாம் நலமாக நடந்தேறும் என்று இந்திய அரசும், உலக நாடுகளும் 'நாடி ஜோசியம்' சொல்வதை நாம் நம்ப முயல்வோம்!
ஹிட்லரின் இன அழிப்புப் படையால் ஆஸ்விட்ச் வதை முகாமிலும், புச்சன்வால்ட் மரண முகாமிலும் சொற்களில் இறக்கிவைக்க முடியாத சோகங்களை அனுபவித்த, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற எலீ வீஸல் தன், 'இரவு' என்ற படைப்பில் வெளிப்படுத்திய உணர்வுகள் இங்கே நினைவுக்கு வருகின்றன.
'என் வாழ்க்கையையே சபிக்கப்பட்ட ஒரு நீண்ட இரவாக மாற்றிய அந்த நாளை நான் என்றுமே மறக்கமாட்டேன். அந்தப் புகையை, மௌனமான நீலவானத்தின் கீழ் புகை வளையங்களாக மாறிய அக்குழந்தைகளின் சிறிய முகங்களை என்னால் மறக்க முடியாது.
என் நம்பிக்கையை முற்றிலும் விழுங்கிய அத்தீச்சுவாலைகளை, வாழும் ஆசையை முற்றாகப் பறித்துவிட்ட, ஆதியும் அந்தமும் அற்ற அந்த இருண்ட அமைதியை எப்படி மறப்பேன்? எனது கடவுள் நம்பிக்கையையும் ஆன்மாவையும் கொன்று, எனது கனவுகளை சாம்பலாக்கிய அந்தக் கணங்களை நான் என்றும் மறக்கமாட்டேன். கடவுளைப் போல் நான் வாழ விதிக்கப்பட்டாலும், அந்த நாளை என்றென்றும் மறக்கமாட்டேன்!' என்று அவர் வெளிப்படுத்திய அதே உணர்வுகளுடன்தான் ஒவ்வொரு ஈழத்தமிழரும் இறுதி வரை இருப்பர் என்பது நிஜம். 'பிரபாகரன் தலைமையில் இயங்கிய விடுதலைப் புலிகளால்தான் ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் நிறைவேறாமல் போனது. அது மட்டும் நிறைவேறியிருந்தால், இன்று ஈழத் தமிழர்களுக்கு எல்லா உரிமைகளும் வந்துசேர்ந்திருக்கும்!' என்று சொல்லிவந்தவர்களுக்கு இப்போது நல்ல வாய்ப்பு கனிந்திருக்கிறது. பிரபாகரனை கொன்றுவிட்டதாகவும் விடுதலைப் புலிகளை வென்றுவிட்டதாகவும் பிரகடனம் செய்திருக்கும் இலங்கை அரசு, சிங்களருக்கு சமமாக அனைத்து உரிமைகளையும் எஞ்சியிருக்கும் ஈழத்தமிழருக்கு வழங்க, இப்போது இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?
இலங்கை இறையாண்மைக்கு உட்பட்டு இப்போது நடைமுறையில் இருக்கும் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் தமிழருக்கு சம உரிமை சாத்தியமா? இலங்கை முழுவதும் சிங்களத்துடன் தமிழும் ஆட்சி மொழியாக இதயசுத்தியுடன் அங்கீகரிக்கப்பட்டு, தமிழ் வழி கற்றவர்கள் அரசு நிர்வாகத்தின் சகல துறைகளிலும் அமர்ந்து பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படுமா? முழுமையான கூட்டாட்சி மலராமற்போனாலும், தமிழக அரசுக்குரிய ஆட்சியுரிமைகளாவது வடக்கிலும் கிழக்கிலும் அமைக்கப்படும் அரசுகளுக்குக் கிடைக்கக்கூடுமா? கிழக்குப் பகுதியில் திருகோணமலைப் பக்கம் திட்டமிட்டு சிங்களரைக் குடியேற்றி தமிழர் நிலங்களை அபகரித்தது போன்று, வடக்கில் வன்னிப் பகுதியில் சிங்களக் குடியேற்றம் நடக்காமல், தமிழரின் வரலாற்று வாழ்வாதாரப் பகுதிகள் பாதுகாக்கப்படுமா? இராணுவத்திலும் காவல்துறையிலும் தமிழர் கணிசமாக இடம்பெற சிங்களப் பேரினவாதப் பௌத்த வெறியர்கள் அனுமதிப்பார்களா? இந்த வினாக்களுக்கெல்லாம் இவர்கள் முதலில் விடை காணட்டும்.
"பிரபாகரன்தான் வன்முறையை வளர்த்தெடுத்தார். விடுதலைப் புலிகளால்தான் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. ஈழம் அமைதி இழந்ததற்கு இவர்களுடைய இரத்த வெறியே காரணம்!" என்று இங்குள்ள காங்கிரஸ் நாட்டாமைகள் கிளிப்பிள்ளைபோல் இன்று வரை கூறி வருகின்றனர். நூறு எலிகளை விழுங்கிய பூனை தீர்த்த யாத்திரை போன கதைதான் சிங்கள வெறியர்களின் செயல் என்பதை இவர்களுக்கு யார்தான் புரியவைப்பது?
சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று 1956 இல் அறிவிக்கப்பட்டதும், நாடாளுமன்றத்துக்கு முன்னால் காலிமுகத் திடலில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட தமிழினத் தலைவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி, கொழும்பில் தமிழர் சொத்துகளைச் சூறையாடியது யார்? பண்டா - செல்வா ஒப்பந்தத்தை நிறைவேற்றும்படி 1958 இல் அறப்போரில் ஈடுபட்டபோது, தமிழர் பலரைப் படுகொலை செய்து, தமிழ்ப் பெண்களிடம் பாலியல் பலாத்காரம் நடத்தி, அவர்களுடைய உடைமைகளைத் தீக்கிரையாக்கியது யார்? தென்னிலங்கையிலிருந்து பல்லாயிரம் தமிழர் தமிழகத்துக்கும், ஈழ நிலத்துக்கும் புகலிடம் தேடி ஓடச்செய்தது யார்? யாழ்ப்பாணத்தில் 1974 இல் தமிழாராய்ச்சி மாநாடு நடந்தபோது, வெடிகுண்டு வீசி மோசமான தாக்குதலை முன்நின்று நடத்தியது யார்? மலையகத் தமிழர் மீதும், தெற்கில் வாழ்ந்த அப்பாவித்தமிழர் மீதும் 1977 இல் வெறித் தாக்குதல் நடத்தி, இனக்கலவரத்தை வளர்த்தது யார்? பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவந்து 1970 ஜூலையில் தமிழ் இளைஞர்கள் மீது நரவேட்டை நடத்தியது யார்? 'தமிழரின் அறிவுக்கோயில்' என்று கொண்டாடப்பட்ட யாழ். நகர் நூலகத்தின் 95 ஆயிரம் நூல்களை எரித்துச் சாம்பலாக்கியது யார்? 1983 ஜூலை 25 அன்று வெலிக்கடை சிறையில் 37 தமிழ் இளைஞரும் 27 ஆம் நாள் 18 தமிழரும் குரூரமாகக் கொல்லப்பட்டது யாரால்?
சிங்கள வெறியர்களின் படுபாதகச் செயல்களை ஒரு பட்டியலில் முடித்துவிட முடியாது. புத்த பூமியை இரத்த பூமியாக்கியவர்கள் சிங்களர்கள். அவர்களுடைய வன்கொடுமைக்கு எதிராக வந்து நின்றவர்கள் விடுதலைப் புலிகள். இதுதான் வரலாறு.
எள் முனை உரிமையும் பெறாமலேயே ஏராள மான இழப்புகளைச் சந்தித்துவிட்டது ஈழத் தமிழினம். தமிழீழம் காணும் கனவில் பல்லாயிரம் வீர இளைஞர்கள் களத்தில் பலியாகிவிட்டனர். வான்படை, கடற்படை, தரைப்படையென்று முப்படைகளை உருவாக்கி... ஒரு வலிமை மிக்க, கட்டுப்பாடான இராணுவத்தைக் கட்டமைத்த பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா என்பது கேள்விக்குறியாகிவிட்டது. வீடிழந்து, உறவிழந்து, மன அமைதியை முற்றாக இழந்து, மூன்று லட்சம் தமிழர்கள் வதை முகாம்களில் இரக்கமற்ற இராணுவத்தின் முன் மார்பெலும்பு தெரியும் மழலைகளுடன் கையேந்தி நிற்கின்றனர். போதும் இந்தப் போர்!
சிங்களருக்கு சமமான உரிமைகளுடன் தமிழரை வாழ வைக்க முடியும் என்று சர்வதேச நாடுகள் நம்புகின்றன. நிறைவேறாத முயற்சி அது என்று அந்த நாடுகளின் அதிபர்களுக்கு விரைவில் புரிந்துவிடும். 'புத்த மதத்துக்கு முக்கியத்துவம் தராமல் தமிழரோடு ஒப்பந்தம் போடுகிறாயா?' என்று பண்டாரநாயகாவை சுட்டுக்கொன்ற புத்த சந்நியாசிகளின் பூமியில், தமிழருக்குக் குறைந்தபட்ச உரிமைகள் கொடுக்க ராஜபக்சவே முன்வந்தாலும் ஒன்று கொல்லப்படுவார்... அல்லது அதிகார நாற்காலியிலிருந்து அகற்றப்படுவார். பிரபாகரன் இல்லாத நிலையில், கொழும்பில் இருக்கும் ஆறு லட்சம் தமிழர் வாழ்வில் எந்த நேரத்திலும் அமைதி பறிக்கப்படும். காலம் பின்னாளில் நடத்தவிருக்கும் பாடம், நம் பிரதமருக்கும் சர்வதேசத் தலைவர்களுக்கும் உரிய ஞானம் தரும்.
இலங்கை இறையாண்மைக்கு உட்பட்டு, ஈழத் தமிழருக்கு இந்தியா அரசியல் அதிகாரங்களை இனி வாங்கித் தரும் என்று நாம் நம்புவோமாக! அதற்குமுன்பு வதை முகாம்களில் ஆடு-மாடுகளைப் போல் அடைக்கப்பட்டிருக்கும் மக்களுக்குப் போதிய உணவும் குடிநீரும் மருந்தும் கிடைக்க வழி செய்ய வேண்டும். இருப்பிடங்களை இழந்து நிற்கும் பத்து லட்சம் பேரும் மிக விரைவில் தங்கள் சொந்தக் குடியிருப்புகளுக்குத் திரும்ப வழி காணவேண்டும். நிவாரண உதவிகளை நேரடியாக சர்வதேச நாடுகளின் மனித உரிமை அமைப்புகள் வழங்க அனுமதிக்க வேண்டும். ராஜபக்ச வாக்களித்தபடி, ஆறு மாதங்களில் ஈழத் தமிழரின் இதய ரணங்கள் ஆறும் வகையில் அரசியல் தீர்வை அளிக்க வேண்டும்.
பிரபாகரன் மீது பழியைப் போட்டு நம் சொந்தங்களை சாவுப் பள்ளத்தில் தள்ளியதை வேடிக்கை பார்த்த இந்திய அரசு, இனியாவது செயலில் இறங்க வேண்டும். ஆனால், மன்மோகன் அரசோ ராஜபக்ச சகோதரர்களின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக உலக நாடுகள் நடவடிக்கை எடுப்பதைத் தடுப்பதில் தீவிரமாக இருக்கிறது. தமிழினம் எங்கே போய், யாரிடம் தன் விதியை நொந்து கொள்வது?!
இரண்டாம் உலகப் போரின் இறுதியில் அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன், பிரான்ஸ் ஆகிய நான்கு நாடுகளின் முயற்சியில் ஹிட்லரோடு இணைந்து மனித உரிமைகளைக் குழிதோண்டிப் புதைத்தவர்களுக்கு எதிராக 'நூரம்பர்க் விசாரணை' நடத்தப்பட்டு, தூக்கு தண்டனையும், ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.
போர்க் குற்றங்களுக்காகவும் மனிதகுல உரிமைகளுக்கு மாறான அத்துமீறல்களுக்காகவும் யாரையும் விசாரணைக் கூண்டில் நிறுத்தி, தண்டிப்பதற்காக சர்வதேச நாடுகள் முன்வந்தன. 'சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம்' உருவானது. 'உலகின் நீதிக்கும் அமைதிக்கும் அடித்தளம், மனித குலத்தின் கண்ணியம் காக்கப்படுதலே' என்று தெளிவுபடுத்துகிறது. 'சித்ரவதை, வன்கொடுமை, இழிவாக நடத்தப்படுதல் ஆகியவை மனித உரிமை மீறல்' என்கிறது அந்தப் பிரகடனத்தின் ஐந்தாவது பிரிவு.
'ஒரே நாளில் பல்லாயிரம் தமிழரைப் படுகொலை செய்த ராஜபக்ச அரசைக் கண்டித்து ஐ.நா. சபையின் மனித உரிமை அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பிரிட்டனும் ஐரோப்பிய நாடுகளும் வேண்டின. டென்மார்க் முயன்று 17 நாடுகளின் ஆதரவைத் திரட்டி மனித உரிமை சபையைக் கூட்டச் செய்தது. ஆனால், இலங்கை அரசு நிராயுதபாணிகளைக் கொன்று குவித்ததை நியாயப்படுத்தி, கம்யூனிச வரலாற்றில் களங்கத்தை ஏற்படுத்திய ரஷ்யாவும் சீனாவும் கியூபாவும், இந்தியத் தமிழரின் எதிர்ப்பு வருமே என்று சிறிதும் கவலைப்படாமல் மன்மோகன் அரசும், ராஜபக்சவைக் காப்பாற்றக் களம் அமைத்தன!
வியன்னாவில் ஒரு சீக்கிய மதகுரு படுகொலை செய்யப் பட்டதும், பஞ்சாப் பற்றி எரிந்தது. மன்மோகன் சிங் பதறுகிறார். வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வியன்னாவுடன் பேசுகிறார். ஆனால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழரின் பிணங்கள் விழுந்து மண் முழுவதும் மயானமானது. இந்திய அரசின் இதயம் மட்டும் இரங்கவில்லை. மன்மோகனின் மனம் பதறவில்லை; சோனியாவிடமிருந்து ஒரு சொல் வரவில்லை!
'சகோதரன் ஒருவனை விலங்கு பிணைத்திருப்பது உங்களை வருத்தாவிட்டால், நீங்கள் உண்மையில் இழிந்த அடிமைகளாகத்தான் இருக்க வேண்டும். வல்லமையற்றவர்க்கும் வாயில்லாதவர்க்கும் பரிந்து பேச அஞ்சுவோர் அனைவரும் அடிமைகளே!' என்றார் ஜேம்ஸ் ரஸ்ஸல். இங்குள்ள தமிழர்கள் இனவுணர்வற்ற அடிமைகள். ஐந்நூறு ரூபாய்க்குத் தங்கள் வாக்கை விற்பவர்கள். வாய்வீரம் பேசுவதில் மட்டும் வல்லவர்கள். பதவி தரும் சுகத்துக்காக ஏங்குபவர்கள். சொந்த நலனுக்காக இனநலனை இழப்பவர்கள்.
ஈழத்தில் வாடும் தமிழரும், புலம்பெயர்ந்து வாழும் தமிழரும் தாயகத் தமிழரை இனி நம்ப வேண்டாம். ஆயுதத்தை மறந்து விடுங்கள். அகிலம் முழுவதும் அறப்போரை நடத்துங்கள். 'அகிம்சையே வலிமை மிக்க ஆயுதம்' என்று போற்றிய புரட்சியாளர்கள் மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலாவை நெஞ்சில் நிறுத்துங்கள். பிரபாகரனே வெளிப்பட்டாலும் அகிம்சை வழியில் புரட்சியைத் தொடர்வதே உகந்தது. ஆயுதப் போரில் இனியும் எம் தமிழினம் அழியக்கூடாது.
முல்லை பெரியாறு, காவிரி, பாலாறு, ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் என்று எந்த உரிமை மறுக்கப்பட்டாலும் உறக்கத்திலிருந்து எழாத தமிழரையும், பல்லாயிரம் ஈழத் தமிழர் பலியான நாளில் குடும்ப உறவுகளை மத்திய அமைச்சர்களாக்க புதுடில்லி புறப்பட்ட தமிழினத் தலை வரையும், நம் இந்திய அரசு சரியாகவே இனம் கண்டு வைத்திருக்கிறது. அதனால்தான் அது ராஜபக்சவுக்கு அரியணை தாங்கி ஆலவட்டம் வீசுகிறது. தமிழினத்தின் புறநானூற்று வீரத்தில் புழுதி படிந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன.
'பாண்டியனின் வழி நீயா? இமயக்கோட்டில் பறந்திருந்தது உன் கொடியா? இலங்கை நாட்டை ஆண்டவர்கள் உன்னவரா? கலிங்கர் மண்ணை அதிரடித்தது உன்குலமா? கடல்கள் மூன்றைத் தாண்டியவர் பரம்பரையா? புட் பகத்தில், சாவகத்தில் கொடி போட்டான் பிள்ளையா நீ? மாண்ட வரலாற்றினுக்கும் உன்றனுக்கும் மயிரளவும் தொடர்பில்லை, எதற்கு வார்த்தை?' என்று சரியாகத்தான் சொன்னார் கண்ணதாசன்!
- தமிழருவி மணியன்.


Tuesday, June 30, 2009

இனம் தின்னும் ராஜபக்சே: கவிஞர் வைரமுத்து.

இனம் தின்னும் ராஜபக்சே: கவிஞர் வைரமுத்து
சொந்த நாய்களுக்குச்
சொத்தெழுதி வைக்கும் தேசங்களே!
ஓர் இனமே
நிலமிழந்து நிற்கிறதே
நிலம் மீட்டுத் தாருங்கள்
பூனையொன்று காய்ச்சல் கண்டால்
மெர்சிடீஸ் கார் ஏற்றி
மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே!
ஈழத்து உப்பங்கழியில்
மரணத்தை தொட்டு
மனித குலம் நிற்கிறதே!
மனம் இரங்கி வாருங்கள்!
வற்றிய குளத்தில் செத்துக் கிடக்கும்
வாளை மீனைப்போல்
உமிழ்நீர் வற்றிய வாயில்
ஒட்டிக்கிடக்கும் உள்நோக்கோடு
ரொட்டி ரொட்டியென்று
கைநீட்டிடும் சிறுவர்க்குக்
கைகொடுக்க வாருங்கள்!
தமிழச்சிகளின் மானக்குழிகளில்
துப்பாக்கி ஊன்றித் துளைக்கும்
சிங்கள வெறிக் கூத்துக்களை
நிரந்தரமாய் நிறுத்துங்கள்!
வாய்வழி புகட்டிய தாய்ப்பால்
காதுவழி ரத்தமாய் வடிவது கண்டு
கண்வழி உகுக்கக் கண்ணீரின்றிக்
கண்ணீரை மாற்றுங்கள்!
அடுக்கி வைத்த உடல்களில்
எந்த உடல் தகப்பன் உடல் என்று தேடி
அடையாளம் தெரியாத ஒரு பிணத்துக்கு
அழுது தொலைக்கும் பிள்ளைகளின்
அவலக்குரல் போக்குங்கள்!
எனக்குள்ள கவலையெல்லாம்
இனம் தின்னும்
ராஜபக்சே மீதல்ல..
ஈழப்போர் முடிவதற்குள்
தலைவர்கள் ஆகத்துடிக்கும்
தலையில்லாப் பேர்வழிகள் மீதல்ல
எம்மைக் குறையாண்மை செய்துவைத்த
இறையாண்மைமீதுதான்!
குரங்குகள் கூடிக்
கட்டமுடிந்த பாலத்தை
மனிதர்கள் கூடிக்
கட்ட முடியாதா?
போரின் முடிவென்பது
இனத்தின் முடிவல்ல
எந்த இரவுக்குள்ளும்
பகல் புதைக்கப்படுவதில்லை
எந்த தோல்விக்குள்ளும்
இனம் புதைக்கப்படுவதில்லை
அழிந்தது போலிருக்கும் அருகம்புல்
ஆனால்
கண்ணுக்குத் தெரியாத வேர்கள்
அங்கே
சிந்திய துளிகள்
சிவப்பு விதைகள்
ஒவ்வொரு விதையும் ஈழமாய் முளைக்கும்
பீரங்கி ஓசையில்
தொலைந்து போன தூக்கணாங்குருவிகள்.


Monday, June 29, 2009

ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்...

காலை,
தாமரை பூக்கும் நேரம் அல்ல,
இரவு,
அல்லி மலரும் நேரம் அல்ல.
ஈழத்தில்,
நாள்களை
சிங்களக்குருவிகளின் அலகுகள்
திறக்கின்றன, மூடுகின்றன.
அவற்றின்
இறுக்கமான இரும்பு நகப்பிடிகள்
நேரங்களை
நிரப்புகின்றன தமிழப்பிணங்கள் கொண்டு

கறுப்புக் கனவுகளின்
பாதை நெடுகிலும் காயப்பசியுள்ள
ஈட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

நனவுகளின்
மார்பிலிருந்து இரத்தம்
பவுத்த நெடியோடு பாய்கிறது
குறுக்கும் நெடுக்குமாய்
ஈழத்தில்.

தமிழ்மொழி பதைக்கிறது
தமிழ் இயல், தமிழ் இசை தமிழ்நாடகம்
எல்லாமே-
போராடும் தமிழன் கைகளில்
ஆயுதங்களாயிடத் தவிக்கின்றன.
இங்கோ
தமிழனின் பதைப்பும் தவிப்பும்.

வேவு பார்க்கப்படுகின்றன
விசாரணைக்குக்குள்ளாகின்றன.
அர்த்தங்கள் மாற்றி வைக்கப்பட்டுத்
தடை செய்யப்படுகின்றன.

பூண்டோடு
தமிழினம் வேரறுக்கப்பட்டதாக
அறிவிப்பைத்
தயாரித்து வைத்து வெளியிட
அவசரப்படுகின்றன ஊடகங்கள்.

ஆதிக்க வல்லாண்மைகள்
இரத்த தாகமுள்ள வரலாற்றின்
பக்கங்களில்
உள்நாட்டுப் பிரச்சினை
இதுவென்று
தமிழினப் படுகொலைகளைச்
சலனமற்ற எழுத்துக்களால் முடித்துவிடத்
தீர்மானிக்கின்றன.

கடைசியாகப்
பிறக்கப்போகும் ஈழத் தமிழ் குழந்தை
எதைச் சொல்லி அழும்? எப்படி அழும்?
இறந்துபோன
தமிழினத்தின் இறுதிச் செய்தியாக
எதைப் பெறும்
அந்தக் குழந்தை?

மிஞ்சப்போகும் அந்தக் குழந்தை
தமிழினத்தின் விடுதலையாக இருந்தாலும்
நடந்த மரணங்களை
இழப்புகளின் பட்டியலில் இருந்து
வாழ்க்கைகளாய் விடுவிப்பது எப்படி?
அது,
நம்பிக்கையை உறுதிசெய்தாலும்
புதைந்து போன
நட்சத்திரங்களை மீட்பது எப்படி?


Sunday, June 28, 2009

யுத்த துரோகம்! -ஜெகத் கஸ்பர்

ஆயிரம் வீரர்கள் தீயினில் போயினர்
ஆயினும் போரது நீறும், புலி
ஆடும் கொடி நிலம் ஆறும்.
பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில்
பாசறை ஆயிரம் தோன்றும், கருப்
பைகளும் ஆயுதம் ஏந்தும்.
மத்தளம், பேரிகை, கொட்டு புலிப்படை
மாபெரும் வெற்றிகள் சூடும், அந்த
சிங்கள கூட்டங்கள் ஓடும்.
-இணையத்தில்இன்று காலை நான் கண்ட கவிதை இது. எழுதியவர் புதுவை இரத்தினதுரையாக இருக்க லாம். படித்துச் சிலிர்த்து நின்ற வேளை தொலைபேசி அழைப்பொன்று வந் தது. கடந்த நான்கு நாட்களாய் தொலைபேசிய அந்த முக்கியமான வரை தொடர்பு கொள்ள நூறு முறையேனும் முயன்று மனக் களைப்புற்றிருந்தேன். களநிலை பற்றின பொய்யும் புனைவுமிலா உண்மையை தரவல்ல நிலையில் உள்ளவர் அவர். வானகத்தின் தூதுவன் நேரிடை வந்தது போல வந்தது அந்த அழைப்பு. அவர் சொன்னார்: ""கவலை ஏதும் வேண்டாம். தலைவர் பாதுகாப்பாக உள்ளார். அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக உறுதி செய்யப்பட்டபின் உலகோடு அவர் பேசு வார்''. தமிழீழ எல்லைகளின் காவலன் நல் லூர் முருகனும் எனது லூர்து மாதாவும் துணையிருந்தார்கள். படித்த கவிதை சந்தம் கட்டி என் மனதில் பாடலாய் துள்ள லாயிற்று. "பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில் பாசறை ஆயிரம் தோன்றும், கருப்பை களும் ஆயுதம் ஏந்தும்'.
எட்டு பத்து ஆண்டுகளுக்கு முன் இதே புதுவை ரத்தினதுரை எழுதிய கவிதையின் மறக்க முடியாத சில வரிகள் நினைவு வெளியில் கை வீசி நடந்தன.
""வா பகையே... வா...
வந்தெம் நெஞ்சேறி மிதி.
பூவாகவும் பிஞ்சாகவும் மரம் உலுப்பிக் கொட்டு.
வேரைத் தழித்து வீழ்த்து.
ஆயினும் அடிபணியோம் என்பதை மட்டும்
நினைவில் கொள்!''
புதுவை ரத்தினதுரையின் கவிதைகள்பால் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது 1995-ம் ஆண்டு. அதிபர் சந்திரிகா குமார துங்கே யுத்த வெறி கொண்டு முப்படைகளையும் அவிழ்த்து விட்டு யாழ்ப்பாணத்தை சிறைப்படுத்திய காலம். யாழ்ப்பாணத்தில் சிங்க முத்திரை பொறித்த சிங்களக் கொடியை ஏற்ற அன்றைய ராணுவ அமைச்சர் அனுருத்த ரத்வத்தே வந்தார். அக்கொடியை சுமந்து வந்தது யாழ்ப்பாணத்து மேயராக இருந்த தமிழர். பெயர் மறந்துவிட்டேன். வடதமிழீழத்து இதயமாம் யாழ்ப்பாணத்திற்கு சிங்கக் கொடி சுமந்து வந்த மேயர் மீது புதுவைக்குச் சீற்றம். நீண்ட கவிதையொன்று எழுதியிருந்தார். இரண்டு வரிகள் மட்டும் அடித்த ஆணிபோல் நினைவில் பதிந்து நிற்கின்றன.
""மேயர் அவர்களே
நீவிர் சிங்கக் கொடியை சுமந்து வந்தபோது
மின்னும் ஜரிகை கரை கொண்ட
பட்டு வேஷ்டி கட்டி வந்ததாய் அறிந்தேன்.
கக்கூஸ் வாளிக்கு தங்க முலாம் பூசுவதில்லையே?!
-அறுபதாயிரத்திற்கும் மேலான அப்பாவித் தமிழ் உயிர்களை கொன்றழித்து, இரண்டரை லட்சம் பேரை சொந்த மண்ணில் அகதிகளாக்கி, முப்பதாண்டு கால விடுதலைப் போராட்டத்தை நீசத்தனமாய் நிர்மூலம் செய்த ராஜபக்சே கும்பலுக்கு வன்னிப்பரப்பில் சிங் கக் கொடி தூக்க நாக்கை தொங்கவிட்டுக் காத்திருக்கும் ஆனந்தசங்கரி வகையறாக்கள் ஒரு கணம் நினைவுக்கு வந்தபோது புதுவையின் கவிதையும் உடன் சேர்ந்து வந்தது. ""கக்கூஸ் வாளிகளுக்கு தங்க முலாம் பூசுவதில்லையே...?! ராஜபக்சேக்களுக்கு லாவணி பாடும் ஆனந்த சங்கரிகளே இருக்கிறவரை ஏதேனும் நாற்காலியில் இருந்துவிட் டுப் போங்கள். தங்க முலாம் பூசிய கக்கூஸ் வாளிகளுக்கும் கருணை செய்து ஓய்வூதியம் தர வேலுப்பிள்ளை பிரபாகரன் விரைவில் வருவான். உங்களுக்காக வரவில்லையென்றாலும் முல்லைத்தீவு முற்றுகையின் கடைசி நாள் நடந்த மன்னிக்க முடியா துரோகத்திற்கு நீதி செய்யவேனும் அவன் வருவான்.
கடைசி நாளில் -அதாவது கடந்த சனிக்கிழமை நடந்தது இதுதான். வேலுப்பிள்ளை பிரபாகரனும் எதிர்காலத்தில் போராட்டத்தையும் இயக்கத்தையும் மீள் கட்டமைப்பு செய்வதற்கு முக்கியமானவர்களான சில தளபதியர்களும் பாதுகாப்பாக அகன்றபின் களத்தின் இறுக்கம் தணிகிறது. கை ஒடிந்து, கால் முறிந்து, உடலின் சில பகுதிகள் சிதைந்து ரத்தம் வழிந்தே பாதி செத்துப் போன சுமார் 12,000 அப்பாவி மக்களையும், அவ்வாறே காயமுற்ற சுமார் 3,000 போராளிகளையும் எப்படியேனும் அப்புறப்படுத்திக் காப்பாற்றும் முடிவினை விடுதலைப்புலிகள் எடுக்கி றார்கள். கடற் புலித் தளபதி சூசை மதுரையில் ஒருவரோடு தொடர்பு கொண்டு காயமுற்ற மக்களையேனும் பாதுகாப்பாய் வெளியேற்ற 48 மணி நேர சண்டை நிறுத்தம் வேண்டுகிறார்.
மதுரை தமிழரோ உணர்வாளர் சுப.வீ. என்ற சுப.வீரபாண்டியன் அவர்களை மன்றாட சுப.வீ. அவர் கள் கனிமொழி அவர்களின் கருணையை கேட்கிறார். கனிமொழி அவர்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியமான ஒருவரோடு பேச "அதிகாரப்பூர்வமற்ற', ஆனால் யதார்த்த மான முடிவொன்று தரப்பட்டது. ""விடுதலைப் புலிகளின் அனைத்துலக பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாபன் கொழும்பிலுள்ள இந்திய தூதுவருக்கு ஆயுதங்களை ஒப்படைக்க தயாராக உள்ளோம் என்ற முடிவினை எழுத்துப் பூர்வமாய் தொலைநகல் (எஆல) வழி உடனே தெரிவிக்க வேண்டும். மற்றவையெல்லாம் இந்தியா பார்த்துக் கொள்ளும்''. இரவு 10 மணி ஆயிற்று. இந்தக் கட்டத்தில் நானும் இணைந்தேன். லண்டனிலுள்ள எனது நண்பர்கள் மூலம் செல்வராஜா பத்மநாபன் அவர்களுக்கு தகவல் சொல்லப்பட அவரும் மின்னல் வேகத்தில் இயங்கினார். ""இந்தியாவிடமே நாங்கள் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருக்கிறோம். அது சாத்தியமில்லையென்றால் ஐ.நா. ஏற்பாட்டில் ஒப்படைக்கிறோம்'' என்ற முடிவை விடுதலைப் புலிகள் இரவு 11.50-க்குத் தெரிவித்தார்கள். கனிமொழி தயக்கத்துடன் காங்கிரஸ் பெரியவரை தொடர்பு கொள்ள அவரும் விழித்தே இருந்தார். ""கால அவகாசமில்லை. இந்தியாவிடம் சரணடைவதற்கான சாத்தியப்பாடுகள் இப்போது இல்லை. இலங்கை ராணுவத்திடமே சரணடைவதுதான் இப்போதைய நெருக்கடி நிலையில் ஆகக் கூடியது'' என்கிறார் அப்பெரியவர்.
மக்களை காக்க வேண்டி இலங்கை ராணு வத்திடமே ஆயுதங்களை ஒப்படைக்கும் முடிவினை சனி நள்ளிரவு புலிகள் எடுத்தார்கள். ஞாயிறு காலை கொழும்பு இந்திய தூத ரகத்தின் உதவியுடன் இலங்கைத் தமிழர் பாராளுமன்ற உறுப்பினர் கஜன் பொன்னம்பலம் ராஜபக்சேவோடு பேச்சுவார்த்தை கள் நடத்த முடிவொன்று ஏற்படுகிறது. "முல் லைத்தீவு களத்தில் நிற்கும் புலிகளின் தளபதிகள் வெள் ளைக்கொடி பிடித் துக் கொண்டு இலங் கை தளபதிகளிடம் வரட்டும். ஆயுதங் களை ஒப்படைப்பது, காயமுற்றோரை அப்புறப்படுத்துவது தொடர்பான நடைமுறை ஒழுங்குகளை அவர்களே கலந்து பேசி முடிவு செய்யட்டும்' என்பதாக அந்த ஏற்பாடு.
இம்முடிவினை ராஜபக்சே அலுவலகம் ராணுவத் தலைமைக்கும், முல்லைத் தீவு கட்டளைத் தளபதிகளுக்கும் அறிவிக்கிறது. இந்த ஏற்பாடுகள் முடியவே ஞாயிறு இரவாகி விடுகிறது.
ராஜபக்சேவுடன் நடந்த விவாதங்களையும் முடிவுகளையும் கஜன் என்ற கஜேந்திரன் பொன்னம்பலம்... செல்வராஜா பத்மநாபனுக்குத் தெரிவிக்க முல்லைத்தீவு களத்தில் நின்ற விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவுப் பொறுப்பாளர் நடேசனுடன் இவற்றை திங்கள் அதிகாலை 2.30 மணிக்கு விவாதிக்கிறார் பத்மநாபன். யுத்தம் 500 மீட்டர் அருகில் வந்த போதும் கூட உலகோடு உரையாடும் செயற் கோள் வசதிகளை விடுதலைப்புலிகள் கொண்டிருந்தார்கள் என்பது ஒரு ராணுவ அரசியல் இயக்கமாக எத்துணை ஆழமாக வளர்ந்திருந்தார்கள் என்பதற்குச் சான்றாகத் தெரிந்தது. விடிந்ததும் நடேசன், சிறப்புத் தளபதி ரமேஷ் -இவர் முன்பு கருணாவின் துணை தளபதியாக இருந்தவர், புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் மூவரும் வெள்ளைக் கொடி ஏந்தி சிங்களத் தளபதியர்களை சந்திக்கச் செல்வ தாய் ஏற்பாடு.
வெடிபொருள் புகை கவிந்த முல்லைத் தீவு பரப்பு விடிந்தது. வெள்ளைக் கொடி ஏந்தி மூவரும் நடந்தார்கள். சிங்களத் தளபதியர்களின் கூடாரம் அருகே வந்தார்கள். ஏன், என்னவென்ற பேச்சின்றி சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பின்னர்தான் தெரிய வந்தது அவர்களைச் சுட்டுக் கொல்லும் உத்தரவை ராஜபக்சேவின் சகோதரனும் ராணுவ அமைச்சருமான கோத்தபய்யா ராஜபக்சே பிறப்பித்திருந்த சதி.
வெள்ளைக் கொடியேந்தி சரணடையவோ, பேச்சுவார்த்தை நடத்தவோ வருகிறவர்களுக்குத் தீங்கிழைப்பது யுத்தக் குற்றம். அனைத்துலக சட்டதிட்டங்கள் இதனை கடுமையாக வலியுறுத்துகின்றன. ஆனால் சிங்கள இனவெறி பிடித்தாடும் கோத்தபய்யாவை பொறுத்தவரை தமிழருக்காகப் பேச எவருமே உயிரோடு இருக்கக்கூடாது. நடேசனும், புலித்தேவனும் சரணடைந்து கைது செய்யப்பட்டாலும் அவர்கள் யுத்தக் கைதிகளாகவே நடத்தப்பட வேண்டும். நாளை அனைத்துலக ஏற்பாட்டில் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கும் போது புலிகள் தரப்பிலும் பிரதிநிதிகள் இருக்க வேண்டுமென உலக நாடுகள் நிச்சயம் வலியுறுத்தும். அத்தகு சூழலில் தகுதியோடு தமிழரை பிரதிநிதித்துவப்படுத்த எவருமே இருக்கக்கூடா தென்பதுதான் கோத்தபய்யாவின் கணக்கு. முக்கிய செய்தி என்னவென்றால் இந்தியா சொல் வதையோ, அண்ணன் ராஜபக்சே சொல்வதையோ கேட்பதற்கு கோத்தபய்யா தயாராக இல்லை என்பதுதான்.
கொடுமை அத்தோடு முடியவில்லை காயமுற்று பாதி உயிரோடு முனகிக் கிடந்த பத்தாயிரத்திற்கும் மேலான அப்பாவி மக்களை புல்டோசர்கள், செயின் புளக்-கள் ஏற்றிக் கொன்றுவிட்டு ஆதாரங் கள் ஏதுமின்றி அதிநவீன ரசாயனக் கலவைகள் ஊற்றி எரித்திருக்கிறார் கள். அவ்வாறே காய முற்றிருந்த சுமார் 3,000 போராளிகளையும் கரு ணை இரக்கமின்றி சுட்டுக் கொன்று வெறி தீர்த்திருக்கிறார்கள். வேறெதற் கும் இல்லையெனினும் கோத்தபய்யாவிற்கு நீதி சொல்லவேனும் வேலுப்பிள்ளை பிரபாகரன் வருவான், நிச்சயமாய் வருவான்.
மரணத்தின் நிழலில் வளர்ந்த அதீதப் பிறவி பிரபாகரன். மாத்தையா அவரது வாகனத்திற்கு அடியிலேயே வெடிகுண்டு பொருத்தினார். ஆனால் வெடிக்கவில்லை. ஏன் வெடிக்கவில்லை என்பதற்கு மனித அறிவு சார்ந்த விளக்கம் எதுவுமில்லை. சாவகச்சேரி நகர் வளைவு திறக்கும் நிகழ்வின் போது அவரோடு மூத்த தளபதிகள் யாவரதும் கதை முடிக்க மாத்தையா ஏற்பாடு செய்திருந் தார்.
விழாவுக்குப் புறப்படும் போது மோசமான வயிற்று நோவு வர விழாவிற்கு அவர் வரவில்லை. வந்திருந்தால் அன்றே அவர் வரலாறு முடிந்திருக்கும். திருநெல்வேலி தாக்குதலின் போது அவரது துப்பாக்கியில் ரவை தீர்கிறது. குனிந்து ரவை நிரப்புகிறார். புறத்தே மின்னல் தெரிகிறது. சக தோழர்களின் பறக்கிற ரவைகள் என நினைக்கிறார். காலையில் பார்த்தால் தான் குனிந்தபோதுதான் நின்ற இடத்திலேயே எதிரியின் ரவைகள் பாய்ந்து வந்திருக்கின்றன. அக்கணம் குனிந்திராவிட்டால் அன்றே அவர் முடிந்திருப்பார். ""கடவுள் காத்து வருகிறார் எனக் கருதலாமா?'' என 2002-ல் அவரிடம் கேட்டேன். ""இன்னும் நான் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கிறதென இயற்கை நினைக்கிறது போலும்'' என்றார். தமிழர்களே, நண்பர்களே, முல்லைத்தீவில் கதை முடிய வில்லை. புதிய கதை தொடங்குகிறது. உலகத் தமிழினம் இனி நடக்கப் போவது புதிய தடங்களில்.


Thursday, June 25, 2009

இந்தியாவே...! எத்தனை கொடுமைகள் செய்துவிட்டாய் எங்கள் தமிழினத்திற்கு... கவிஞர் தாமரை.

இந்தியாவே...! எத்தனை கொடுமைகள்

செய்துவிட்டாய்

எங்கள் தமிழினத்திற்கு...

எத்தனை

வழிகளில்கெஞ்சியும் கூத்தாடியும்

காலில் விழுந்தும் கதறியும்

கொளுத்திக் கொண்டு செத்தும்

தீர்ந்தாயிற்று...

எதுவுமே காதில் விழாத உங்களுக்கு

இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்...

பட்டினியால் சுருண்டு மடிந்த

பிஞ்சுக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து

அழுது வீங்கிய கண்களோடும்

அரற்றிய துக்கத்தோடும்

களைந்த கூந்தலோடும்

வயிரெரிந்து இதோ விடுகிறேன்..

கண்ணகி மண்ணில் இருந்து

ஒரு கருஞ்சாபம்!

குறள் நெறியில் வளர்ந்து

அறநெறியில் வாழ்ந்தவள்

அறம் பாடுகிறேன்!

தாயே என்றழைத்த வாயால்

பேயே என்றழைக்க வைத்துவிட்டாய்

இனி நீ வேறு, நான் வேறு!

ஏ இந்தியாவே!

ஆயுதம் கொடுத்து வேவு விமானம் அனுப்பி

குண்டுகளைக் குறிபார்த்துத்

தலையில் போடவைத்த உன்தலை

சுக்குநூறாய் சிதறட்டும்!

ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த

எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய

இனி ஒரு நூற்றாண்டுக்கு

உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!

மழைமேகங்கள் மாற்றுப் பாதைகண்டு

மளமளவென்று கலையட்டும்!

ஒரு பிடி சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்

இனி உன் காடு கழனியெல்லாம் கருகிப்போகட்டும்!

தானியங்கள் எல்லாம் தவிட்டுக்குப்பைகளாய்

அறுவடையாகட்டும்!

மந்தைகளைப் போல் எம்மக்களை துரத்தினீர்கள்

உங்கள் மலைகள் எல்லாம்

எரிமலைக் குழம்புகளைக்

கக்கி சாம்பல் மேடாகட்டும்!

இரக்கமின்றி ரசாயனக் குண்டுவீசிய அரக்கர்களே...

உங்கள் ரத்தம் எல்லாம் சுண்டட்டும்!

உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெலலாம் கருகட்டும்!

எதிரிகள் சூழ்ந்து

உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!

தெருக்கள் எல்லாம் குண்டுவெடித்து

சிதறிய உடல்களோடு

சுடுகாடு மேடாகட்டும்!

போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று

கூசாமல் பொய் சொன்ன வாய்களில்

புற்றுவைக்கட்டும்!

வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும்!

எங்கள் எலும்புக் கூடுகள் மீது

ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே...

உங்கள் சிம்மாசனம் வெடித்துத்

தூள்தூளாகட்டும்!

உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்......

பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!

நிர்வாணமாக எங்களை அலையவீட்டீர்களே...

உங்கள் தாய் தந்தையர் பைத்தியம் பிடித்து

ஆடையைக் கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!

எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி

சித்திரவதையில் சாகடித்தீர்களே...

உங்கள் தலையில் பெருமின்னல் பேரிடி இறங்கட்டும்!

எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த

சிங்களவன் மாளிகையில்விருந்து கும்மாளமிட்டவர்களே...

உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!

உங்கள் பெண்களெல்லாம்

படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!

நரமாமிசம் புசித்தவர்களே...

உங்கள் நாடி நரம்பெல்லாம்

நசுங்கி வெளிவரட்டும்!

இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு

புல் பூண்டு முளைக்காமல் போகட்டும்...

ஆழிப்பேரலை

பொங்கியெழுந்து

அத்தனையும் கடல் கொண்டுபோகட்டும்!

நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!

நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!

நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்!

.........

பின்குறிப்பு:

உங்கள் குழந்தைகளை சபிக்கமாட்டேன்!

குழந்தைகள் எங்கிருந்தாலும்குழந்தைகளே...

அவர்கள் நீடுழி வாழட்டும்!

எம் குழந்தைகள் அழுதாலும்

உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!

நன்றி: http://tamizhpadai.blogspot.com/