Wednesday, May 27, 2009

சாத்தான் படை: Indian Peace Killing Forces (IPKF)

அன்பான உறவுகளே,

தற்போதைய இலங்கையின் போர்ச்சூழல் பற்றி நீங்கள் அறிவீர்கள். திட்டமிட்ட வகையில் நடத்தப்படும் இனவழிப்பு / இனக்கருவறுப்புப் போரில் - ஒவ்வொரு நாளும் - குழந்தைகள், பெண்கள், முதியோர் என ஆயுதம் ஏந்தாத அப்பாவிப் பொதுமக்கள் - எந்தவிதப் பாகுபாடுமின்றி - கொத்துக்கொத்தாக கொத்தணிக் குண்டுகளாலும், பொஸ்பரஸ் அடங்கிய எரிகுண்டுகளாலும் படுகொலை செய்யப்படுகிறார்கள். "பாதுகாப்பு வலயம்" என அறிவித்து - அங்கும் மக்களை அரக்கத்தனமாகக் கொல்கிறார்கள். சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரச்சொல்லி - ஆண்கள் பெண்களென வகைபிரித்து - பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிப் பின் கொன்று புதைக்கிறார்கள். புதிய ஆண்டும் அவர்களுக்கு கொலைக்களமாகத்தான் பிறந்தது. இந்த ஆண்டின் இரண்டு மாத காலத்தில் மட்டும் - 1500 க்கும் அதிகமான மக்கள் சிறிலங்கா பேரினவாத அரசால் கொல்லப்பட்டுவிட்டார்கள். ஒரு இளம் சந்ததியே - ஒரு புதிய தலைமுறையே - கை, கால் இல்லாத சந்ததியாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தச் சூழலில் - இந்த இன்னல் நிறைந்த காலகட்டத்தில் - தமிழகத்திலிருந்து எழும் ஒவ்வொரு ஆதரவுக் குரலும் புலம்பெயர் மக்களாகிய எமக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறதென்பதை நீங்கள் அறீவீர்களோ தெரியாது. உங்களின் ஆதரவான ஒவ்வொரு சொல்லும் எங்கள் கண்ணீரைத் துடைக்க வல்லன. எமக்கு ஆதரவாக நீங்கள் வீதியில் இறங்கும் போதும் - உரக்கக் குரல் கொடுக்கும் போதும் - நாம் நம்பிக்கை கொள்கிறோம். சாதாரண நம்பிக்கையல்ல - சரித்திரம் படைக்கிற நம்பிக்கை.

ஆனாலும் உறவுகளே - இன்னொரு கசப்பான உண்மையையும் நாம் உங்களுக்கு சொல்ல விரும்புகிறோம். உங்கள் ஆதரவான நம்பிக்கை தரும் குரல்களுக்கும் மத்தியிலிருந்து - தமிழகத்திலிருந்து - எம்மீது வெறுப்பைக் கக்குகிற சில குரல்கள் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அவை, மீண்டும் மீண்டும் எம்மைக் காயப்படுத்துகின்றன. நாம் காயப்படுவதைப் பற்றி கவலைப்படவில்லை. அந்தக் குரல்கள் ஒட்டுமொத்தத் தமிழகத்தின் ஆதரவுக் குரலையும் பலவீனப்படுத்திவிடும் என்றே பயப்படுகிறோம். உலகத் தமிழினமே இன்று ஒன்றுபட்டு நிற்கையில் - பகைவளர்க்கும் இந்தச் சில குரல்கள் - தமிழினத்தின் விடுதலையில் கீறல்களை ஏற்படுத்திவிடக் கூடாதென்றே விரும்புகிறோம்.

ஈழத்தமிழர் பிரச்சனை/அவலம் பற்றி நீங்கள் பேசுகிற போதெல்லாம் - ராஜீவ்காந்தியின் கொலையை முன்னிறுத்தி - உங்களின் வாயை அடைக்கப் பார்க்கிறார்கள். ஈழத்தின் விடுதலை பற்றிப் பேசுகிறபோதெல்லாம் - ராஜீவ்காந்தியின் கொலையை முன்னிறுத்தி - கொச்சைப்படுத்துகிறார்கள்.

உங்களின் எழுச்சியை அவர்கள் ஒற்றை வார்த்தை கொண்டு ஒதுக்கிவிடப் பார்க்கிறார்கள். உலகத் தமிழரின் ஒற்றுமையை ஒற்றைவார்த்தையால், சாத்தியமற்றதாக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். எனவே

அன்பான உறவுகளே,

எந்தச் சூழ்நிலையிலும் நீங்கள் சோர்ந்துவிடக்கூடாது - எவருக்கு முன்னும் நீங்கள் தலைகுனியக்கூடாது - உண்மைகளை உணர்ந்துகொள்ளவேண்டும் என்கிற நோக்கோடு இந்தப் புத்தகத்தை மின்னூல் வடிவில் உங்கள் முன் வைக்கிறோம்.

ராஜீவ்காந்தியின் கொலையை யார் செய்தார்கள்? அவர் கொலை செய்யப்பட்டது சரியா பிழையா? யார் யாருக்கு அதில் பங்குள்ளது என்பது பற்றியெல்லாம் நாம் இங்கு பேச முனையவில்லை.

அவற்றை ஒருபுறம் நாம் ஒதுக்கிவைத்துவிட்டு - எங்கிருந்து எல்லாம் தொடங்கியது என்று பார்த்தால் - சிலவேளை உண்மைகள் புரியக்கூடும். அமைதிப்படை என்கிற பேரில் ஈழத்து மண்ணில் கால்வைத்த இந்திய சாத்தான் படை - எப்படியெல்லாம் ஈழத்தமிழர்களைக் கொடூரமாகக் கொலை செய்ததென்பதைப் பாருங்கள்.

ஈழத்தமிழரின் விடுதலைப் போரைச் சிதைக்க எப்படியெல்லாம் துணைநின்றார்கள் என்பதைப் பாருங்கள். மீண்டும், அதே கொடுமையையும் துரோகத்தையும் - சிங்கள அரசுக்கு உதவுவதினூடாக/சிங்கள இராணுவத்தின் பின்னாலிருந்து யுத்தத்தை நடத்துவதினூடாக - இந்தியா செய்கிறது.

இப்படியான சூழலில் நீங்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எழுப்புகிற குரலை நசுக்க ராஜீவ்காந்தியின் கொலையைத் தூக்கிப்பிடிக்கிறார்கள். இதை தொடர்ந்து கவனிக்கிற போது, ஈழத்தமிழர் பிரச்சனை தமிழகத்தில் பேசப்படக்கூடாது என்பதற்காகவும், ஈழத்தமிழர்களுக்கு தமிழகம் உதவக்கூடாது என்பதற்காகவும், ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி பேசப்படுகிறபோது ராஜீவ்காந்தி கொலை கண்ணுக்கு முன் வரவேண்டும் என்பதற்காகவும் - யாரோ திட்டமிட்டு நீண்டகால அரசியல் இலாபத்தோடு இதைச் செய்திருக்கிறார்கள் என்றே உணர முடிகிறது.

இந்திய/தமிழக நண்பர்களே, உறவுகளே, ஊடகங்களே நாம் பழையதை நினைவுபடுத்தி, எமக்குள் உள்ள உறவைக் காயப்படுத்த விரும்பவில்லை. எனினும், உண்மைகளை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்று விரும்புகிறோம். உங்களின் ஆதரவுக் குரல்கள் "ராஜீவ்காந்தியின் கொலை" என்கிற ஒற்றை வார்த்தையைக் கொண்டு அடக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே நாம் இந்தப் புத்தகத்தை உங்களுக்கு அனுப்புகிறோம். நாம் மீண்டும் மீண்டும் எல்லோராலும் ஏமாற்றப்படுகிறோம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

* அன்பான உறவுகளே, இந்தப் புத்தகம் அன்றைய இந்திய அமைதிப்படை (ஆக்கிரமிப்புப் படை) கால சம்பவங்களையும், அன்று ஊடகங்களில் வெளியான செய்திகளையும் தொகுத்து செய்யப்பட்டுள்ளது.

மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில், இன்றைய சூழல் கருதியும் தேவை கருதியும் ஈழத்திலிருந்து எடுப்பித்திருக்கிறோம். இதனை உங்களின் நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் அனுப்பி உண்மைகளை அறியச் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

--நன்றி: யாழ் இணையம்.

நன்றி: http://tamilthesiyam.blogspot.com/

பதிவிறக்கம் செய்ய…


* flash:
http://ebook.yarl.com/ipkf/

* pdf zipped:
Part 1
http://www.mediafire.com/?emj0zigyjyu

Part 2
http://www.mediafire.com/?i5tzkzyjfny

Part 3
http://www.mediafire.com/?tz1mvzdgggz

வணக்கம்,

பதிவிறக்கம் செய்ய முடியாதவர்களுக்கு, தமிழ்ப்படை (http://tamizhpadai.blogspot.com/) வலைபூவில், பாகம் பாகமாக இடுகை பதிவுகளாக பதிவு செய்யபடுகிறது. படித்து உண்மை அறிந்து உலகுக்கு சொல்லுங்கள்….

இவன், மு.இரா.


1 comments:

பிச்சைப்பாத்திரம் said...

இந்தப் புத்தகத்தை நீண்ட நாட்களாக தேடிக் கொண்டிருந்தேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Post a Comment