Tuesday, July 28, 2009

தமிழ்நாட்டுத் தமிழனுக்கு... – நிர்மலா.

அன்று

வணிகக் கப்பல்கள்

வரிசையாய் அணிவகுத்த நின்ற

நம் தென்கடலில்,

இன்று-ltte-tamilan-eelam

நச்சு உலைகள்

நங்கூரமிட நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றன

நீ,

தாராளமாய்த் தாரைவார்த்துக் கொடுத்தத்

தமிழ் மண்ணில்

உன்னையே வேவுபார்க்க

உளவுக்கோபுரம் உயர்ந்து கொண்டிருக்கிறது

இங்கிருந்து

அமைதிப்படை புறப்பட்ட அன்றே

நம் கடல் பகுதியின்

அமைதி குலைக்கப்பட

அங்கீகாரம் வழங்கப்பட்டது.

உனக்கு ஏனோ

புரியாமல் போயிற்று

ஆன்றோர் அறிவுரை

உனக்கு

உறைக்காமல் போனது,

அன்று மட்டுமல்ல-

இன்று வரையிலும் தான்!

தமிழா!

ஈழ இளங்குருத்துக்களின்

குருதிக் கறை படிந்த

"கை"க்கும்

மானங்கெட்டு,

பிச்சைப் பாத்திரத்தினுள் கவிழ்ந்து

உதிக்க மறந்த "சூரியனு"க்கும்

நீ போட்டாயே ஓட்டு,

அவை திரும்பிவரும்...

பகைப்புலங்களின் ஆயுத வீச்சுகளாய்!

செய்தித்தாள்களில் மட்டுமே

நீ -

வாசித்தறிந்த வடபுலத்து யுத்தங்கள்

இன்று நம்

வாசற்கதவைத் தட்டிக் கொண்டிருக்கின்றன.

விண்மீன்களைக் கண்டால் கூட

வீறிட்டு அலறும்

ஈழக் குழந்தைகளின்

அவல அனுபவங்கள்,

நமது தலைமுறைகளுக்கும்

தயாராகிக் கொண்டிருக்கின்றன

நீயோ-

ஒலிம்பிக் விழாவில் சிதறும்

சீனப் பட்டாசுகளைப் பார்த்து

வாய்ப்பிளந்து கொண்டிருக்கிறாய்

ஈழத்திரு மண்ணில் -

பிணம் புதைக்கத் தோண்டப்பட்ட

குழிகளில் கூட

குருதி கொப்பளித்துக்கொண்டிருந்த

அக்கொடூரப் பொழுதுகளில்

நீ

"கவர்"களின் கனத்தக்

கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தாயே...

நினைவில் கொள்!

ஈராயிரம் ஆண்டுகளின் சாரம் ஊறி,

ஆறு பத்தாண்டுகளில் வைரம் ஏறி

உயிர் ஊற்றி வளர்த்திட்ட

ஈழமரம் -

வெட்டப் படுவதற்குக்

கோடாலி வார்க்கப்பட்டது

உனது உலைகளில்!

வெட்டப்பட்ட மரம்

நிச்சயமாய் துளிர்க்கும்;

ஆயிரமாயிரம் -

துவக்குகளாய் உயிர்க்கும்!

இங்கு நீயோ,

உன் வேர்களை வெட்டிக்கொண்டிருக்கிறாய்

எச்சரிக்கை!

நன்றி: http://www.thenseide.com


0 comments:

Post a Comment