Friday, September 4, 2009

ஈழம் எழும் விழுப்புரம் கா. தமிழ்வேங்கை.

உங்கள் சட்டத்தினால்
எங்கள் கைகளுக்கு விலங்கிடலாம்:
எந்தச் சட்டத்தினால்
எங்கள் உணர்வுகளுக்கு
விலங்கிடப் போகிறீர்கள்?
அஞ்ச மாட்டோம்
அச்சுறுத்தாத நாங்கள்
எந்த அச்சுறுத்தலுக்கும்:
தடை விதிப்பது
உங்கள் கடமையானால்
உடைப்பது எங்கள் உரிமையாகும்...
என்ன செய்வது!
காவல் துறையோ,
உங்கள் கையில் அடக்கம்
நீங்களோ
"கை"க்குள் முடக்கம்
தமிழினத்தின்
வேராக இருப்பீர்கள்
என நம்பினோம்
நடைமுறையில்
நீங்கள் "வேறாக" இருக்கிறீர்கள்
சட்டத்தைச் சொல்லி
மிரட்டும் நீங்கள்
நீதிமன்றத் தீர்ப்பினை
மதிப்பதில்லையே!
கொள்கையின் குறுக்கே
எத்தனை தடுப்புச் சுவர்களானாலும்
தகர்ப்பது ஒன்றே
எங்கள் தலையாய பணி
அய்யா முதல்வரே!
அஞ்சமாட்டோம்...
தடியடிக்கும்
சிறைக் கொட்டடிக்கும்
புலிகளை
புலிக்கொடியை
பிரபாகரனை
எந்நாளும் ஆதரிப்போம்
எழும் ஈழம்...


பன்றிக் காய்ச்சல் – விவரங்கள், அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு முறைகள்.

 

    உலக நாடுகள் எல்லாமே ஒன்றுசேர்ந்து பன்றிக் காய்ச்சலுக்கு எதிராய்ப் போராடிக்கொண்டு இருக்கின்றன. April 2009 இல் முதன் முதலில் கண்டறியப்பட்ட இந்த நோய் உலக அளவில் பல உயிர்களைப் பலிவாங்கியது போதாதென்று இன்னமும் இதன் அட்டகாசம் தொடர்கிறது. அரசாங்கத்தின் முயற்சிகள் ஒருபுறம் இருக்க, அதில் குறைகளைச் சொல்வதே சிலரின் வாடிக்கை. நாமும் இப்படி இருக்க வேண்டியதில்லையே.. சரியான விவரங்களைத் தெரிந்துகொண்டு பீதியடையாமல் இந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே.

    பன்றிக் காய்ச்சலுக்குக் காரணமாய் இருக்கும் H1N1A Virus:

    swine-flu-transferமனிதனுக்கு சளி - ஜுரம் வருவதுபோல் பறவைகளுக்கும், பன்றிகளுக்கும் வருவதுண்டு. அவைகள் முறையாக Human Infuenza, Avian Influenza, & Swine Influenza  என்று சொல்லப்படுகிறது. ( Influenza  என்றால் சளி – ஜுரம் – காய்ச்சல், இதனை வரச்செய்யும் கிருமியை Influenza Virus  என்று குறிப்பிடப்படுகிறது). சாதாரண நிலையில் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லை. ஆனால், பன்றியின் உடலுக்குள் Human Infuenza Virus  & Avian Infuenza Virus  ஒரே நேரத்தில் இருந்தால், இவ்விரண்டு கிருமிகளுக்கிடையே மாற்றங்கள் ஏற்படும். H1N1A Virus என்பது இதன் விளைவாக உருவாக்கப்படும் புதியவகைக் கிருமி. இந்த H1N1A Virus  பன்றியிலிருந்து மனிதனுக்குள் சேர்வதால் வரும் நோய்தான் பன்றிக்காய்ச்சல். இந்தப் புதிய வகைக் கிருமி முதல்முறை சேர்வதால், இதற்கான நோய்த் தடுப்புச் சக்தி நமது உடலில் இருப்பதில்லை. இயற்கையாகவே நல்ல நோய் தடுப்புத்திறன் உள்ளவர்கள் பாக்கியசாலிகள்.

    பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் (In Increased Order of Intensity)

    SwinFlu3_Symptoms

  1. 5 நாட்களுக்குமேல் சளி , காய்ச்சல், மூக்கொழுகல்

  2. வழக்கத்திற்கும் அதிகமான வாந்தி – பேதி ( கர்ப்பவதிகள் கவனத்திற்கு)

  3. தொண்டை வலி, உடல் வலி

  4. இதயத்துடிப்பு வேகமாய் இருப்பது

  5. தோல் நீலமாகவோ சாம்பல் நிறத்திலோ காணப்பட்டால்

  6. அதிகப்படியான சோர்வு, எப்பொழுதும் படுத்துக்கொண்டே இருப்பது, கைக்குழந்தை என்றால் அம்மா மடியை விட்டு வராமல் இருப்பது

  7. மூச்சுத்திணறல் , நியூமோனியா என்றால் உயிருக்கே ஆபத்து

    பன்றிக் காய்ச்சலுக்கான பாதுகாப்பு முறைகள்:

  1. அலுவலகம், பள்ளிக்கூடம், நண்பர்களுடன் விளையாட்டு என்று வெளியே போய்வந்ததும் கை-கால் கழுவுதோடு இல்லாமல், இன்னொரு முறை குளிப்பது உசிதம். குழந்தைகள் , வயதானவர்கள் என்றால் நீரில் டெட்டால் சேர்த்து 2 – 3 முறை கை-கால் கழுவினால் போதுமானது.

  2. முடியுமென்றால் அடுத்த சில வாரங்களுக்கு ஜனக்கூட்டம் அதிகம் புழங்கும் இடங்களுக்கு ( சினிமா , கடற்கரை ,  Malls , Club, சுற்றுலா) செல்வதை தவிர்க்கவும்.

  3. வேலை நிமித்தம் என்றாலோ அல்லது தனிப்பட்ட முறையில் தவிர்க்க முடியாத காரணங்கள் என்றால் மட்டுமே பயணம் செய்யுங்கள். உள்நாட்டுப் பயணம் – வெளிநாட்டுப் பயணம் இரண்டுமே இப்பொழுது நிலவும் காலகட்டத்தில் தவிர்க்கவேண்டியவையே.

  4. பயணத்தில் போவதற்கு முன்னே அருகில் உள்ள மருத்துவரை அணுகி தற்காப்புக்கான மருந்துகளையும் முறைகளையும் தெரிந்துகொள்ளுங்கள். ( நீங்கள் போகும் ஊரை / நாட்டைப் பொறுத்து இது மாறுபட வாய்ப்பு உள்ளது). மருத்துவரின் ஆலோசனைப்படி நடக்கவும்

  5. வெளிநாட்டிலிருந்து வந்த குடும்பத்தாரையோ நண்பர்களையோ உடனே சென்று பார்ப்பதைத் தவிர்க்கவும். அவர்களும் படித்தவர்கள் தான், நிலமையைப் புரிந்து கொள்வார்கள்

  6. பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க N-95  என்று குறிப்பிட்டுள்ள பிரத்தியேக முகமூடியைப் பயன்படுத்தவேண்டும் என்று WHO ( World Health Organisation – உலகச் சுகாதாரக் கழகம்) அறிவித்துள்ளது. சாதாரணமாய் இதன் விலை 50 – 80 இந்திய ரூபாய்கள் மட்டுமே. ஆனால் சில சமூகவிரோதிகள் இதனைக் கள்ளச் சந்தையில் 200 – 250 ரூபாய்கள் என்று விற்கிறார்கள்.

  7. வீட்டில் யாராவது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டால், அவரது நோய் அறிகுறிகளைக் கூர்ந்து கவனியுங்கள். சாதாரண காய்ச்சல் தான் என்று மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்து சாப்பிடாதீர்கள்.

  8. எப்பொழுதும் கைக்குட்டை வைத்திருங்கள். இருமல் , தும்மல் வரும்போது வாய் – மூக்கை மூடிக்கொள்ளுங்கள். சற்று நிதானித்த பிறகு வென்னீரில் வாய், முகம், கையைக் கழுவுங்கள்.

  9. விரல்/கால் நகங்களைச் சீராக வெட்டிக்கொள்ளுங்கள். பிள்ளைகளுக்கும் செய்யுங்கள்.

  10. சத்தான உணவைச் சாப்பிடுங்கள். நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை இயற்கை முறையில் அதிகரிக்க இதுவே சிறந்தது.

    பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து உருவாக்க ஆராய்ச்சி முயற்சிகள்:

    சில நூற்றாண்டுகளுக்கு முன்னே போலியோ , தொண்டையடைப்பான், அம்மை (Small pox)  போன்ற நோயினால் பாதிக்கப்பட்டால் அதனை "கர்ம வினை" என்று சொல்லியிருந்தார்கள். ஆனால், இப்பொழுதோ இதற்கான தடுப்பு மருந்துகளைப் பிள்ளைகளுக்கு முறையே கொடுத்தால் இம்மாதிரியான கொடுமையிலிருந்து காப்பாற்றலாம் என்று நாம் தெரிந்து கொண்டுள்ளோம்.

    இதே போல், பன்றிக் காய்ச்சல் வரச்செய்யும் H1N1A கிருமி மிக சமீபத்தில்தான் கண்டறியப்பட்டுள்ளது. இதன் ஆட்கொல்லி வீரியம் எல்லாரையும் பதறச்செய்கிறது. உலக நாடுகள் அனைத்தும் இதற்கான தடுப்பு மருந்தை உருவாக்குவதில் மிகத் தீவிரமாக செயல்படுகின்றன.. ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த Novartis, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த CSL மற்றும் இந்தியாவில் ஹைதிராபாதைச் சேர்ந்த Bharat Biotech, தில்லியைச் சேர்ந்த Panacea மற்றும் பூனேவில் உள்ள  Serum Institute மிக தீவிரமாக உள்ளார்கள். இவர்களின் முயற்சி நல்ல முறையில் முன்னேற்றங்களை அடைந்து வருவதாகத்தெரிகிறது. உயிர்களைப் பலி வாங்கும் இந்த நோயிடமிருந்து நமக்கெல்லாம் விரைவில் விடுதலை கிடைக்கும் என்று நம்புவோம்

    --தீபா கோவிந்த்


Thursday, September 3, 2009

தம்பி வருவார் தமிழினம் மீள... – அருணாசுந்தரராசன்.

தாய்மாரை

தவிக்க விட்டு

தங்கைகளின்

கண்ணீர் கேட்டு

இருப்பாரா தலைவர்

இல்லை இல்லை

திரும்பி வருவார்...

தாயக மீட்சி

தலைமேல் காத்து

தியாகம் செய்திட

தம்பிகள் உண்டு

இருப்பாரா தலைவர்

இல்லை இல்லை

திரும்பி வருவார்...

தம்பியின் இருப்பு

தமிழரின் விருப்பு

தமிழீழ நெருப்பு

தாங்கிடும் பொறுப்பு

இருப்பாரா தலைவர்

இல்லை இல்லை

திரும்பி வருவார்...

எங்கள் வானும்

எங்கள் நிலமும்

ஏதிலியர் மயமானது

எங்கும் விரிந்த

எங்கள் தமிழர்

ஏங்கும் நிலையானது

இருப்பாரா தலைவர்

இல்லை இல்லை

திரும்பி வருவார்..

சிங்கள செருக்கு

சிதறிப் போகும்

செந்தமிழ் ஈழம்

சீக்கிரம் விடியும்

தம்பி வருவார்

தமிழினம் மீள

தலைமையும் ஏற்பார்

தமிழீழம் விடிய...


தமிழ்த் தேசியத்தை விழுங்க முயற்சிக்கும் சிங்கள தேசியம்.

[ ஆய்வு:தொல்காப்பியன் ]

image

இராணுவ ரீதியாகத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அடக்கிய சிங்கள அரசு, இப்போது வரலாற்று ரீதியாக அவர்களை அடிமைப்படுத்தி, தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேரே - வடக்கும் கிழக்கும் தமிழரின் மரபுவழித் தாயகம், தமிழர்கள் ஒரு தேசிய இனம், தமிழ் மக்களுக்கு தன்னாட்சி உரிமை உள்ளது ஆகிய விடயங்கள் தான்.

தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டைச் சிதைத்து, அவர்களின் தனித்துவமான தேசிய

அடையாளங்களை அழிப்பதன் மூலம் தன்னாட்சி உரிமைக்கான எழுச்சியையும் கோரிக்கையையும் பலவீனப்படுத்துவது தான் சிங்களத்தின் நாசகாரத் திட்டம். தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் சிதைத்துள்ள நிலையில் - எதிர்காலத்தில் புலிகளின் எச்சங்களே நாட்டில் இருக்காத வகையில் - சிங்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அடுத்த கட்டமாக ‘ஈழம்’ என்ற வார்த்தையையே இல்லாமல் செய்வதற்கு சிங்கள அரசாங்கம் குறிவைத்தி;ருக்கிறது. ஈழம், தமிழ், முஸ்லிம் போன்ற வார்த்தைகளை கொண்ட கட்சிகளின் பெயர்களைத் தடைசெய்ய அரசாங்கம் முயற்சிப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

இது எதிர்காலத்தில் ‘ஈழம்’ என்ற பெயரிலோ, அல்லது தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் தனித்துவமான கட்சிகள் - அமைப்புகள் இயங்குவதை, தோன்றுவதை முழுமையாகத் தடைசெய்ய எடுக்கப்படும் நடவடிக்கையாகும்.

தேர்தல் திணைக்களத்தின் ஊடாக அரசியல் கட்சிகளின் பெயர்களை மாற்றியமைக்கக் கொடுக்கப் படுகின்ற நிர்ப்பந்தமானது - தமிழ்த் தேசியத்தை அழிப்பதற்கு சிங்களத்தின் மீது அரசாங்கம் கொண்டிருக்கின்ற கரிசனையையே பிரதிபலிக்கின்றது. இதைச் செய்து விட்டால் நாட்டில் ஒருமைப்பாடு வந்து விடும், பிரிவினை ஏற்படாது என்று கருதுகிறது இலங்கை அரசு.

வடக்கே பருத்தித்துறை தொடக்கம் தெற்கே தெய்வேந்திர முனை வரைக்கும் ஒரே கொடி -சிங்கக்கொடி தான் பறக்கிறது

இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் தற்போது தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் கட்சிகள் எதுவுமே இப்போதைய பெயர்களில் இயங்க முடியாது. இனம் ஒன்றைப் பிரதிநிதித்துவம் செய்யும் அல்லது பிரதேசம் ஒன்றின் பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகள் செயற்படக் கூடாதென்று அரசாங்கம் சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதன் மூலம் எந்தவகையிலும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தி விடமுடியாது.

கட்டாயமாக – நிர்ப்பந்தத்தின் பேரில் செய்யப்படும் இத்தகைய எந்த நடவடிக்கையுமே சிறுபான்மை மக்களிடத்தில் இன்னும் அதிகமான வெறுப்பையும் பிரிந்து போகும் எண்ணத்தையுமே ஏற்படுத்தும். சிங்களம் மட்டும் ஆட்சிமொழி என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது எத்தகைய நிலையை ஏற்படுத்தியது என்பதை இலங்கை அரசு இன்னமும் புரிந்து கொள்ளவில்லைப் போலும். ஆனால், சிங்கள அரசின் நோக்கம் பிரிவினையைத் தடுப்பதோ ஒருமைப்பாட்டைப் பேணுவதோ அல்ல.

அதன் ஒரே நோக்கம் சிங்களத் தேசியத்துக்குள் அனைத்து இனங்களையும், அனைத்து மொழி பேசும் மக்களையும் உள்வாங்கிக் கொள்வது தான். பயங்கரவாதம் என்ற போர்வையில் தமிழர்களின் காப்பரணான விடுதலைப் புலிகளை வெற்றிகொண்ட பின்னர் நடத்திய விழாவில் பேசிய மகிந்த ராஜபக்ஸ - இனிமேல் நாட்டில் சிறுபான்மை இனங்கள் என்று எதுவுமில்லை என்று கூறியிருந்ததை மறந்து விடக்கூடாது.

அதாவது அனைத்து இனங்களையும் சிங்களத்துக்குள் உள்வாங்கி;க் கொள்வது தான் அவரது திட்டம். இது சாத்தியமானால் - தமிழ்த் தேசியமே இல்லாமல் போய், அனைவரும் சிங்களத் தேசியத்துக்குள் சிக்கிக் கொள்ள நேரிடும். இப்படியான நிலையில் இருந்து தனித்துவமான வகையில் தமிழ்த் தேசிய இனத்தால் போராட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்படும்.

இலங்கைத் தேசியம் அல்லது சிங்களத் தேசியத்துக்குள் அனைத்து மக்களையும் உள்வாங்கிக் கொண்டு தமி;ழ்த் தேசியத்தையும் முஸ்லிம் தேசியத்தையும் இல்லாது அழித்து விடுவதே அவர்களின் நோக்கம்.

இது வெறுமனே  மகிந்தவின் கனவு மட்டுமல்ல. ஐ.தே.க.வின் எண்ணமும் கூட. போர் முடிந்த சில நாட்களின் பின்னர் ஐ.தே.க.வின் தரப்பில் இருந்து இதுபோன்றதொரு கருத்து முன்வைக்கப் பட்டிருந்ததை மறந்து விட முடியாது. ஈழம் என்பது அரசியல் ரீதியாகத் தோற்கடிக்கப் படவில்லை. இன்னமும் ஈழம் என்ற பெயரில் அரசியல் கட்சிகள் இயங்குகின்றன. அனைத்;துத் தமிழ்க் கட்சிகளினது பெயர்களிலும் ஈழம் என்பது இருக்கிறது. எனவே, ஈழம் என்பதை அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்க வேண்டும் என்று கூறியிருந்தது ஐ.தே.க.

இது, இலங்கையின் இரு பெரும் சிங்களக் கட்சிகளினதும் பேரினவாதச் சிந்தனைகள் ஒன்றுபட்டிருப்பதை வெளிப்படுத்தும் விடயமாகும். தமிழ்த் தேசியத்தைச் சிதைத்து சிங்களத் தேசியத்துக்குள் தமிழ் மக்களின் வாழ்வை அடிமைப்படுத்துவதே சிங்களத்தின் திட்டம்.

புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா பிரிந்து சென்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை உருவாக்கினார். ஆனால், பின்னர் கருணாவைத் தனித்து இயங்க சிங்களத் தேசியம் விடவில்லை. வளைத்துப் போட்டு சிறி லங்கா சுதந்திரக் கட்சிக்குள் உள்வாங்கிக் கொண்டது. பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பெயரை மாற்றும்படி மகிந்தவும் அவரது சகோதரர்களும் கருணாவும் பெரும் நெருக்கடிகளைக் கொடுத்தனர்.

தந்தை செல்வாவும், பிரபாகரனும் தமிழ்த் தேசியத்துக்காகப் போராடி தோற்றுப் போனவர்களாம்: வன்னி மாவட்ட நா.உ.

ஆனால், அது சாத்தியமற்றதாகிப் போக, அந்தக் கட்சியையே இல்லாதொழிக்கும் வகையில் ஒவ்வொருவராக சிறி லங்கா சுதந்திரக் கட்சிக்குள் கொண்டு வரும் இரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன. இந்த நடவடிக்கைகளின் இறுதிக் கட்டத்தில் பிள்ளையானும் சிறி லங்கா சுதந்திரக் கட்சிக்குள் உள்வாங்கப்படுவார். இது தான் சிங்களத் தேசியத்தின் சதி.

கிழக்கில் மோசடிகளின் மூலமும், கிழக்கைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொண்ட கட்சிகளின் முதுகில் சவாரி செய்தும் சிறி லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியைப் பிடித்தது. வெற்றிலையின் கீழ் பிராந்தியக் கட்சிகளைப் போட்டியிட வைத்து கிழக்கில் வெற்றி பெற்றது போன்று - வடக்கிலும் அழுத்தங்களைக் கொடுத்து தமிழ்க் கட்சிகளை அதேபோன்று போட்டியிட வைத்திருக்கிறார் மகிந்த ராஜபக்ஸ.

அரசாங்கத்தின் நிர்ப்பந்தங்களால், வடக்கில் ஈ.பி.டி.பி., சிறி ரெலோ, ஈரோஸ் போன்ற கட்சிகள் வெற்றிலைச் சின்னத்துக்குள் உள்வாங்கப் பட்டிருக்கின்றன. இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றிலையை வெற்றி பெறவைத்து தமிழ்த் தேசியம் சிதைக்கப்பட்டு விட்டது - சிங்களத் தேசியமே வடக்கிலும் கிழக்கிலும் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை சிங்கள மக்களுக்கும், வெளியுலகுக்கும் பிரகடனம் செய்வது தான் மகிந்தவின் திட்டம்.

வடக்கே பருத்தித்துறை தொடக்கம் தெற்கே தெய்வேந்திர முனை வரைக்கும் ஒரே கொடி -சிங்கக்கொடி தான் பறக்கிறது என்று கூறிப் பெருமைப்பட்ட சிங்களத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையே இது.

வடக்கில் யாழப்பாணத்தில் இருந்து தெற்கே தங்காலை வரைக்கும் சிறி லங்கா சுதந்திரக் கட்சி தான் ஆட்சி செய்கிறது என்ற சிங்களத் தேசியத்தை உசுப்பிவிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறது மகிந்தவின் அரசு. சிங்களத் தேசியத்தின் இந்த இரகசியச் சதிக்கு தமிழ் அரசியல் சக்திகள், ஊடகங்கள் பலவும் பலியாகிக் கொண்டிருப்பது தான் வேதனையான விடயம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகப் பலமமாக இருக்கும் வரைக்கும் அவர்களோடு இருந்து - அவர்களின் பின்னணியில் இயங்கிய இந்தச் சக்திகள் இப்போது சிங்களத் தேசியத்துக்கு வால் பிடிக்க முற்படுவது தான் வேடிக்கை.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவசரகாலச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்திருக்கிறார். காரணம் கேட்டால், இடம்பெயர்ந்த வன்னி மக்களை குடியமர்த்த அரசின் உதவி தேவையாம். அதற்காகவே எதிர்க்கவில்லை என்று சப்பை நியாயம் சொல்கிறார்.

அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தித் தான் இலங்கை அரசு மூன்று இலட்சம் மக்களையும் ஆடு, மாடுகளைப் பட்டியில் அடைப்பது போன்று - முகாம்களுக்குள் அடைத்து வைத்திருக்கிறது என்பது அவருக்குத் தெரியாதா என்ன?

இதே அவசரகாலச் சட்டம் தான் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வுக்குத் தடையாக இருக்கிறதென்று புரியாதா என்ன?

ஆனாலும் இப்படியொரு நியாயத்தைச் சொல்லித் தப்பிக்க முனைகிறார் என்றால் தமிழ்த் தேசியம் தூங்கிக் கொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா அவர்?

அதைவிட மோசமானது - தந்தை செல்வாவும், பிரபாகரனும் தமிழ்த் தேசியத்துக்காகப் போராடி தோற்றுப் போனவர்களாம் - இனியும் தமிழ்த் தேசியம் பேசிப் பயனில்லை என்று கொச்சைப் படுத்துகிறார்.

அரசுக்குக் கால் பிடிப்பதும் வால் பிடிப்பதும் தான் தமிழ் மக்களைப் பாதுகாக்கும் என்று புதிய வழிகாட்ட முனையும் இவர்களெல்லாம் எப்படித் தலையெடுத்தார்கள் என்று ஒருமுறை திரும்பிப் பார்க்கட்டும்.

அதைவிட தமிழ்த் தேசியத்துக்காகப் போராடி மடிந்தவர்கள் எல்லாம் மடையர்கள் போன்று குறிப்பிடும் அவர் ஒரு முறை சிங்களத் தேசியத்துக்கு கால் பிடித்து விட்டவர்களால் என்னத்தைக் கிழிக்க முடிந்ததென்று ஒரு கணம் நினைத்துப் பார்க்கட்டும்.

சிங்களத்துக்குக் கால் பிடிப்பவர்களால் - ஒரே ஒரு நிமிடம் மட்டும்,  அகதி முகாம்களுக்குள் அடைபட்டுக் கிடக்கும் மக்களை வெளியே கொண்டு வந்து விட முடியுமா?

அதையே செய்ய முடியாதவர்கள் - தமிழ்த் தேசியத்தைக் கொச்சைப் படுத்திக் கொண்டு –அரசுக்குப் பின்னால் நிற்கப் போகிறார்களாம். கூரையில் ஏறியே கோழி பிடிக்க முடியாதவர்கள் வானத்தில் ஏறி வைகுண்டம் போகப் போகிறார்களாம். இவர்களையெல்லாம் தமிழ்த் தேசியத்தின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்ததற்காக யாரை நோக முடியும்?

சிங்களத் தேசியத்துக்குள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்வாங்கிக் கொண்டு தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கின்ற சதி இப்போது உச்சகட்டமாக நடந்து கொண்டிருக்கிறது.

வடக்கில் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கைகள் தெற்கில் வலுப்பெறுகின்றன. கலப்புக் கிராமங்களை உருவாக்க வேண்டும் என்று கேட்கிறார்கள் சிங்களத்தின் காவலர்கள்.

வடக்கில் மீள்குடியமர்வுக்கு முன்னதாக அங்கு சிங்கள மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்களை கண்டறியும் புதைபொருள் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிறார்கள். இவையெல்லாம் வடக்கும் கிழக்கும் தமிழ் மக்களின் மரபுவழித் தாயகம் அல்ல என்று காண்பிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளே.

முப்பதாண்டுப் போரின் பின்பாதிக் காலத்தில் தமிழ் மக்களின் பலம்மிக்க தலைமைச் சக்தியாக விளங்கும் விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால் தமிழ்த் தேசியத்தை வரலாற்று ரீதியாக அழிக்கின்ற முயற்சிகள் எதுவும் கைகூடவில்லை.

இந்த இடைவெளியை நிரப்பி சிங்களத் தேசியமே இலங்கைத்தீவு முழுவதும் ஆதிக்கம் செலுத்தியது என்று உறுதி செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. இந்தக் கட்டத்தில் தமிழ்த் தேசியம் சற்று உறங்கிப் போனாலும் அதை விழுங்கி ஏப்பம் விட்டுக் கொண்டு போய்விடும் சிங்களம்.

இதனைத் தடுப்பதற்கு தமிழ் மக்கள் அனைவரும் ஒரே குரலாக ஒலிப்பது அவசியம். எம்மிடையே உள்ள வேறுபாடுகள் பலவீனங்களைக் களைந்து ஒரே குரலாக ஒலிப்பது தான் தமிழ்த் தேசியத்தை காப்பாற்ற தமிழீழத் தேசியத்துக்காகப் போராடிய, களமாடிய மாவீர்களின் கனவுக்கு கொடுக்கும் மரியாதையாக அமையும்.

நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில்  எறிவதுண்டோ …..?

நன்றி: நிலவரம்.


சத்தமின்றி நடைபெறும் பொருளாதார யுத்தம் - சி.இதயச்சந்திரன்.

image

வன்னியில் யுத்தம் தீவிரமடைந்திருந்த இறுதி காலகட்டத்தில் "சுடர் ஒளி' ஆசிரியர் நடேசபிள்ளை வித்தியாதரன் கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டாரா இல்லையேல் கைது செய்யப்பட்டு கடத்தப்பட்டாராவென பெரும் விவாதங்கள் நிகழ்ந்தன.

மே மாதம் 18 ஆம் திகதிக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கொல்லப்பட்டாரா அல்லது உயிருடன் உள்ளாராவென்கிற அலசல்களும் ஆய்வுகளும் ஊடகப் பரப்பை ஆக்கிரமித்திருந்தன. இன்னமும் இந்த விவாதம் முற்றுப் பெறாமல் நீடிக்கையில் புதிய சர்ச்சையொன்றும் இம்மாத ஆரம்பத்தில் வெளிக்கிளம்பியுள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலராக பிரகடனப்படுத்தப்பட்ட கே.பி. என்றழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதனின் கைது குறித்து வெளிவரும் ஊகங்களும் வதந்திகளும் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் முக்கியமான பேசுபொருளாகவுள்ளன.

ஏற்கனவே உராய்வு நிலையில் இருக்கும் இணையத்தள மின்னஞ்சல் மோதல்கள், கே.பியின் கைது, கடத்தலுக்குப் பின்னர் தீவிரமாகியுள்ளதென்றே கருத வேண்டும்.

கே.பியை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களின் பட்டியலில், ஊடகவியலாளர்களின் பெயர்களையும் இணைத்து வெளிவந்த ஆங்கிலக் கட்டுரையொன்று, தமிழாக்கமும் செய்யப்பட்டது.

இத்தகைய ஆரவாரங்களில் தமது ஐம்புலன்களையும் செலுத்தி மக்கள் சக்தியினை மழுங்கடிக்கும் காரியங்களில் காலத்தை செலவிடும் அதேவேளை, தாயகத்தில் நடைபெறும் திட்டமிட்ட அவலங்களை இனங்காண இச்சக்திகள் மறுப்பதாக உணரப்படுகிறது.

நிலத்தை இழந்து, வெளிச்சத்தை உள்வாங்கிக் கொள்ளும், கண்ணை விற்று சித்திரம் பெறும் நிலையினை திருமலையில் காணக் கூடியதாகவிருக்கிறது.

இம்மாத இறுதிக்குள் இந்திய  இலங்கை கூட்டு முதலீட்டு ஒப்பந்தமொன்று, சம்பூர் அனல் மின் நிலையத்திற்கும் கடலடி மின் கம்பி இணைப்பிற்கும் ஆக  கைச்சாத்திடப்படப் போவதாக உறுதியான தகவல்கள் வெளிவருகின்றன.

யுத்தம் முடிவடையும் வரை, "பொறுத்திருந்து பார்த்த' இந்திய தந்திரோபாய நகர்வு, இப்போது இயங்க ஆரம்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் காங்கேசன்துறை துறைமுகம் மீள்கட்டுமான மற்றும் நிர்வாகப் பொறுப்பினை இந்தியா கையேற்கவிருப்பதாகவும் அதன் முதல் நகர்வாக, பலாலி விமான ஓடு பாதை புனரமைப்பிற்கு 117 மில்லியன் ரூபாய்களை இந்திய தூதுவராலயம் இலங்கைக்கு அண்மையில் வழங்கிய விவகாரமும் குறிப்பிடத்தக்கது.

அத்தோடு காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையினை இந்தியக் கம்பனியிடம் தாரை வார்க்கும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.

தொழிற்சாலையில் உற்பத்தியாகும் சீமெந்தினை ஏ9 பாதையூடாகவும் (புகையிரதம் மூலம்) அல்லது துறைமுகம் ஊடாகவும் வெளியே கொண்டு வரலாம்.

ஆனாலும் சீமெந்து தொழிற்சாலை மற்றும் அனல் மின் நிலையத்திற்கு தேவையான எரிபொருட்களை (நிலக்கரி உட்பட) இறக்குவதற்கு துறைமுகங்களின் அவசியம் உணரப்படுகிறது.

இதனடிப்படையில் காங்கேசன்துறை துறைமுகத்தின் நிர்வாகப் பொறுப்பினை இந்தியா கையேற்பதும், இயற்கைத் துறைமுகமான திருகோணமலையில் அனல் மின் நிலையம் அமைப்பதும் வழங்கல் பாதையை இலகுவாக்கும்.

சீனன் குடாவில் பிரித்தானியரால் இரண்டாம் உலக யுத்த காலத்தில் நிர்மாணிக்கப்பட்டு, 2003ஆம் ஆண்டு இந்தியன் எரிசக்தி கூட்டுத்தாபனத்தால் சுவீகரிக்கப்பட்ட 99 நிலத்தடி எண்ணெய் சேமிப்புக் கிணறுகளை பராமரிப்பதற்கும் இந்த திருமலைத் துறைமுகம் மிகவும் அத்தியாவசியமானதொன்றுதான்.

திருமலையில் அனல்மின் நிலையம் அமைக்கும் திட்டம், மே 2002 இல் இந்தியாவால் முன்வைக்கப்பட்டது. இதற்கான இடத்தெரிவு, சீனன்குடா விமான நிலையத்திற்கு அருகிலும், உயர் பாதுகாப்பு வலயத்தின் உள்ளேயும் அமைந்திருந்தது.

ஆனாலும் நிலக்கரி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இந்த அனல் மின் நிலையத்தின் புகைக்கூடு (இடடிட்ணஞுதூ) மிக உயரமாக அமைவதால் சீனன் குடா தளத்தில் ஏறி இறங்கும் விமானங்களுக்கு இப் புகைக்கூடு இடையூறாக அமையுமென்பதை வலியுறுத்தி, அந்த இடத்தெரிவு அரசால் நிராகரிக்கப்பட்டது.

இந்த நிராகரிப்பிற்கான உள் நோக்கம், பேரினவாதச் சிந்தனையின் அடிப்படையைக் கொண்டிருப்பதாக பல அரசியல் விமர்சகர்கள் அன்று தமது கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

அதாவது சீனன்குடாவின் தென்மேற்கில் அமைந்துள்ள சிங்களவர்கள் அதிகமாக வாழும் கந்தளாய் பிரதேசம், இவ் அனல்மின் நிலையம் வெளித் தள்ளும் கரிப்புகை மற்றும் நச்சுத் துகள்களாய் மாசு படுத்தப்படும் அபாயத்தை உணர் ந்தே இந்த இடம் தவிர்க்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

செப்டெம்பர் 2006 இல் யுத்தத்தினால் சம்பூர் பிரதேசத்தை ஒட்டிய 30 கிராமங்களில் வாழ்ந்த 30,000 தமிழ் மக்கள் வாகரையை நோக்கி விரட்டப்பட்டதால், அனல்மின் நிலையம் அமைப்பதற்கு உகந்த இடமாக சம்பூரை அரசு தெரிவு செய்தது.

மூதூர் கிழக்கிலுள்ள சம்பூர், சேனையூர், கடற்கரைச்சேனை, இலக்கந்தை, சூடைக்குடா, கூனித்தீவு, பாட்டாளிபுரம் ஆகியவை உயர் பாதுகாப்பு வலயமாக பின்னர் அரசால் அறிவிக்கப்பட்ட நிகழ்விற்கும் அனல்மின் நிலைய இடத் தெரிவிற்கும் பலத்த தொடர்பு உண்டென்பதை இன்று காணக் கூடியதாகவிருக்கின்றது.

அதேவேளை இந்த அலை மின் நிலைய நிர்மாணிப்பினால் சம்பூரை அண்டிய கொட்டியாரக் கடற்கரையெங்கும் நிலக்கரியை சேமித்து வைக்கும் தளங்களும் உருவாக்கப்படும். இத்திட்டத்திற்கு ஏறத்தாழ 500 ஏக்கர் மக்கள் குடியிருப்பு நிலங்கள் சுவீகரிக்கப்படலாம். அத்தோடு சம்பூரிலும் சிறிய இறங்குதுறையொன்று கட்டப்படும்.

திட்டமிட்ட குடியேற்றங்களிலிருந்து தப்பி, இற்றைவரை தமது பூர்வீக நிலங்களில் வாழ்ந்து வரும் தமிழ்மக்கள், இந்த அனல்மின் நிலையம் வெளியே கக்கும் நிலக்கரித் துகள்களாலும் நச்சு வாயுக்களாலும் பாதிப்படைவார்கள்.

இதற்கு எதிராக மக்கள் முன்னெடுத்த போராட்டங்களையும் அரசு செவிமடுக்கவில்லை. ஏற்கனவே இதே போன்று மக்களின் எதிர்ப்புணர்வுகளையும் பொருட்படுத்தாது, சீன உதவியில் புத்தளம் நுரைச்சோலையில் அனல் மின் நிலையமொன்று நிர்மாணிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தால் சூழலை மாசுபடுத்தி, வெளியேறும் கழிவுகள் கடல்வளத்தை அழித்து, காபனீரொட்சைட் வாயுவினை காற்று வெளியெங்கும் பரப்பி, ஓசோனில் ஓட்டையும் போடப்படலாம்.

பணம் படைத்தோர் அணுமின் நிலையத்தையும், வசதி குறைந்தோர் அனல் மின் நிலையத்தை ஏற்றுக் கொள்ளும் ஏகாதிபத்திய நிர்ப்பந்தங்கள், சந்தைப் பொருளாதாரத்தால் தீர்மானிக்கப்படுகின்றன.

உலகளவில் நிலக்கரியின் பயன்பாடு குறைவடைந்து வரும் நிலையில் வறிய நாடுகளின் தலையில் பொருளாதார உதவி என்கிற போர்வையில் இவ் எரிசக்தி மூலப் பொருட்களை கட்டிவிடும் நாடகங்களையே நாம் இப்போது பார்க்கிறோம்.

இம் மின்நிலையங்களின், பயன்பாட்டு ஆயுட்காலம் ஏறத்தாழ 60 வருடங்களே. அதற்கு முன்பாக முதலீட்டுப் பணத்தினையும் இலாபத்தினையும் இப்பன்னாட்டு கம்பனிகள் சுரண்டி விடுவார்கள். மக்களிடம் எஞ்சியிருக் கப்போவது அழிவுற்ற நிலமும், அசுத்தமான காற்றலைகளுமே.

இந்த இந்திய நிறுவனமானது, உலக சக்தி உற்பத்தியில் ஆறாவது இடத்தை வகிக்கிறது. சந்தை முதலீட்டுத் திரட்சி ஏறத்தாழ 25 பில்லியன் அமெரிக்க டொலராக கணிப்பிடப்படுகிறது. இன்னமும் 60 வருடங்களில் இது நான்கு மடங்காக வளர்ச்சியுறும்.

இதன் பெறுமதியானது அண்மையில் சர்வதேச நாணய சபை இலங்கைக்கு வழங்கிய கடனைப் போன்று பத்து மடங்கானது.

நன்றி - வீரகேசரி வாரவெளியீடு


Wednesday, September 2, 2009

எம் தலைவன் எதிரிக்கு நெருப்பாய், புயல்காற்றாய் தான் இருப்பார் – ஜெகத் கஸ்பர்.

ltte leaderமே-17 வரை நந்திக் கடற்கரையில் நின்ற சிவரூபன் தொடர்கிறேன்…

எங்கும் பிணக்காடாய் கிடந்த வட்டுவாகல்-முள்ளி வாய்க்கால் பிரதான வீதியில் தமிழர் உடலங்களில் என் கால்கள் பட்டுவிடக்கூடாதென்ற கவனத்தோடும், மனதின் பாரங்களோடும் நகர்ந்து கொண்டிருந்தேன்.

ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் வீதியின் இருபுறமும் துப்பாக்கிகளை மக்களை நோக்கி நீட்டியவாறு சிங்களக் கைக்கூலிகள் நின்றிருந்தனர். கடைசியாக புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியை விட்டு வெளியே வந்து விட்டோமென்பது புரிந்தது. சுதந்திர வாழ்க்கை முடிந்து போய்விட்ட உணர்வு உடல் முழுதும் பரவியது. களைத்துப் போயிருந்த மனது மேலும் களைத்தது.

வட்டுவாகல் பாலம் பக்கமாய் நடந்தேன். பாலத்தின் இருபுறமுமாய் விரிந்து கிடந்த நீரேரியை பார்த்தேன். தண்ணீர் பரப்பு தெரியவில்லை. எங்கு பார்க்கினும் தமிழரின் பிணங்கள் மிதந்து கொண்டிருந்தன. அனைத்து உடல்களுமே ஆடையின்றிக் கிடந்தன. அநேகம்பேர் எம் குலப் பெண்கள். கொடுமை யை பதிவு செய்யக்கூட என் கண்களால் பார்க்க முடியவில்லை. எனினும் அந்த நீரில் மிதக்கும் பிணங்களூடே என் சொந்த உறவுகள் இருக்கக்கூடுமென்பதால் நின்று பார்த்தேன். பல உடல்களில் நகக்கீறல்களும், கடித்துக் குதறிய காயங்களும் தெரிந்தன.

ஆண்கள் பெரும்பாலோரது உடல்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தன. சுடப்பட்டும், அடித்தும், வெட்டியும் கொல்லப் பட்டிருக்கிறார்களென்பது தெரிந்தது. கரையொதுங்கிய உடல்களில் பசித்த தெரு நாய்கள் பற்கள் பதித்த காட்சியை காணப் பொறுக்கவில்லை. பாலத்தைக் கடந்து அங்கிருந்து இராணுவ முகாம் வாயிலருகே நடந்தோம். “”புலி தனியா பிரிஞ்சு வாங்கோ… பொது மக்கள் தனியா பிரிஞ்சு போங்கோ…” என்று கொச்சைத் தமிழில் சிங்களன் அறிவித்துக் கொண்டிருந்தான். அச்சத்தின் மின்னல் பிடரியில் பாய்ந்தது.

அருகிலிருந்த மக்கள் விரக்தியோடு முணுமுணுத்தார்கள். “”இனி அவன் ஆட்சிதானே… இதுக்குப் பயந்துதானே புலியளோட ஓடி வந்தம்… பல நாட்கள் அணு அணுவாய் சாவதிலும் பார்க்க புலியளோட அங்க நின்டு கௌரவமா செத்திருக்கலாம்…” என்றெல்லாம் பேசிக் கொண்டே பிரிந்தார்கள். என் மனைவி, பிள்ளை உறவுகள் எப்படியேனும் உயிர் தப்பியிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் நானும் நடந்து கொண்டிருந்தேன்.

இரண்டு பக்க கம்பி வேலிக்கு நடுவே மூன்று லட்சம் மக்கள் ஊர்ந்தோம். கம்பி வேலிக்கு மறுபுறத்தில் இருந்து நாக்கு நனைக்க ஒரு முடறு தண்ணீர் கொடுத் தார்கள். ஐம்பதாயிரம் பேருக்கு எனச் சொல்லப்பட்ட கம்பிவேலி முகாமுக்குள் அத்தனை பேரையும் அடைத் தார்கள். சுற்றிலும் சுடும் நிலையில் ராணுவத்தினர். ஒரு சிலர் தமிழ் கதைத்தார்கள். அவர்களில் ஒருவ னிடம் மெல்லச் சென்று கேட்டேன். “என் உறவுகளைக் காணவில்லை, தேடிப் பார்க்கலாமா?’ என்று.

“”கம்பி வேலிக்குள் மட்டும் தேடிப் பாருங்கள். வெளியே போற வங்களை சுடச் சொல்லி உத்தரவு” என்றான் அவன். தொடர்ந்து பேசிய அவன், “”இவ்வளவு பேரும் எங்க இருந்தீங்கள்… ஐம்பதாயிரம் பேர் என்றுதானே நினைத் தோம்” என்று வியப்பாகக் கேட்டான். நான் சொன்னேன், “”ஐம்பதாயிரம் பேர் வரை செத்துவிட்டார்கள். நாங்கள் பங்கரில் இருந்து தப்பி வாறம்” என்றேன். “பங்கருக்குள் இத்தனை நாள் எப்படி இருந்தீர்கள்?’ என்று மேலும் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான். அவனோடு பேசிக்கொண்டிருந்தபோது வேறொரு ராணுவக் கூட்டத்தினர் பொதியுணவு கொண்டு வந்தார்கள்.

இருந்தது மூன்று லட்சம் மக்கள். அவர்கள் கொண்டு வந்ததோ சுமார் 3000 உணவுப் பொதிகள். எப்படி பங்கீடு செய்வதென்று தெரியாமல் நாய்களுக்கு எலும்புத் துண்டுகளை வீசுவது போல் கம்பிவேலிக்கு வெளியே நின்று கொண்டு மக்கள் கூட்டத்தினர் மீது கேவலச் சிரிப்புடன் வீசி எறிந்தார்கள். ஏதோ எறிபந்து விளையாடுவதுபோல் மேலும் மேலும் எள்ளி நகையாடிச் சிரித்துக்கொண்டே எறிந்தார்கள்.

தமிழரின் இயலாமை அவமானக் களத்தில் அவர்களின் அரை மணி நேர விளையாட்டு முடிந்தபோது, சில வயது போனவர்களும் எட்டுப் பத்து சிறுவர்களும் நெரிசலில் சிக்கி மூச்சடங்கிப் பிணங்களாய் கிடந்தார்கள். கைக்குழந்தையுடன் உணவுப் பொட்டலம் கிடைக்காதா எனச்சென்ற தாய் மூச்சுத் திணறி இறந்து போன குழந்தையுடன் திரும்பியதும், “பசிக்குது, ஒரு பார்சல் குடுங்கோ’ என்று கூவிக் கேட்டுக்கொண்டே நெரிசலில் குரலடங்கிப் போன சிறுவர்களும், தண்ணீராவது தாருங்கோ எனக்கேட்டு மிதியுண்டு மடிந்த முதியவரும் அன்றைய நாள் எமது வரலாறு சந்தித்த பேரவலத்தின் பதிவு செய்யப்படாத சாட்சிகள்.

வாகனத்தில் ஏற்றுவதற்காக கம்பி வேலிக்குள்ளிருந்து வரிசை பிடிக்கச் சொன்னார்கள். அதற்குள்ளாகவே காட்டிக் கொடுக்கும் சிலரை சிங்களம் விலைக்கு வாங்கியிருந்தது. அந்தக் கேவலப் பிறவிகள் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்காத, பக்கத்து வீட்டுக்காரர்களையெல்லாம் கூட “புலிகள்’ என்று கை நீட்டிக் காட்ட ராணுவத் தினர் தனியாக அவர்களைப் பிடித்துச் சென்றனர். தமிழன் வீழ்ந்ததும் வீழ்வதும் காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களாலென்பது மீண்டும் ஒருமுறை வேதனை யோடு அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.

எம் தேசியத் தலைவர் அடிக்கடி இரண்டு விஷயங்களைச் சொல்வார்.

ஒன்று,

“நேர்மையானவர்கள்போல நடிப்பவர்களைவிட நேர்மையானவர்களாக இருப்பவர்களைத்தான் எனக்குப் பிடிக்கும்” என்பது.

இன்னொன்று “”எதிரிகளைவிட துரோகிகளே ஆபத்தானவர்கள்” என்றும் அவ்வப்போது நினைவுபடுத்துவார்.

நடைமுறை ஒழுங்குகளில் தமிழ் சமூகம் மீது தலைவர் காட்டிய இறுக்கத்திற்கு காரணமும் இந்த இனத்தின் மோசமான துரோகக் குணங்களை அவர் உள்ளார அறிந்திருந்த காரணத்தினால்தான்.

அந்த இடத்தில், அந்த கணத்தில் இப்போது சிங்கள ஆமிக்காரனைவிட அடை யாளம் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த எம் இனத்துக் கூலிகள்தான் அதிக அச்சத்தை தந்தார்கள்.

உடல் சோதனைக்கு ஒவ்வொருவரும் உள்ளாக்கப்பட்டோம். காட்டிக்கொடுக்கும் துரோகக் கூலிகள் நின்ற இடத்தைக் கடந்து உடல் சோதனைக்குப் போனேன். கட்டிய கோவணத்தையும் அவிழ்த்துப்போட்டு பரி சோதித்தார்கள். எனக்குள் கொலைவெறி ஆவேசம். அடக்கிக்கொண்டேன். என்றேனும் எம் தேசியத்தலைவன் மீண்டும் அழைப்பு விடுத்தால், அல்லது தகுதியானதோர் விடுதலை தலைமை எமக்குத் தெரிகின்ற நாளில் அவன் சொல்லும் திசையில் இலக்கு நோக்கி நகர இந்த உயிர் இப்போதைக்கு இருக்கவேண்டுமென்ற வைராக்கியத்தில், வந்த ஆவேசத்தையெல்லாம் அடக்கிக்கொண்டேன். இங்கே எழுத முடியாத ஒரு கெட்ட வார்த் தையை மட்டும் பம்பலாய் வாயில் முணுமுணுத் தேன். சோதனையெல்லாம் முடிந்து ஒருவழியாய் பேருந்தில் ஏறியபோது மே-18 முற்பகல் ஆகியிருந்தது. முல்லைத்தீவிலிருந்து வவுனியா செட்டிக்குளம் வதை முகாம் நோக்கி பேருந்து புறப்பட்டது.

எங்கு கொண்டுபோகிறார்களோ, என்னவெல்லாம் நடக்கப் போகிறதோவென்ற பதற்றம். பேருந்தின் பின்கதவு அடைக் கப்பட்டு முன் கதவில் இரண்டு ராணுவத்தினர் சுடும் நிலையில் கொடூர முக பாவத்தோடு எம்மை அவதானித்துக்கொண்டிருந்தனர். நூற்றுக்கணக்கான பேருந்துகள் ஓமந்தை சோதனைச் சாவடிக்குமுன் நின்று நகர்ந்தன. 2006 வரை இந்த சோதனைச் சாவடி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. புலிகள் தமது குடிவரவு (Immigration) மற்றும் சுங்கம் (Customs)பிரிவினரை உருவாக்கி முதலில் அமர்த்திய இடம் இது. இன்றோ எல்லாம் சூன்யமாகிப்போன உணர்வு உயிரைப் பிழிந்தது.

இன அழித்தலின் அடுத்த கட்டம் ஓமந்தையில் ஆரம் பித்தது. “”புலியாக இருந்தவர்கள் அனைவரும் தனியாகப் பதியவும்”, “”ஒருநாள் பயிற்சி எடுத் திருந்தாலும் தனியாகப் பதியவேண் டும்”, “”எல்லைப்படை பயிற்சி எடுத்தவர்களும் பதியவேண்டும்”, “”எங்களுக்கு எல்லாம் தெரியும், பொய் சொல்லி பதிவு செய்தால் தப்பிக்க முடியாது -மரணம்தான்” என்றெல்லாம் அறிவித்துக்கொண்டிருந்தார்கள்.

பதிவு செய்துவிட்டவர்களெல்லாம் ஒருபுறமாய் கூடி கதைத்துக்கொண்டிருந்தபோதுதான் அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் எம் தலைவன் வீரமரணம் செய்துவிட்டான் என்ற செய்தியைக் காட்டினார்கள். என் சுவாசம் நின்றது. இதய நாடிகள் ஒடுங்கின. என்னையு மறியாது கண்களில் நீர். பின்னோக்கி நினைவுகள் ஓடின. 1989-ம் ஆண்டு என்று நினைக்கிறேன்.

இந்தியப்படைகள் எம் தலைவனை சுற்றி வளைத்து “சதுரங்கம் 1,2,3 (Operation Checkmate) என பெயரிட்டு நின்றபோது மணலாற்றுக் காட்டில் நிலை தடுமாறாது, அருகில் போராளிகள் கொள்கலன்களில் உயர்ரக பெட்ரோல் சுமந்துகொண்டே சண்டையிட்ட அந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. “உயிரற்ற என் உடலோ, சாம்பலோகூட அந்நியப் படைகளிடம் கிடைக்கக்கூடாது’ என்று உடன்நின்ற போராளிகளுக்கு உத்தரவிட்டுத்தான் சண்டை புரிந்துகொண்டிருந்தார் எம் தலைவன்.

போர்க்களத்தில் தன்னையே கொடையாக்கும் அக்கினியாய் நின்றுகொண்டுதான் அன்று எம்மை வழிநடத்தினார் அவர். உன்னிப்பாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட உடலையும் தலையையும் பார்த்தேன். நிச்சயமாக முகமும் தலையும் எம் தலைவனுடையதல்ல என்பது தெரிந்தது.

முற்றுகை வளையத்திற்குள் சிக்கியிருந்தாலும்கூட எம் தலைவன் எதிரிக்கு நெருப்பாய், புயல்காற்றாய் தான் இருப்பார்.


பிணங்களே உயிர்த்தெழுங்கள்…

முள்ளிவாய்க்காலில் பிணமான ஆயிரமாயிரம் பேரோடு பிணங்களான புலம் பெயர் தமிழர்களே உயிர்த்தெழுந்திடுங்கள். இன்னும் எம் உரிமைகள் கிடைக்கவில்லை. நீங்கள் வீதியில் இறங்கி போராடிய அந்த போராட்டத்தின் இலக்கை நாம் இன்னும் அடையவில்லை. பாராம் என்று நீங்கள் சலித்து விட்டால் மீண்டும் மீண்டும் நாங்கள் அடக்கப்ட்டுக்கொண்டிருப்போம்.

எம் இனத்தில் குரல்கள் அடக்கப்பட்டுள்ளது. அதன் நியாயபூர்வமான கோரிக்கைகள் மறுதலிக்கப்படுகின்றது. அது உங்கள் எல்லோருக்கும் தெரிந்த போதும் அது பற்றிய அக்கறையை காட்ட நீங்கள் யாரும் தயாராய் இல்லை என்பது வேதனையான விடயமாகும்.

ஆயுதப்போராட்டத்தில் முடிவு எம் ஈழப்போரின் முடிவு அல்ல. நாம் தொடர்ந்து நகரவேண்டும், எம் கனவுகள், எம் தேச மக்களின் சோகங்கள் எல்லாம் களைந்து எமக்கான தேசத்தை அடைய வேண்டும் என்பதில் ஒவ்வொரு தமிழனும் தெளிவாயும் அதே நேரம் அதற்காய் அந்த இலக்கை அடைய தம்மை அர்ப்பணித்து பணியாற்ற தயராய் இருக்க வேண்டும்.

வீதிகளில் கொடிகளை கொண்டு விரைந்து வந்து நின்ற போது தமிழனின் ஒற்றுமை பற்றி பேசிய இந்த ஊடகங்கள், இன்று எம்மை பற்றி குறைந்த பட்ச செய்திகளை கூட கொண்டுவருவதில்லை. போர் இல்லாதவிடத்து தமிழன் என்பவனின் அடையாளம் அழிக்கப்பட்டிருக்கும்  ஆனால் இன்று அந்த விடுதலைப்போர் பின்னடைவைச் சந்தித்துள்ள இந்த வேளை நாம் அந்த இடத்தை நிரப்ப வேண்டும். கடந்த மூன்று தசாப்தங்களாக தம்மை அhப்;பணித்து மூன்று ஒரு சந்ததி போராடி அதன் இலக்கை அடையாது பின்னடைவைச் சந்தித்திருக்கின்றது. முப்பதாயிரத்துக்கு அதிகமான இளைஞர்கள் யுவதிகள் தங்கள் உயிர்களை கொடுத்து சென்றுள்ளனர். இன்னும் லட்சக்கணக்கான மக்கள் இந்த போரின் போது தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். அதுமட்டுமன்றி, கோடிக்கணக்கான சொத்துக்களை நாம் இழந்துள்ளோம்.

ஊரிழந்து, சொந்த நாடிழந்து சிங்களத்தின் திட்டமிட்ட வல்வளைப்பால் நாங்கள் அகதியாக அடுத்தவன் நாடுகளின் வாழ்கின்றோம். இந்த வாழ்வு எமக்கு இனிக்கின்றது. ஆனால் சொந்த மண்ணில் அகதியாய் சிங்களவன் காவலுக்குள் எந்த நேரம் என்ன நடக்கும் என்ற அச்சத்தில் உறைந்து கிடக்கும் லட்சக்கணக்கான மக்களை பற்றி கவலை இன்றி எம்மால் வாழமுடியுமா?

அவர்கள் எம் உறவுகள் என்றில்லை என்று சொல்லி ஒதுக்கிட முடியுமா? புலத்தில் அமிழ்த்தப்பட்ட போராட்டங்கள் மீண்டும் மீட்சி பெறவேண்டும்.

உறங்கு நிலையில் இருக்கும் இளையோர் அமைப்புக்கள் புலம் எங்கும் சிலருக்கும், சில அமைப்புக்களுக்கும் பின்னால் அணிதிரள்வதை விடுத்து எமது மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இளையோர் அமைப்பு முள்ளிவாய்க்காலின் அடுத்த நாளே செயல் இழந்து கிடப்பது வேதனை!

தலைவர் இளையோரை நம்பி ஒப்படைந்த போராட்டம் சிலரின் பதவி பசியால் வாடி வதங்கி அந்த இளைஞர்களின் உணர்வுகள் முடக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இளையோரை நீங்கள் அடுத்த கட்ட தலைவர்கள், உங்களுக்குள் நிச்சயமாக பதவிச் சண்டைகள் இல்லை. சிலரின் இந்த சண்டைக்குள் நீங்கள் பலிக்கடாவாக்கப்படுகின்றீர்கள்!

எமது இனத்தின் ஒற்றுமையை வளர்க்க வேண்டும் என்பதற்காகவே தலைவரின் சிந்தனையில் உதித்தது இளையோர் அமைப்பு!

அந்த அமைப்பு இன்று சிலரின் தலையாட்டு பொம்மையாக செயற்ப்படுவது வருந்தத்தக்கது. இந்நிலை மாற்றம் பெற்று இளையோர் அமைப்புக்கள், மாணவர் அமைப்புக்கள், இன்னும் இதர இளையோர் சம்பந்தமான கழகங்கள் மக்களை அணிதிரட்டி போராட்டங்களை முன்னேடுக்க வேண்டும். அகதி முகாம்களுக்குள் முடங்கி கிடக்கும் உறவுகளை மனதில் வையுங்கள்! இன்னும் இன உணர்வுகளை கொச்சைப்படுத்தி சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்குள் உங்கள் உன்னத அமைப்பை அடகு வைக்காதீர்கள். பிணங்களாய் இருக்கும் அவர்களையும் உயிர்ப்பியுங்கள். நீங்களும் உயிர்த்தெழுங்;கள். முரணித்து போன எம் ஆயுத வழி போராட்டங்களோடு நீங்களும் பிணங்களாவதை விடுத்து அடுத்த கட்டம் நோக்கிய நகர்வை இளையோர் நீங்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் விடை பெறுகின்றேன்.

கனடாவிலிருந்து ஆதவன்